தத்தாத்திரேயர் சரித்திரம் - பாகம் -2



பாகம் -2
தத்தாத்திரேயர் ஆசி பெற்ற காத்தவீர்யன்
மார்க்கண்டேயப் புராணத்தில் தத்தாத்திரேயர் எப்படி எல்லாம் தன்னை பூஜிப்பவர்களுக்கு அருள் புரிந்தார் என்பது விளக்கப்பட்டு உள்ளது. ஆனால் பிரகதியில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒவ்வொரு பின்னணிக் காரணம் உண்டு. அதனால் வரம் பெற்று அழிந்தவர்களும் உண்டு, ஆண்டு அனுபவித்தவர்களும் உண்டு. தத்தாத்திரேயர் சரித்திரத்தில் மிக மிக முக்கியமாக கூறப்பட வேண்டியவர்கள் பரசுராமர், ரேணுகா தேவி மற்றும் காத்தவீர்யன் என்ற மூவருமே.  இந்த மூவரின் கதையையும் தத்தாத்திரேயர் சரித்திரத்தில் கூறாவிடில் அந்த சரித்திரம் நிறைவு பெற்றதாக இருக்க முடியாது. தத்தாத்திரேயர்  அருள் புரிந்த காத்தவீர்யன் கதை மூலம் பரசுராமர் மற்றும் ரேணுகாதேவியின் மகிமையையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.  

காத்தவீர்யன் கதை
காத்தவீர்யன் சூர்ய வம்சத்தில் உதித்தவன். கிருதவீர்யன் என்ற மன்னனுக்கும் அவன் மனைவி சுகந்தி என்பவளுக்கும் பிறந்தவன். அப்போது மகிஷ்மதி எனும்  சூர்ய நாட்டை ஆண்டு வந்தவர்கள் ஷத்ரிய வம்சத்தினர். அவர்களின் பிற்கால வம்சத்தினரே வடநாட்டில் உள்ள ஜெய்ஸ்வால் சமூகத்தினர் என்றும் கூறுகிறார்கள். அவர்களின் குருமார்கள் பார்கவா என்ற பிராமணர்கள். அவர்களை பிருகு என்றும் கூறுவார்கள். பாண்டித்தியத்தில் ஷத்ரியர்கள் பிராமணர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஏனெனில் அவர்களும் வேதங்களை நன்கு கற்று அறிந்தவர்களே. அவர்களுக்கு அமைந்து இருந்த இயற்கையான வலிமையான உடல்வாகினால் அவர்கள் யுத்த வீரர்களாக இருக்க தகுதியானவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று இருந்தார்கள். பிராமணர்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஷத்ரியர்கள் கொடை வள்ளல்களாக  இருந்தார்கள். அப்படிப்பட்ட வம்சத்தில் ஆட்சி செய்து வந்தவரே காத்தவீர்யனின் தந்தையான கிருதவீர்யன் என்ற மன்னன் ஆவார். கிருதவீர்யன் முன்ஜென்மத்தில் சம்பன் என்ற பெயரில் இருந்தவன். அந்த ஜென்மத்தில் அவன் செய்த பாவங்களினால் அவனுக்கு அதற்கு அடுத்த ஜென்மத்தில் புத்திர சோகம் ஏற்படும் என்ற சாபம் ச்யவன முனிவரால் ஏற்பட்டு இருந்தது.
பூர்வ ஜென்மத்தில் ச்யவன முனிவரிடம்  சாபம் பெற்று இருந்த  கிருதவீர்யன்  இந்த ஜென்மத்தில் பராக்கிரமசாலியான, மாபெரும் பாண்டித்தியம் பெற்ற மன்னனாக ஆட்சியில் இருந்தார். பல்வேறு யாகங்களை சிறப்பாக செய்தார். சோமவேதா  என்ற பெரும் யாகத்தை நடத்தி பிருகு போன்ற முனிவர்களுக்கு நிறைய தானங்கள் செய்தார். ஒரு காலத்தில் யம தர்மராஜரின் சபையில் ஒரு அமைச்சராக அலங்கரிக்கப்பட்டவராக இருந்தவர் கிருதவீர்யன். ஆனால் அவருக்கு இருந்த ஒரே குறை, பூர்வ ஜென்மத்தில் பெற்று இருந்த சாபத்தினால் அவருக்கு பிறந்த எந்தக் குழந்தைகளுமே உயிருடன் இருக்கவில்லை. பிறந்து பிறந்து அத்தனை குழந்தைகளும் சில நாட்களிலேயே இறந்து போயின. வயதோ ஏறிக் கொண்டே போயிற்று. சந்ததியே இல்லாமல் உள்ள தனக்குப் பிறகு இத்தனை பெரிய நாட்டை ஆளப்போவது யார் என்ற கேள்வி அவர் மனதில் எழுந்து மனதை வாட்டியது. அந்த நிலையில் அரச சபை பண்டிதர்கள் சிலர் இதற்க்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பிரகஸ்பதி மற்றும் மாபெரும் முனிவரான யாக்கியவல்யரிடம் சென்று அவர்களது ஆலோசனைக் கேட்கலாம் என கிருதவீர்யனிடம்  அறிவுறுத்தினார்கள்.  யாக்கியவல்யரிடம் நேரில் சென்று பேசுவதற்கு கிருதவீர்யனுக்கு மனோ திடம் கிடையாது. காரணம் அவருக்கு தான் சமமானவன் அல்ல என்ற எண்ணமே  காரணம். ஆகவே அவன் தனது மனைவியை யாக்கியவல்யாரின் மனைவியிடம் அனுப்பி அவளது உதவியை நாடினான்.
யாக்கியவல்யருக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருவள் பெயர்  பெயர் கல்யாணி மற்றும் மற்றவளின் பெயர் மைத்ரேயி என்பது. அவர்களில் மைத்ரேயி மகா பாண்டித்தியம் பெற்றவள். ஆகவே அவளிடம் சென்ற கிருதவீர்யனின் மனைவி தனது கணவரின் சங்கடத்தைக் கூறி அழுதாள். ச்யாயன முனிவரிடம் பெற்று இருந்த சாபத்தினால் இந்த ஜென்மத்தில் பிறந்த எந்தக் குழந்தையுமே உயிருடன் இல்லை என்பதினால் ஒரு குழந்தையாவது உயிருடன் இருக்க ஏதாவது வழி கூறுமாறு அவளிடம் கெஞ்சிக் கேட்டாள்.
மைத்ரேயியும் அவள்மீது பரிதாபப்பட்டு சில விரதங்களைக் கூறி அவற்றை கடுமையாக அனுஷ்டித்து வந்து தத்தாத்திரேயரை வழிபட்டால் அவள் குறை தீரும் எனக் கூறி அனுப்பினாள். அதே நேரத்தில் மற்றொரு முனையில் கிருதவீர்யனும் பிரகஸ்பதியை சந்தித்து தனது குறைக்கான நிவாரணம் கேட்டார். பிரகஸ்பதியும் தனக்கு தத்தாத்திரேயர் உபதேசித்த சூரிய மந்திரத்தை அவனுக்கு கற்றுக் கொடுத்து அதை உபாசனை செய்து தத்தாத்திரேயரை வழிபட்டால் நிச்சயம் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். ஆக கணவனும் மனைவியும் மைத்ரேயி மற்றும் பிரகஸ்பதி கூறிய இரண்டு அனுஷ்டானங்களையும் முறை தவறாமல் கடைப்பிடித்தார்கள். அடுத்த சில மாதங்களிலேயே கிருதவீர்யனின் மனைவி கர்பமடைந்து ஒரு அழகான ஆண் குழந்தைப் பெற்று எடுத்தாள். ஆனால் சிறு குறை. பிறந்த குழந்தை கை  விளங்காத முடமாக இருந்தது. ஆனாலும் தத்தாத்திரேயர் அருளினால் ஒரு குழந்தையாவது பிறந்து உயிருடன் உள்ளதே என மகிழ்ச்சியோடு அதை மனபூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். பிறந்த குழந்தை முடமாகப் பிறந்ததற்கு  இன்னொரு பின்னணி சாபம் இருந்தது . அது என்ன?
படம் நன்றி: http://www.sskna.org/newsite/thelegend.php
முன் ஒரு ஜென்மத்தில் மகாவிஷ்ணுவின் சேனையில் முக்கியமான ஒரு வீரனாக இருந்தவர் சுதர்சனம் என்ற சக்கரம். அந்த காலகட்டத்தில் பல்வேறு நிலைகளில் திருமால் யுத்தம் செய்து பல அரக்கர்களை அழிக்க வேண்டி இருந்தது.  அந்த நேரங்கள் அனைத்திலும் சுதர்சனே திருமாலுக்கு பெரும் துணையாக ஆயுதங்களை ஏந்தி நின்று இருந்தார். யுத்தங்களில் விஷ்ணு வெற்றி பெற்றபோதேல்லாம் தன்னால்தான் அந்த வெற்றி கிடைத்தது போல பிறர் எதிரில் காட்டிக் கொண்டார் . அதை திருமாலும் அறிந்து இருந்தார் . முதலில் அவர்  அப்படி பைத்தியக்கரத்தனமாக செய்து வந்ததை என்றாவது ஒரு நாள் மாற்றிக் கொள்வான் என எதிர்பார்த்தார். ஆனால் சுதர்சன் தனது கர்வத்தை குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை. அனைவரிடமும் தான் இல்லை என்றால் திருமாலுக்கு யுத்தத்தில் வெற்றி கிட்டுவது கடினம் என்பது போல பரவலாக ஒரு பிரமையை தோற்றுவித்தார் . ஆகவே ஒருநாள் திருமாலுக்கு கோபம் வந்து விட்டது. சுதர்சனை அழைத்துக் கூறினார் '' என்னுடைய வெற்றி அனைத்தும் உன்னால்தான் வந்தது என்பது போல போலி நாடகத்தை நீ ஆடி வருகிறாய். இனி என் முன் நிற்காதே... ஓடிப் போ...அடுத்த பிறவியில் நீ கை இல்லாத மூடமாகப் பிறந்து என் கையினாலேயே உன் மரணத்தை அடைவாய்'' என சாபமிட்டு அனுப்பி விட்டார். அந்த சாபத்தினால்தான் சுதர்சன் இப்போது கை இல்லாத மூடமாக கிருதவீரன் தம்பதிகளுக்குப் பிறந்து இருந்தார் .
குழந்தை வளர்ந்து பெரியவனாயிற்று. வம்சாவளிப் பெயரையும் சேர்த்து அவனுக்கு காத்தவீர்யன் எனப் பெயரிட்டார்கள். அங்ககீனத்தைத் தவிர காத்தவீர்யனுக்கு வேறு எந்தக் குறையுமே இல்லை. அதி புத்திசாலியாக இருந்தான். ஆனால் அவன் பெற்றோர்களோ கையில்லாத பிள்ளை என்ன செய்வான் என்றக் கவலையிலேயே காலத்தை ஓட்டி மரணம் அடைந்து விட்டார்கள். கிருதவீர்யன் பதவிக்கு வரும் முன்னரே அவருடைய முன்னோர்கள் பிராமணர்களுக்கு பல விதங்களிலும் உதவி செய்து அவர்களுக்கு நிறைய தானங்களும்  செய்து இருந்தார்கள். ஆகவே பிராமணர்களும் நல்ல நிலைக்கு வந்து ஷத்ரியர்களுக்கு  இணையான செல்வந்தர்களாக ஆகத் துவங்கினார்கள். காலம் ஓடியது. பல்வேறு காரணங்களினாலும், யுத்தங்களினாலும் ஷத்ரியர்களின் செல்வம் கரையத் துவங்க ஒரு கட்டத்தில் அவர்கள் கஷ்டப்படத் துவங்கினார்கள். ஆகவே அவர்களின் முன்னோர்கள் உதவி செய்த பிராமணர்களிடம் சென்று தமக்கு உதவுமாறு வேண்டினார்கள். ஆனால் அப்போது கர்வம் பிடித்து தலைகனம் ஏறிவிட்ட  பிராமணர்கள் தாம் எப்படி அத்தனை உயர்ந்த நிலைக்கு வந்தோம் என்பதை மறந்து ஷத்ரியர்களுக்கு உதவி செய்ய மறுத்து அவர்களை அவமானப்படுத்தி துரத்தினார்கள். அதனால் ஷத்ரியர்கள் மற்றும் பிராமணர்கள் இடையே பகை ஏற்பட்டது. ஷத்ரியர்கள் பிராமணர்களை பழி வாங்கத் துவங்கினார்கள். பிராமணர்களின் வீடுகளில் இருந்த செல்வங்களை கொள்ளை அடிக்கத் துவங்கினார்கள். ஷத்ரியர்களின் தொல்லையை தாங்க முடியாமல் போன பிராமணர்கள் ஊரை விட்டு ஓடத் துவங்கினார்கள். அந்த நேரத்தில்தான் பிராமண வம்சமான பிருகு வம்சத்தில் அத்ரி ரிஷியும், ஷத்ரியர்கள் வம்சத்தில் காத்தவீர்யனும் பிறந்து இருந்தார்கள்.
கிருதவீரன் மறைந்தப் பின் அவர் விட்டுச் சென்ற ராஜ்ய பரிபாலனத்தை ஏற்குமாறு காத்தவீர்யனிடம் அமைச்சர்கள் கூறினார்கள். ஆனால் காத்தவீர்யானோ முடமாக உள்ள தன்னால் ஆட்சிப் பொறுப்பை  ஏற்க இயலாது என மறுக்க அவர்கள் அவனை கட்டாயப்படுத்தி ராஜ்ய பரிபாலனத்தை ஏற்க வைத்தார்கள். அப்போது அவன் அமைச்சரவையில் இருந்த கர்க்கா  என்ற முனிவர் அங்ககீனமாக அவன் பிறந்து இருந்தாலும் முறைப்படி தத்தாத்திரேயரை வேண்டி வணங்கி வந்தால் அவர் அவனது அங்ககீனத்தை விலக்குவார் என அறிவுரைக் கொடுக்க காத்தவீர்யனும் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றப் பின் தத்தாத்திரேயரை தரிசிக்க நினைத்தான். அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனியும் அவனிடம் பத்ரதீபா பிரதிஷ்டா எனும் ஹோமம் செய்து தத்தாத்திரேயரை வணங்கித் துதித்தால் அவருடைய அருளினால் அவனுக்கும் விளங்காத கைகள்  நல்ல நிலைக்கு வரும் என்றார். அந்த நேரத்தில் தத்தாத்திரேயர் மாபெரும் யோக புருஷராக வலம் வந்து கொண்டு இருந்தார். அவரை ரிஷி முனிவர்கள் தரிசித்தவண்ணம் இருந்தார்கள். ஆகவே தானும் அவரிடம் சென்று தரிசித்து அவரிடம் தனது அங்ககீனம் விலக அருள் பெற வேண்டும் என எண்ணியவன் சாதாரணமாக தத்தாத்திரேயர் ஸ்நானம் செய்யும் நீர் நிலைகளில் சென்று அவரை தேடத் துவங்கினான். அப்போது அவன் வயது பன்னிரண்டே ஆயிற்று.
 படம் நன்றி: http://www.sskna.org/newsite/thelegend.php
அவனும் முனிவர்களின் அறிவுரைப்படி நர்மதை நதிக்கு சென்று குளித்துவிட்டு பத்ரதீபா பிரதிஷ்டா எனும் ஹோமம் செய்து விட்டு தத்தாத்திரேயரை தேடி அலைந்தான். அனைத்து இடங்களிலும் சென்று தேடித் திரிந்தவன் ஒரு வழியாக மலை அடிவாரத்தில் இருந்த ஒரு குகைக்குள் இருந்த தத்தாத்திரேயரை சந்தித்து அவரை துதித்து வணங்கினான். தன்னுடைய முடமான கைகள் நன்கு குணமடைய வேண்டும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்தான்.   அவரை பலவாறு போற்றித் துதித்தான். தத்தருக்கு அவன் வந்த காரணம் புரியாதா என்ன? அவர்தான் நாடகப் பிரியர் ஆயிற்றே. வந்தவர் யாரையும் தன்னிடம் எந்த அளவு நம்பிக்கை வைத்து வந்துள்ளார்கள் என்பதை சோதனை செய்து பார்க்காமல் அவர்களை அவர் அருள் புரிவது இல்லையே. ஆகவே எப்போதும் போல தனது நாடகத்தை துவக்கினார். தான் ஒரு சாதாரண சன்யாசியே  எனக் கூறி விட்டு தனக்கு பணிவிடை செய்யுமாறு கூறினார். வந்தவனுக்கும் அவரைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும் என்றதினால் அவர் கூறியபடியே அவருக்கு பணிவிடை செய்யலானான். வந்துள்ளவன் முடமானவன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தத்தாத்திரேயேர் அவனுக்கு பல வேலைகளையும் தந்து சக்கையாகப் பிழிந்தார். வந்தவனுக்கோ தனக்கு தத்தாத்திரேயரைக் காண வேண்டும், அவர் அருளைப் பெற்று கைகள் குணமடைய வேண்டும் என்ற ஒரே குறிகோள்தான் என்பதினால் அவர் கொடுத்த வேலைகளை முகம் கோணாமல் செய்தான். அவனை எத்தனைக் கொடுமைப்படுத்தினாலும் அவன் அசைந்து கொடுப்பதாக இல்லை என்பதினால் தத்தர்  அவன் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்து ஒரு நாள் அவனுக்கு காட்சி தந்து அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அவன் அவரிடம் கேட்டான்  ' ஸ்வாமி , இன்றுதான் என் வாழ்வில் வசந்தம் வீசிய நாள். எனக்கு என் குடிமக்களைக் காப்பது கடமை. ஆனால்  முடமான என்னால் எப்படி அவர்களைக் காப்பாற்றுவது? அவர்களைக் காப்பாற்றும் கடமையை திறமையாக செய்ய முடியாமல் என் கைகள் தடையாக உள்ளதே. ஆகவே என்னுடைய அங்ககீனமான கைகால்கள் குணமாக வேண்டும். எனக்கு ஆயிரம் கைகள் வேண்டும். என்னை எதிர்ப்பவர்கள் தோற்று  ஓட வேண்டும். அந்த அளவு எனக்கு பலத்தை கொடுங்கள்.  ஸ்வாமி...என் பெயரைக் கேட்டாலே தீமைகளும், தீமைகளை செய்பவர்களும் அஞ்சி ஓட வேண்டும். என் செல்வத்துக்கு குறையே வரக் கூடாது. என்னை நல் வழியில் நடத்தில் செல்பவர்கள் என்றும் எனக்கு துணையாக நிற்க வேண்டும். நான் என்றும் இளமையோடு இருக்க வேண்டும். நான் தர்ம நெறி தவறிச் செல்லும் கட்டத்தில் என்னை விட பலசாலியும் என்னை விட பெருமை மிக்கவனால் மட்டுமே என் உயிரைப் பறிக்க முடியும் என்ற வகையில் என் வாழ்வு இருக்க வேண்டும். எனக்கு நீங்கள் இப்படிப்பட்ட வரங்களை தரவேண்டும் ஸ்வாமி' என பவ்வியமாகக் கேட்டான்.
 படம் நன்றி: http://www.sskna.org/newsite/thelegend.php
தத்தாத்திரேயரும் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் தந்தது மட்டும் இல்லாமல் அவன் எந்த லோகத்துக்கும் எளிதில் போய்வர ஒரு தேரையும் தந்தார். அவன் அவரை பலமுறை வணங்கி எழுந்தான். அவர் கால்களை பற்றிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டான். தான் பெரும் பலசாலி ஆகி விட்டதை உணர்ந்தான். ஆயிரம் கைகளையும்  கொண்ட மிதப்பும் கூடவே இருந்தது. கேட்ட அனைத்து வரங்களையும் பெற்றுக் கொண்டு காத்தவீர்யன் திரும்பிப் போகும் வழியில் ஒரு ஆசரி கூறியது  'அதிக  இறுமாப்புக் கொள்ளாதே மூடனே...நீ பெற்ற வாரங்களுக்கும் காரணம் பிராமணர்களே என்பதை மறக்காதே....அவர்கள் துணை இன்றி ஷத்ரியன்  உன்னால் நாட்டை ஆளமுடியாது என்பதை மறக்காதே'.  இதென்ன நல்ல காரியம் முடிந்து திரும்பும் வழியில் அபசகுனம் போல எதோ குரல் ஒலிக்கின்றதே. ஒரு வேளை அது என் மீது பொறாமைக் கொண்ட வாயு பகவானின் குரலாக இருக்கலாம் என நினைத்தபடி அதை உதாசீனப்படுத்திவிட்டு நாடு திரும்பினான்.
நாடு திரும்பிய மன்னனின் நிலையைக் கண்டவர்கள் பெருமைக் கொண்டார்கள். அந்த மன்னனும் அடிக்கடி மலைப் பகுதிக்குச் சென்று தத்தாத்திரேயரை வணங்கி  அவர் ஆசியை பெற்று வந்ததினால் திறமையாக நாட்டை ஆண்டு வந்தான். தான தர்மங்கள் செய்தான். பெரியோர்களை மதித்து நடந்தான். எளியோரை வலிமையானவர்கள் ஆட்டிப் படைப்பதை தடுத்து நிறுத்தினான். அதனால் கடவுளுக்கு அடுத்து காத்தவீர்யன் என்ற அளவு அனைவரும் புகழும் வண்ணம் அவன் பெயர் அனைத்து இடங்களிலும் பரவியது.
அடிக்கடி தத்தாத்திரேயரை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றுக் கொண்டு காத்தவீர்யன் மக்கள் நலனை முக்கியமாக கொண்டு சுமார் 85000 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகக் கூறுவார்கள். தத்த  சரித்திரத்தில் காத்தவீர்யனை தத்தர் 'அர்ஜுனா' என அழைப்பதைக் காணலாம். இப்படியாக நல்லாட்சி நடத்தி வந்த காத்தவீர்யன் மீது ராவணன் பொறாமைக் கொண்டான். அப்போது ராவணன் பல நாடுகளின் மீதும் படையெடுத்து திக்விஜய யாத்திரையை மேற்கொண்டு இருந்தான். அவன் காத்தவீர்யன் இருந்த நாட்டிற்கும் வந்து நதிக் கரையில் குளித்துக் கொண்டு இருந்தபோது ராவணனுக்கு புத்தி புகட்ட எண்ணியா காத்தவீர்யன்  அவனை குளிக்க விடாமல்   தனது ஆயிரம் கைகளினாலும் ஆணைப் போல நீரை தடுத்து நிறுத்தினான். அதனால் கோபமடைந்த ராவணன் அவனுடன் யுத்தம் செய்யத் துவங்க தத்தாத்திரேயரின் அனுக்கிரகத்தைப் பெற்று இருந்த காத்தவீர்யன் ராவணனை யுத்தத்தில் தோற்கடித்து சிறை பிடித்தான். ஆனால் புலத்தியர் என்ற முனிவர் கேட்டுக் கொண்டதின் பேரில் ராவணனை விடுவித்தான். அதன் பின் காத்தவீர்யன் நாடெங்கும் தத்தாத்திரேயரின் அனகாலஷ்மி விரத மகிமையை பரப்பி நல்ல முறையில் ஆண்டு வந்தான். நேரம் கிடைத்தபோதெல்லாம் பூஜை செய்தபடி இருந்தான்.
ஆனால் நாளாக நாளாக அவன் மனதில் ஒரு வெறுமை ஏற்பட்டது. வாழ்கையின் தத்துவம் என்ன என்பது புரியவில்லை. அனைத்தையும் துறந்துவிட்டு தத்தரிடமே சென்று விடலாம் என எண்ணியவன் தத்தரைக் காண கிளம்பிச் சென்றான்.  தத்தர் ஆசிரமத்தை அடைந்தவன் முதன் முறையாக தத்தர் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவர் கண்களை திறக்கவே இல்லை. ஆகவே அவரை எப்படி எழுப்புவது என திண்டாடியவன் நாள் முழுவதும் அவரை பூஜித்தபடி அங்கேயே அமர்ந்து கொண்டான். மனதில் அவரைப் பற்றிய தோத்திரங்களை ஜெபித்தவாறு அமர்ந்து கொண்டான். மறுநாள் எங்கிருந்து எல்லாமோ ரிஷிகளும் முனிவர்களும் வந்தார்கள். வந்தவர்கள் மாபெரும் யோகிகள். இவனை அவர்கள் எவருமே கண்டு கொள்ளவில்லை. வந்தவர்கள் தத்தரை வணங்கிவிட்டுச் சென்றார்கள். ஆனாலும் காத்தவீர்யன் மனம் தளராமல் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தான்.  திடீர் என தத்தர் கண்களை விழித்துப் பார்த்தார். சுற்றி இருந்த ரிஷி முனிவர்களை அழைத்துக் கொண்டு நர்மதையில் குளிக்கச் சென்றார். ஆனால் அங்கு அமர்ந்து இருந்த காத்தவீர்யனை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. காத்தவீர்யனுக்கு அழுகை அழுகையாக வந்தது. தத்தரைக் காண ஆவலுடன் வந்தால் என்னை கண்கொண்டுக் கூடப் பார்க்க மறுக்கின்றாரே என அழுதபடி அங்கேயே அமர்ந்து இருந்தான். அங்கிருந்து அசையவில்லை. திரும்பி வந்த தத்தரும் மீண்டும் தன இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். ரிஷி முனிவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்தபடி இருந்தார். நேரம் கடந்தது. அப்போதும் அவர் காத்தவீர்யனை கண்டு கொள்ளவில்லை. அவனும் அங்கிருந்து நகரவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தரை தாரையாக கீழே விழுந்து கொண்டே இருந்தது.  சில மணி நேரம் கடந்ததும் திடீர் என அவனை தத்தர் பார்த்தார். அவனை தனது அருகில் வருமாறு ஜாடை காட்டினார். தனது அருகில் வந்தவனுக்கு  ஆறுதல் கூறினார். அவர் அருகில் சென்றவன் அப்படியே அவர் பாதங்களில் விழுந்து பொல பொலவென கண்ணீர் விட்டு அழுது புலம்பினான். அவனை எழுப்பியவர் ' எதற்காக இப்படிக் கண்ணீர் விட்டு அழுகிறாய்?...உனக்கு இன்னும் என்ன வேண்டும் எனக் கேட்டார்' என்றார். சுற்றி நின்று இருந்த அனைத்து ரிஷிகளும் முனிவர்களும் அவன் மீது கருணைக் கொண்டு தத்தர் அவனை அருகில் அழைத்துப் பேசியதை வியப்புடன் பார்த்தவாறு நின்று இருந்தார்கள். இவன் யார்? இவனிடம் ஏன் தத்தர் கருணைக் காட்டுகிறார் எனப் புரியாமல் விழித்தார்கள். அழுதபடி அவன் கூறினான் ' ஸ்வாமி இந்த எளியவனுக்கு இன்னும் என்ன வேண்டும் ? நீங்கள் என்ன கொடுக்காமல் விட்டீர்கள்?..கேட்ட அனைத்தயும்தான் கொடுத்து விட்டீர்களே ...இனியும் கேட்டால் நான் மகாபாவி ஆகி விடுவேன். அனைத்தும் உள்ள எனக்கு ஒரு சந்தேகம். பிராமணர்கள் ஆசாரம் ....ஆச்சாரம் என்று கூறுகிறார்களே ஆனால் அந்த ஆச்சாரங்களை மீறி நீங்கள் காட்சி தருகிறீர்கள். பல நேரங்களில் உங்களை தியானத்தில் பார்கின்றேன் ...பரப் பிரும்மமான நீங்கள் யாரைக் குறித்து தியானத்தில் இருக்கின்றீர்கள்? உங்களையும் விட மேலானவர் இந்த உலகில் யார் இருக்க முடியும்? எனக்கு மனதில் அமைதி இல்லை. எனக்கு மோட்ஷத்தை தந்து என்னை மேலுலகிர்க்கு அனுப்பி விடுங்கள் ஸ்வாமி....அதுவே எனக்கு வேண்டும்.  ஆகவே என் மன வருத்தத்தை நீங்கள் விலக்கி விட்டால்   நான் அரசை துறந்து துறவறத்தை மேற்கொண்டு, உங்களை பிரார்த்தனை செய்தபடி இருப்பேன் ' என்றான்.
அப்போது தத்தாத்திரேயர் முகத்தில் பெரிய ஒளி வெள்ளம் தோன்றியது. அனைவரும் அவர் என்ன கூறப் போகின்றார் என ஆவலுடன் அவரை பார்த்தபடி நின்று இருந்தார்கள். தத்தர் கூறினார்' அர்ஜுனா இன்றுதான் நீ உண்மையிலேயே என் மனதில் அதிக இடத்தைப் பெற்று விட்டாய். நீ வந்தது முதல் உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். அது உனக்கு தெரியாது. உன் வாயில் இருந்து வந்த அனைத்து தோத்திரங்களும் என்னை வந்தடைந்தன. நான் அவற்றை பெற்றுக் கொண்டேன். நான் யாரைக் குறித்து தியானத்தில் இருந்தேன் என்பதையோ, அல்லது எவரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தேன் என்பதையோ இப்போது கூற முடியாது. என்னை விட மேலான அவர் யார் என்பதை தகுந்த நேரத்தில் இந்த உலகிற்கு வெளிப்படுத்துவேன். அதற்கான காலம் தற்போது கனிந்து வரவில்லை. அது பெரிய தனிக் கதை. ஆனால் நான் தியானித்துக் கொண்டு  இருந்தது என்னுள் இருந்த ஆத்மாவைத்தான்'. என்று கூறியவர் அவனுக்கு நியாயம், தர்மம், மனசாட்சி போன்ற அனைத்தையும் விளக்கும் பல கதைகளைக் கூறி விட்டு தொடர்ந்தார் ' அர்ஜுனா சந்தேகங்கள் தோன்றுவது இயற்கை. இருட்டில் அமர்ந்து கொண்டு வெளிச்சத்தை தேடி அலையக்  கூடாது. காரணம் இந்த உலகமே ஒரு மாயை. நாம் எதை நினைக்கின்றோமோ அதையே பார்க்கும் மனப் பக்குவத்திற்கு நம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டும். மனதை தூய்மையான நிலையில் வைத்துக் கொண்டு பற்றற்ற நிலையில் சென்று பார். ஒரு குரு உபதேசித்ததை மனதில் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆத்மாவை பார்க்கும் நிலைக்கு சென்று பார். உனக்கு அனைத்துமே கிடைக்கும்' என்றார். அதைக் கேட்டவன் 'ஸ்வாமி, இன்று நான்  அடைந்த ஆனந்ததிற்கு அளவே இல்லை. ஆனால் நீங்கள் முன்னர் எனக்குக் கூறியவை மனதிலே பதியவில்லையே. என்ன செய்வது?' எனக் கேட்க தத்தர் மீண்டும் கூறினார் ' அர்ஜுனா காதில் கேட்டவை மனதில் பதியாததின் காரணம் அலை பாயும் மனதே.... ஆகவே நாம் முதலில் அடக்க வேண்டியது நமது அலை பாயும் மனதையே... அதற்கான வழி முறையே பிராணாயம்செய்வது என்பது . ஒரு வண்டியின் சக்கரத்துக்கு ஆணிபோல மனதை அடக்க பிராணாயம் செய்ய வேண்டும். அதுவே மன ஓட்டத்தை தடுக்கும் ஆணி போன்றது. அதை வெற்றிகரமாக செய்துவிட்டு குருவின் உபதேசத்தை மீண்டும் மீண்டும் மனதில் நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். அலைபாயும் மனதுக்கு நிம்மதி வேண்டும் என்கிறாய் அல்லவா....அதோ எதிரில் தெரிகின்றதே மலைக் குகை, அதற்குள் சென்று தவத்தில் இரு. ஏகாந்தமாக உள்ள அந்த இடத்தில் தவம் இருந்து சமாதி நிலையை நீ அடையும்போது உனக்கு மன நிம்மதி கிடைக்கும்' என்றார்.
அவனும் தத்தர் கூறியது போல அந்த மலைக் குகைக்குள் சென்று தவம் இருந்தான். பலகாலம் கழித்து மீண்டும் வெளியில் வந்து தத்தரை சந்தித்து இன்னும் சில விளக்கங்களைப் பெற்றுச் சென்றான். இன்னும் சில காலம் தவத்தில் இருக்குமாறு கூறி அவனை அனுப்பினார் தத்தர். அவனும் தவத்தில் இருந்தான். இப்படியாக மாறி மாறி பல ஆண்டுகள் அவனை தவத்தில் இருக்கச் சொன்ன தத்தர் ஒரு கட்டத்தில் அவனை ராஜ்யத்துக்கு சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யுமாறு கூறி அனுப்பினார். அவனை அவர் தவம் செய்து மனோதிடத்தை அதிகப்படுத்தியத்தின் காரணம் மனோதிடத்தை தவறாக பயன்படுத்தினால் அது விபரீத விளைவை தந்து அழிவைத் தரும் என்பதற்காகவே. முன்பிறவியில் சுதர்சன சக்கரமாக இருந்து இந்த ஜென்மத்தில் காத்தவீர்யனாக உரு எடுத்து உள்ள சுதர்சன் இப்போது  விஷ்ணு கொடுத்த சாபத்தில் இருந்து சாப விமோசனம் பெற வேண்டும். அதற்காக அவர் விஷ்ணுவின் அவதாரத்தினால் அழிய வேண்டிய காலம் வந்துவிட்டதினால்தான் அதற்கு அவனை பக்குவப்படுத்தி அனுப்பினார். அவை எதுவுமே காத்தவீர்யனுக்கு தெரியாது. நாடு திரும்பியவன் மீண்டும் நல்லாட்சியை தொடர்ந்தான். ஆனால் எத்தனை சிறந்த மனிதன் என்றாலும் காலப்போக்கில் அகங்காரம் தலை தூக்கும். அதைக் கட்டுப்படுத்த முடியாவிடில் அதுவே அழிவைத் தரும். காத்தவீர்யன் மட்டும் எப்படி அதற்கு விதி விலக்காக இருக்க முடியும்? கர்வம் அவனை ஆட்கொண்டது. அரச சபையில் பண்டிதர்களின் தர்கங்களை உன்னிப்பாகக் கேட்டான். அந்தணர்களின் வாதங்களை கவனித்தான். அவற்றைக் கேட்டவனுக்கு மனதில் தோன்றத் துவங்கியது. நாள் முழுவதும் நிஷ்டை, கர்மா , மஹாஸ்நானம் ....மஹாஸ்நானம் என நதிகளில் குளித்துவிட்டு  பலவற்றையும் அனுஷ்டித்தவாறு வேதங்களை படித்துவிட்டு தர்க்கம் செய்யும் இந்த அந்தணர்கள் எந்த நியம நிஷ்டாக்களையும் செய்யாமல் உள்ள என்னிடம் அல்லவோ கைகூப்பி நின்று யாசகத்தைப் பெற்று வாழ்கையை நடத்துகிறார்கள். ஆகவே நான் எந்த விதத்தில் அவர்களைவிட தரம் தாழ்ந்துவிட்டேன்? அவர்களை ஏன் நான் குருவாக ஏற்கவேண்டும்?
மீண்டும் ஒரு முறை தத்தாத்திரேயரிடம் சென்று தனது பல சந்தேகங்களுக்கும் விடை கேட்டு வந்தான். ஆனால் அவர் நதிகளில் மஹாஸ்நானம் செய்வதின் அவசியத்தையும் மகிமையையும் அவற்றின் பலன்களைக் கூறியும் அதை அவனால் ஏற்க முடியவில்லை. ஆனால் ஸ்வாமிகள் கூறி விட்டதினால் பேசாமல் வந்தான். வீடு திரும்பியவன் சுயமாக சிந்தித்தால் தக்க விடை கிடைத்து விடுகிறதே என்று எண்ணினான். அதனால் அந்தணர்கள் செய்யும் காரியங்கள் அனைத்துமே விரயங்கள்,அவை அனைத்தும் மாயைகளே என நினைத்தான். அப்படிப்பட்ட எண்ணத்தில் மிதந்து கொண்டு இருந்தவன் ஒரு நாள் அரச சபை தர்கத்தில் அந்தணர்கள் கூறிய கூற்றை ஏற்க மறுத்து விதண்டாவாதம் செய்தான். தன் நிலை  மறந்து அந்தணர்கள் தலைக் குனிந்து கொள்ளும் வகையில் அவர்களை அவமானப்படுத்தினான். அதுவே நல்ல தருணம் என எதிர்பார்த்து காத்திருந்த அக்னி பகவான் அவன் முன் தோன்றிக் கூறினார் ' ஒன்றும் அற்ற நடைப் பிண்டமான உனக்கு அனைத்தையும் கொடுத்து உன்னை இந்த உயர் நிலைக்கு ஆளாக்கியவர் தத்தாத்திரேயர் அல்லவா? அவருக்கு பிடித்த இந்த அந்தணர்களை அவமானப்படுத்தியது குறித்து நீ மகிழ வேண்டாம். இப்படி அந்தணர்களை அவவானப் படுத்தியதன் மூலம்  அவருக்கு அல்லவா நீ தலை குனிவை ஏற்றி வைத்து விட்டாய்' என ஏளனம் செய்ய நடந்த தவறை எண்ணி வருந்தினான் அந்த மன்னன் . தத்தாத்திரேயர் பெயரை அவர் கூறியதுமே அவனை யாரோ சாட்டையால் அடிப்பது போல இருந்தது. அவர்களிடம் தான் அகந்தையுடன் பேசியதற்கு பகிரங்கமாக சபையில் மன்னிப்புக் கேட்டான். ஆனால் விடுவாரா அக்னி பகவான். அவனை அழிக்க தருமணம் பார்த்துக் கொண்டு அல்லவா இருந்தார். போகும் முன் அவனிடம் பசிக்கு பிட்சைக் கேட்டார். அவனும் தாராளமாக எத்தனை அளவு உணவு தந்தாலும் அவற்றை உண்டுவிட்டு அவை போதவில்லை என்றார். சரி இந்த ராஜ்யத்தில் உங்களுக்கு எத்தனை வேண்டுமோ அத்தனையையும்  எடுத்து சாப்பிட்டு விட்டுப் செல்லுங்கள்  எனக் கூறி விட்டான்.
ஆனால் பாவம் மன்னனுக்கு தெரியவில்லை. பிறந்த எதற்கும் மரணம் உண்டு. மரணத்தை தள்ளிப் போடலாமே தவிர தவிர்க்க முடியாது. தத்தாத்திரேயரின் கருணையினால் சில விதி விலக்கோடு காலத்தை ஓட்டி வரும் அவனுக்கு முடிவு காலம் துவங்கவே அந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றது என்பது எப்படி அவனுக்கு தெரியும்?  மன்னனின்  சம்மதம் கிடைத்ததும் அக்னி பகவான் உடனே சென்று மலைகள், நகரம், காடுகள் என அனைத்து இடங்களிலும் இருந்த செடி கொடிகளை அழித்தவண்ணம் சென்றார். அதனால் அதிக பாதிப்பிற்கு உள்ளானது காடுகளில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷி முனிவர்களே. அந்தத் தீயினால் ஊர்த்துவ முனிவரின்  ஆசிரமும் எரிந்து போயிற்று. அனைவரின் அலறல் குரலும் வசிஷ்ட முனிவரின் காதுகளில் கேட்டது. நடந்தது என்ன என்பதை அவர் எண்ணிப் பார்க்கவில்லை. மன்னன் தந்த சம்மதத்தினால்தானே அத்தனை நாசமும் ஏற்பட்டது எனக் கருதியவர் ஆத்திரம் தீர காத்தவீர்யனுக்கு சாபமிட்டார் 'காட்டில் தவம் செய்து கொண்டு இருந்த பிராமணர்கள் அனைவரும் வீடு வாசல்களை இழக்கக் காரணமான நீ ஒரு பிராமணன் கையினாலேயே விரைவில் மடிவாய்'  .
காலம் ஓடியது. காத்தவீர்யனின் மனநிலை மாறத் துவங்கியது. மனம் போனபடி ஆட்சி செய்ய ஆரம்பித்தான். யாரையும் மதிப்பதும் இல்லை. காரணமே இல்லாமல்  தத்தாத்திரேயர் கொடுத்த ரத்தத்தில் ஏறி நினைத்த இடங்களுக்கெல்லாம் செல்லத் துவங்கினான். ஒரு முறை இந்திரன் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது அங்கும் நுழைந்து விட்டான். அவன் செயல்களை  எல்லாம் பார்த்து  பயமடைந்த தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று காத்தவீர்யனின் முறைகேடுகளைப் பற்றிக் கூறி அவருடைய பாதுகாப்பை கேட்டார்கள்.  அவர்களை சமாதானப்படுத்திய விஷ்ணு கூறினார்' அவன் அழிவு காலம் நெருங்கிவிட்டது. கவலைப்பட வேண்டாம்'.
இன்னும் சிறிது காலம் ஓடியது. வேறு ஒரு நாட்டின் மீது படைஎடுத்துவிட்டு தனது நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்த காத்தவீர்யன் வரும் வழியில் இருந்த ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவரை தரிசித்து ஆசி பெறச் சென்றான். அப்போது அவனுக்கு ஆசி கூறிய முனிவரும் வந்த விருந்தாளி சாப்பிடாமல் போகக் கூடாது என்று கூறி விட்டு உணவு அருந்தி விட்டுச் செல்லுமாறு கூற அவனோ தன்னுடன் பல ஆயிரம் சேனையினர் உள்ளனர் என்பதினால் அவர்களை விட்டுவிட்டு உணவு அருந்துவது தவறு என்பதினால்  பிறகு வருவதாக கூறினான். ஆனால் ஜமதக்னி முனிவரோ எத்தனைபேர் வந்தாலும் அவகளுக்கு உணவு தருவேன் கவலைப் பட வேண்டாம் எனக் கூறிவிட்டு வந்தவர்கள் அனைவருக்கும் காமதேனுப் பசுவை அழைத்து உணவு தருமாறு கூற காமதேனுப் பசு  கொடுத்த உணவினால் அனைவரும் மூச்சு முட்டும் அளவில் உணவு அருந்தினார்கள். மன்னன் ஆச்சர்யப்பட்டான்.  இத்தனை பெரிய ராஜ்யத்தில் உள்ள என்னால் கூட இப்படி விருந்து படைக்க முடியாது. நொடிப் பொழுதில் இத்தனை சைனியத்திற்கும்   உணவு தந்துவிட்ட அந்தப் பசு என்னிடம் வந்துவிட்டால் என் ராஜ்யத்தில் யாருமே பட்டினியால் இறக்க மாட்டார்களே என எண்ணினான்.  ஆஹா என்ன அதிசயமான பசு இது...எத்தனைபேர் வந்தாலும் குறையாமல் உணவு தருகின்றதே என்பதைக் கண்டவன் அந்த பசுவை தனக்கு தருமாறு அவரிடம் கேட்டான். அந்தப் பசு தன்னிடம் இருந்தால் தன் நாட்டில் யாருமே பசியால் வாடாமல் இருக்க அதை பயன்படுத்துவேனே என்று ஆதாங்கத்தில் அவரைக் கேட்டான். ஆனால் அவர் அது தன்னுடைய தாயாருக்கு சமமானது என்பதினால் அதை தர முடியாது என்றார். எத்தனையோ பொன்னும் பொருளும் தருவதாகக் கூறியும் அவர் அந்த பசுவை தர மறுத்ததினால் வேறு வழி இன்றி  அவரை அடித்துத் தள்ளிவிட்டு அந்த பசுவை தரதரவென எழுத்துச் சென்றான். ஜமதக்னி மூனிவர் கதறிக்கொண்டு அவர்கள் இழுத்த  இழுப்பில் சென்று கொண்டு இருந்த பசுவைக் காப்பாற்ற முடியாமல் பிரமை பிடித்து அமைந்து விட்டார். காட்டில் வேட்டை ஆடி விட்டு வந்தார் பரசுராமர். பரசுராமரும் விஷ்ணுவின் ஒரு அவதாரம்தான். சுதர்சன சக்கரம் பூர்வ ஜென்மத்தில் விஷ்ணுவின் சாபத்தைப் பெற்று இந்த ஜென்மத்தில் காத்தவீர்யனாக பிறந்து இருக்க அந்த காத்தவீர்யனைக் கொல்ல வேண்டிய கட்டாயத்தினால் பரசுராம ரூபத்தில் அவதரித்தவர். தனது தந்தையின் நிலைமையைக் கேட்டறிந்தார் பரசுராமர் . கோபம் கொந்தளித்தது. கோடாலியை எடுத்து தோளிலே  போட்டுக் கொண்டார். காடே கலங்கும் வண்ணம் அந்த காட்டில் சைனியத்துடன் சென்று கொண்டு இருந்த காத்தவீர்யனைப் பார்த்து கர்ஜனை செய்தார் ' ஹே...அற்பப் பதரே...நில்...என் தந்தையிடம் இருந்து பிடுங்கிச் சென்ற பசுவை விடுவிக்கப் போகின்றாயா இல்லையா ?'
காத்தவீர்யன் நினைத்தான்' நான் ஷத்ரியன் ...இந்த பிராமணனுக்கு பயந்து பசுவை விட்டு விட்டால் இந்த நாட்டை எப்படி ஆளுவது?  அகவே தனியாக வந்தவனை சேனை மூலம் அடக்குவது கோழைத்தனம். நானே அவனுடன் சண்டையிட்டு அவனைக் கொல்வேன்'. சுற்றி இருந்த வீரர்கள் ஆஹா...ஓஹு...என ஆர்பரிக்க, பரசுராமர் கூறினார் ' அற்பப் பதர்களே  , அனைவருமே வந்து மோதிப் பாருங்கள் ....உங்களை த்வம்சம் செய்கிறேன்' எனக்  கர்ஜித்து அவர்கள் முன் சென்று நின்ற பரசுராமருக்கும் காத்தவீர்யனுக்கும் யுத்தம் துவங்கியது.  நொடிபொழுதில் பரசுராமர் அத்தனை சைனியத்தினரையும் அழித்துவிட்டார். அழிந்த சேனையைக் கண்டு திடுக்கிட்டான் காத்தவீர்யன். 'எனக்கு நிகரானவன் இதுவரை பிறக்கவில்லையே என நான் நினைத்து இருக்க  இவன் எங்கிருந்து வந்தான்?' . இப்படி  நினைத்தபடியே ஆக்ரோஷமாக பரசுராமருடம் மோதினான்.  பெரும் சண்டை நடந்தது. இருவரின் கைகளில் இருந்தும் அம்பு மழை பொழிந்தது. கைகளை வெட்ட வெட்ட காத்தவீர்யன் கைகளில் புதியதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்ததைக் கண்டு வியந்தார் பரசுராமர். அது தத்தர் தந்த வரமல்லவா. ஆனால் அதே நேரத்தில் வசிஷ்டரின் சாபமும் மேல் எழுந்தது. பரசுராமர் சிவபெருமானை நினைத்தபடி சிவபெருமான் அவருக்கு கொடுத்து இருந்த பிரும்மாஸ்திரத்தை ஏவினார். தத்தாத்திரேயர் சிவனின் அவதாரமும் ஆனவர் அல்லவா. காத்தவீர்யனின் ஆயுளும் முடியும் தருணம் வந்து விட்டது. மாமுனி வசிஷ்டரின் சாபமும் நிறைவேற வேண்டும்.  பூர்வ ஜென்ம சாபமும் அவனுக்கு நிறைவேற வேண்டும் என்பதினால் பரசுராமர் ஏவிய பிரும்மாஸ்திரத்தை காத்தவீர்யனின் ஆயுளை முடிக்க தத்தாத்திரேயரே வழி செய்தார். இப்படியாக முன் ஜென்மத்தில் சுதர்சன சக்கரம் பெற்று இருந்த  சாபமும் விலகியது. அவர் மீண்டும் விஷ்ணுவை சென்று சரணடைந்தார். காத்தவீர்யனின் பிறப்பும் ஒரு முடிவுக்கு வந்தது. தத்தாத்திரேயரின் ஆசிகளைப் பெற்று இருந்ததினாலும், பல நற்குணங்களை கொண்டிருந்தான் என்பதினாலும் அவன் உயிர் சொர்கத்தை அடைந்தது.  ஓடி வந்த பசுவும் அவரது ஆசானான ஜமதக்கினி முனிவருடன் சேர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டது.

..............பாகம் -3

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E