Ramana Maharishi - Mother's Temple

ரமண  மகரிஷியின் தாயாரின் 
ஆலயம் எழுந்த கதை 

சாந்திப்பிரியா

(Read the Original Article  '' The Evolution of the Mother's Temple '' written 

அன்னையின்  ஆலயம்  
1922 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று ரமண மகரிஷியின் தாயார் மரணம் அடைந்தார் . அவர் மரணம் அடையும் சில மணி நேரத்திற்கு முன்னரே தான் மரணம் அடைய இருப்பதை அறிந்து கொண்டு மற்றவர்களிடம் கூறி விட்டார்.  ஆகவே அவர் மரணம் அடைந்ததும் அவரை புதைப்பதா அல்லது சிதையில் எரியூட்டுவதா என்பதை பற்றி அவருடைய பக்தர்கள் நன்கு யோசனை செய்து பார்க்கத் துவங்கினார்கள். சாஸ்தி  முறைப்படி பெண் சாதுவிக்களை புதைக்க வேண்டும், அவர்களை எரிக்கக் கூடாது என்பது விதி.
அடுத்தக் கவலை அவளுடைய பூத உடலை புதைப்பதற்கு சரியான இடத்தை தேர்ந்து எடுக்க வேண்டுமே என்பதேயாகும். அதற்குக் காரணம் அருணாசலேஸ்வரர் ஆலயத்தை நிர்வாகித்து வந்தவர்களே அந்த மலையின் இன்னொரு பகுதியில் இருந்த ஸ்கந்தாஷ்ரமத்தையும் நிர்வாகித்து வந்தார்கள். ஆகவே அந்த மலைப் பகுதியில் இறந்தவர்களை அவர்கள் புதைக்க விட மாட்டார்கள். அதற்குக் காரணம் அந்த மலையே சிவலிங்க மலை என்பதினால் இறந்து போனவர்களை அதன் அருகில் புதைப்பது அதன் புனிதத் தன்மையை அழித்துவிடும் என்பதே. அது மட்டும் அல்லாமல் அந்த ஆலய விதிமுறைப்படி அந்த மலையில் வேறு எந்த உருவ வழிபாட்டையும் அனுமதிக்கக் கூடாது.
ஆகவே அவரை ரகசியமாக புதைத்து விட்டாலும் அவளுக்கு ஆலயம் அமைக்க முடியாது. 1930 ஆம் ஆண்டில் அந்த சட்ட திட்டங்களைக் குறித்து கருத்து தெரிவித்த பகவான் தன்னுடைய தாயார் இறந்த உடனேயே அந்த ஆலய விதிமுறைகளைப் பற்றி ஆலய நிர்வாகிகள் தம்மிடம் எடுத்துக் காட்டியதாகக் கூறினார்.

அன்னையின்  ஆலய பலி குளம் 
 
''அந்த மலையில் சரஸ்வதி ஸ்வாமிகள் என்பவர் இருந்தார். ஒருமுறை அவர் சுப்ரமணிய ஸ்வாமிக்கு ஆராதனை செய்ய இருப்பதாக அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆலய நிர்வாகிகள் அதை நடக்க விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அவர்களின் கூற்றின்படி அந்த மலை லிங்க ஸ்வரூப மலை என்றும் சாஸ்திர  விதிப்படி அந்த மலை மீது அமர்ந்து கொண்டு பண்டிகைகளையோ அல்லது உருவ வழிபாடுகளையோ   செய்யக் கூடாது  எனக் கூறி விட்டார்கள். அது போலவேதான் என்னுடைய தாயார் சமாதி அடைந்தபோதும் அவளை மலை மீது புதைக்கக் கூடாது என்ற ஆட்ஷேபணையை தெரிவித்தார்கள். அப்போதும் அவர்கள் அந்த மலை ஈஸ்வர ஸ்வரூபமானது என்றே கூறினார்கள்''.
அவர்களின் கூற்று நியாயமானதே எனக் கருத்து தெரிவித்த பகவான் பின்னர் கூறினார்:
''பண்டைகால வழக்கப்படி இந்த மலை லிங்க ஸ்வரூபமானது. அதாவது மலையே கடவுள் எனக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட பெருமை இந்த உலகில் வேறு எந்த இடத்திற்குமே கிடையாது என்பதே இந்த மலையின் விசேஷம்''.
இந்த விதிமுறை மீறப்படக் கூடாது எனக் கருதியதினால்தான் மாலையில் சமாதி அடைந்த அவருடைய அன்னையை அருணாசாலாவின் தெற்குப் பகுதியில் இருந்த மலையின் அடியில் புதைப்பது என முடிவு செய்யப்பட்டது. அந்த இடம் ஏன் தேர்வு செய்யப்பட்டது என்றால் அந்த இடத்தில்தான் மரணம் அடைந்த சாதுக்களை வழக்கமாக சமாதி செய்து வந்தார்கள்.

 தன் அன்னையுடன் இளம் வயதான ரமண மகரிஷி 

முதலில் தனது தாயாரை எவருக்கும் தெரியாமல், எந்த விதமான ஆடம்பரமும், ஊர்வலமும் இல்லாமல் ரகசியமாக எடுத்துச் சென்று புதைத்து விடலாம் என்றே பகவான் முதலில் நினைத்தார். தன்னுடைய தாயார் சமாதி அடைந்ததும் அங்கு கூடி இருந்த பக்தர்களிடம்
''எவருக்கும் தெரியாமல், எந்தவித ஆடம்பரமும் இன்றி மாலைப் பொழுது கழிந்து இரவு வந்ததும் ரகசியமாக தாயாரின் உடலை எடுத்துச் சென்று புதைத்து விட வேண்டும்.மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு குழி தோண்டி அந்த உடலை அதற்குள் போட்டு அந்தக் குழியை மூடிவிட்டு வந்து விட வேண்டும்''  என முதலில் தான்  கட்டளை இட்டு இருந்ததாக டி .ஆர். ராமச்சந்திரன் என்ற  பக்தரிடம் வெகு காலம் கழித்து பகவான் கூறினார்.
ஆனால் எவருக்கும் தெரியாமல் அந்த நடு இரவில் உடலை தூக்கிக் கொண்டு போய் புதைப்பது கடினம் என்பதினால் அதை செய்ய இயலாமல் போய் விட்டது. அதற்குப் பதிலாக அவருடைய பக்தர்கள் சமாதி அடைந்தவளின் உடலுக்கு அருகில் விடியற்காலை நாலரை மணி வரை அமர்ந்து கொண்டு திருவாசகத்தை ஓதிக் கொண்டு இருந்தார்கள். அதற்குப் பின்னர் விடியற்காலை ஐந்து மணிக்கு அவருடைய உடலை எடுத்துக் கொண்டு சென்றார்கள்.

 அன்னை ஆலயத்தின் உள்ளே 
முதலில் உடலை புதைக்க இருந்த இடம் சாலையை ஒட்டி இருந்தப் பகுதியில் இருந்ததினால் அங்கிருந்த இன்னொரு பக்தரும், அந்த கிராம முனுசிப்புமான ராமகிருஷ்ண ஐயர் என்ற அதிகாரி சாலையில் இருந்து தள்ளி உட்புறத்தில் இருந்த ஒரு இடத்தில் உடலைப் புதைக்குமாறு யோசனைக் கூறினார். அதற்குக் காரணம் அந்த சமாதி சாலையில் இருந்து உட்புறத்தில் இருந்தால்தான் பல வருடங்களுக்குப் பிறகும் யாரேனும் அங்கு ஆலயம் எழுப்ப நினைத்தால் அதற்கு தடங்கல் வராது என்பதுதான்.  அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு ஞானிகளை புதைப்பதற்கான வழி முறைகளை வகுத்து இருந்த திரு மந்திர நூலின்படி பெரிய குழி வெட்டப்பட்டு அதில் அந்த உடல் புதைக்கப்பட்டது .
அன்னை சமாதி அடைந்தபோது, ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்த குஞ்சு ஸ்வாமி என்பவரிடம் பகவான் முதலில் தான் விரும்பியபடி உடலை ஏன் அடக்கம் செய்யவில்லை என்பதைக் குறித்து பகவான் விளக்கி இருந்தார் . அது குறித்து குஞ்சு ஸ்வாமி கூறினார் :
''அந்த நாடு இரவில் சில காரியங்களை செய்ய முடியவில்லை. தாயார் மாலையில்தான் சமாதி அடைந்தார். அதற்குப் பின்னர் பல காரியங்களை செய்ய வேண்டி இருந்தது என்பது மட்டும் அல்ல சில பொருட்களையும் வாங்க வேண்டி இருந்தது. கிராம அதிகாரியின் ஒப்புதலையும், அந்த நிலத்தின் சொந்தக்காரரான பாலாஜி மடத்தின் அனுமதியையும் பெற வேண்டி இருந்தது. இரவில் ஆட்களும் கிடைக்கவில்லை. பகவான் தன்னுடைய மனதில் விரும்பியதை கண்டிப்பாக நிறைவேற்ற விருப்பப்படவில்லையோ எனத் தோன்றியது. அதற்குக் காரணம் எங்கள் அனைவரையும் ஸ்கந்தாஷ்ரமத்துக்குச் சென்று திருவாசகம் ஓதிக் கொண்டு இருக்குமாறு பகவான் கூறி விட்டார். காலை உடலை எடுத்துச் செல்லும்வரை இரவு முழுவதும் நாங்கள் அங்கு இருந்தபடி திருவாசகத்தை ஓதிக் கொண்டு இருந்தோம் . எதை செய்தாலும் முறைப்படி செய்யவே நாங்கள் விரும்பினோம்.
ஞானிகளின் உடலை மண்ணுக்குள் புதைப்பது போல புதைத்தாலோ அல்லது எரித்தாலோ அந்த நிலம் உள்ள ஊருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். ஆகவேதான் திருமந்திரத்தில் கூறி இருந்தபடி குழிக்குள் வரிசையாக கற்களை அடுக்கி  வைத்து விட்டு அதன் மீது உடலை வைத்து மூடினோம். மற்ற விதி முறைகள் என்ன என்பது எங்களுக்கு அப்போது தெரியாது. ஆகவே அவற்றை அப்போது கடைபிடிக்க முடியவில்லை என்றே கருதுகிறேன்''.
சமாதிக் குழி தோண்டிக் கொண்டு இருந்தபோது தாயாரின் உடல் ஒரு அரச மரத்தடியில் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் அப்போது அங்கு வந்து அஞ்சலி செலுத்தத் துவங்கியதினால் பக்கத்தில் இருந்த அடர்த்தியான முள் செடியையும் கள்ளிச் செடிகளையும் அப்புறப் படுத்த வேண்டி இருந்தது.  உடலுக்கு அபிஷேகம் செய்தப் பின் உடல் புதை குழிக்கு எடுத்துச் செல்லப் பட்டது''.

 
அன்னை ஆலயத்தின் உள்ளே - இன்னொரு காட்சி
இந்தப் படத்துக்கு  நன்றி: இணையதளம்  
அதன் பின் நடந்ததை குஞ்சு ஸ்வாமி கூறினார்:
''புனிதமான வீபுதியையும் இலைகளையும் அந்த சமாதிக்கு உள்ளே போட்டார்கள். அதன் பின் உடல் அதற்குள் இறக்கி வைக்கபட்டது. பகவானும் மற்றவர்களும் சிறிது  வீபுதியையும் கற்பூரத்தையும் குழிக்குள் போட்டார்கள். அதன் பின் அந்தக் குழி மூடப்பட்டது. அதன் மீது பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து வைத்து மூடிய பின் மூடியக் கல் மீது ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது .அந்த சிவலிங்கத்தை முறைப்படி பூஜித்து ஆராதித்தார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு அனைவரும் பலக்கோட்டிற்கு திரும்பினோம். வழி முழுவதும் நாதஸ்வர இசை முழங்க அதன் முன்னால்  பகவான் மெதுவாக நடந்து வந்தார். சமாதி இருந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூர அளவில்தான் பலக்கோடு இருந்தது. ஆனால் அந்த இடத்தை ஊர்வலம் சென்று அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆனது. அந்த ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தியது போல முன்னால்  நடந்து வந்து கொண்டு இருந்த பகவானை அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறு உற்சாகமாக இசை இசைத்தவண்ணம் நாதஸ்வரக் கலைஞ்சர்கள் சென்றார்கள்''.

அன்னை ஆலய மேல்  கோபுரத்தின் சிற்பங்கள்  
அது முதல் தினமும் அந்த சமாதியில் பூஜைகள் செய்து வரப்பட்டது . பத்தாவது நாளன்று விசேஷ பூஜையும் நடைபெற்றது. அதன் பிறகு மோட்ஷ தீபம் ஏற்றப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பகவானுடைய சகோதரர் ஆன சின்ன ஸ்வாமி என்பவர் சமாதியை நிர்வாகிக்கத் துவங்கினார். தின பூஜைகளையும் அவரே நடத்தி வரலானார். அதன் பின் பகவான் ஸ்கந்தாஷ்ரமத்துக்குச் சென்று வசிக்கலானார். சின்ன ஸ்வாமியும், தண்டாயுத ஸ்வாமியும் சமாதிக்கு அருகிலேயே வசிக்க முடிவு செய்தார்கள். சமாதிக்கு மேலே தென்னை ஓலையினால் வேயப்பட்ட தடுப்பைப் போட்டு ஆலயம் போலத் தோற்றம் தந்து அதன் அருகிலேயே சமைத்து சாப்பிட்டுக் கொள்ள சிறு  குடிசையையும்  அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கி இருந்தார்கள்.
ஸ்கந்தாஷ்ரமத்தில் இருந்து தினமும் அரிசி, பருப்பு போன்றவை வந்தன. அதில் உணவு செய்யப்பட்டு பூஜைக்கு வேண்டிய பிரசாதமும், சாதுக்களுக்கு வேண்டிய உணவும் தரப்பட்டது. உணவுப் பொருட்கள் வராதபோது சின்ன ஸ்வாமி ஊருக்குள் சென்று பிட்ஷை எடுத்து வந்தப் பொருட்களில் சமையல் செய்து வந்தார்.
அப்படியாக அந்த ஆசிரமம் வளர்ந்து கொண்டு வருகையில் இடை இடையே உணவு பற்றாக்குறை ஏற்படலாயிற்று. பக்தர்கள் கொடுத்த உணவுப் பொருட்கள் திருவண்ணாமலையில் இருந்த வாசுதேவ சாஸ்தரி என்பவர் வீட்டில்தான் வைக்கப்பட்டு இருந்தன. அவர்தான் அங்கிருந்து தினமும் ஸ்கந்தாஷ்ரமத்துக்கு சமையலுக்கு என உணவுப் பொருட்களை அனுப்புவார். அங்கிருந்துதான் தாயாரின் சமாதி  ஆலயத்துக்கும் உணவுப் பொருட்கள் சென்றன.
சில நேரங்களில் ஸ்கந்தாஷ்ரமத்தில் இருந்த சாதுக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. கிடைத்து வந்த சிறிய அளவிலான உணவுப் பொருட்களை இரண்டு இடங்களுக்கும் - ஸ்கந்தாஷ்ரமத்திற்கும், சமாதி ஆலயத்துக்கும்-அனுப்புவது கஷ்டமாக இருந்ததாக வாசுதேவ சாஸ்திரி கருதினார். ஆகவே அவர் ஸ்கந்தாஷ்ராமத்தில் இருந்த இராமநாத பிரும்மச்சாரி என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் அவர் 'பக்தர்கள் தரும் பொருட்கள் வசுதேவாவிற்கு அல்ல மாறாக வாசுதேவாவிற்காகத்தான் தருகிறார்கள்' என எழுதி அனுப்பினார். அதாவது பக்தர்கள் தரும் உணவுப் பொருட்கள் பகவானுடைய ஆசிரமத்துக்குத்தானே தவிற , மற்றபடி அதன் இன்னொரு பிரிவான சமாதி ஆலயத்துக்கு அல்ல என்றப பொருளில் அப்படி எழுதி அனுப்பினார். வாசுதேவா என்பவர் வசுதேவாவின் பெற்றோர்கள்.
இராமநாத பிரும்மச்சாரி அந்தக் கடிதத்தை எடுத்துச் சென்று பகவானிடம் காட்ட அவர் தன்னுடைய தாயாரின் சமாதியில் நடைபெற்றுக் கொண்டு இருந்த நிகழ்ச்ச்சிகள் அனைத்துமே சரியானவைதான் எனக் கருதினார். பகவான் ' வசுதேவா இல்லாமல் வாசுதேவா எப்படி இருக்க முடியும்?' என பதில் போடுமாறு  சொல்லி விட அன்றில் இருந்து சமாதிக்கு உணவுப் பொருட்களை அனுப்ப எதிர்ப்புத் தெரிவித்ததை வாசுதேவ சாஸ்தரி நிறுத்தி விட்டார்.
அதன் பின் பகவான் மலை மீது இருந்த ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதை கடவுளின் சித்தம் என்றே கூறினார். அது முதல் தனது தாயாரின் சமாதிக்கு அருகில் இருந்தக் குடுசையில் சென்று தங்கினார். அது குறித்து ஒருமுறை தேவராஜா முதலியார் என்பவரிடம் பேசியபோது பகவான் கூறினார்:
''என்னுடைய தாயாரின் சமாதிக்குப் பின்னால் ஸ்கந்தாஷ்ரமத்தில் இருந்த நான் அங்கு சென்றுவிட்டுத் திரும்புவது உண்டு. என்னுடையத் தாயார் இறந்து  போய்  ஆறு மாதத்திற்குப் பிறகு ஒருமுறை நான் அங்கு சென்று சிறிது நேரம் அமர்ந்துவிட்டு திரும்பினேன். நான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தபோது யாரோ என்னை அங்கிருந்து திரும்பிச் செல்லக் கூடாது எனத் தடுத்தார்கள். என்னால் எழுந்திருக்க முடியாமல் என்னுடைய கால்கள் இறுக்கமாக இருந்தன. ஆகவே அங்கேயே தங்கி விட்டேன். அப்படிப்பட்ட நிலையில்தான் அங்கு ஆஸ்ரமம் உருவாயிற்று. எவருக்குத் தெரியும் அது எப்படி வளரப் போகின்றது என்பது?''.
ஆக கடவுள்தான் அவரை அந்த சமாதி ஆலயத்தில் இருந்து ஸ்கந்தாஷ்ரமத்திற்குப் போக விடாமல் தடுத்து உள்ளார் என்பதே பொருத்தமாக இருக்கும். எளிமைக்கு எடுத்துக் காட்டாக அன்குய் இருந்த சிறிய இடத்தில்தான் பகவான் தங்கி இருந்தார். அதன் பின்னரே அதன் அருகில் இருந்த நிலத்தில் அவருடைய பக்தர்கள் ஒரு அறையைக் கட்ட 1928 ஆம் ஆண்டு முதல் அவர் அங்கு சென்று தங்கினார்.

 ரமண  மகரிஷி  1949 ஆம்  ஆண்டுவரை  தங்கிய கட்டிடம்

1920 ஆம் ஆண்டு அந்த சமாதிக்கு அருகில் பெரிய கட்டிடம் கட்ட வேண்டும் என பகவான் விரும்பினார். அந்த இடத்தின் அருகில் இருந்த நிலப் பகுதியில் உபயோகம் இல்லை எனப் போடப்பட்டு இருந்த செங்கல்களை உபயோகித்தே அந்தக் கட்டிடப் பணி  துவக்கப்பட்டது.
உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த உபயோகமற்ற செங்கல்களை பகவான் ஆஸ்ரமப் பணிக்கு எடுத்துக் கொண்டார். ஒரு நாள் இரவு மக்கள் பலரையும் அழைத்து ஒரு சங்கலித் தொடர் போல அந்தக் கற்கள் குவிந்துக் கிடந்த இடத்தின் அருகில் இருந்து ஆஸ்ரமம் வரை அவர்களை நிற்கச் சொல்லி ஒரு பகுதியின் துவக்கத்தில் தானே நின்று கொண்டு அனைத்துக் கற்களையும் சமாதிக்கு அருகில் கொண்டு போட்டார். தென்னக் கீற்றுக்களினால் வேயப்பட்ட ஓலை நான்கு பக்கங்களிலும் இருந்த சுவர்கள் மீது அமர்ந்து இருக்குமாறு எழுப்பப்பட்ட அறை பத்து வருடங்களாக  அதே இடத்தில் இருந்தது.
1930 ஆம் ஆண்டு முதல் ரமணாஷ்ரம் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. பசு மடம், சாப்பாட்டுக் கூடம், சமையல் அறை, சாமான்கள் வைக்கும் அறை, பாடசாலை மற்றும் ஆஸ்ரம அலுவலகம் என அனைத்தும் மடமட என நடக்கத் துவங்கி 1929 ஆம் ஆண்டு தொடங்கி 1938 ஆம் ஆண்டுக்குள் நிறைவேறின.
தாயாரின் சமாதி மீது நல்ல கற்களால் கட்டிடம் கட்டப்பட எண்ணிய ஆலயம் நிறைவேற்றப்படவில்லை. அப்படிப்பட்ட ஆலயம் கட்டுவது வெள்ளை யானையை வாங்குவது போல இருக்கும் எனவும் அத்தனை செலவை ஆஸ்ரமத்தினால் தாங்கிக் கொள்ள முடியாது என எண்ணிய பக்தர்கள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள். 1939 ஆம் ஆண்டு பகவானுடைய அறுபதாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது அப்படி ஒரு ஆலயம் எழுப்பப்படுவதில் தவறு இல்லை என ஒரு பிரிவு மக்கள் கூற மற்றொரு பிரிவோ பக்தர்களோடு ஆலய வருமானத்தில் இருந்து ஆலயத்தை விஸ்தரிப்பதை விட பக்தர்கள் வந்து தங்கும் அறைகளைக் கட்டி வசதி செய்து தர வேண்டும் என வாதாட சூடான விவாதம் நடைபெற்றது.
ஆலயம் எழுப்பக் கூடாது என வாதிட்ட பிரிவினர் ஆஸ்ரமத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆஸ்ரமத்தின் அருகிலேயே இன்னும் நிலம் வாங்கி உணவு தானியங்களைப் பயிரிடலாம் எனக் கருத்துக் கூறினார்கள். ஆனால் அவற்றை எல்லாம் பொறுமையாக கேட்டபடி மெளனமாக அமர்ந்து இருந்தார் பகவான். அவர் மனதில் என்ன ஓடியது என ஒருவருக்கும் தெரியவில்லை.
பகவான் ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தை சின்ன ஸ்வாமியிடம் ஒப்படைத்து இருந்த போதிலும் ஆலயத்தின் மற்ற மேம்பாட்டுப் பணிகளை தன்னுடைய நேரடிப் பார்வையில்தான் வைத்து இருந்தார். பகவானே எந்தக் கட்டிடத்தை எங்கு கட்டுவது, எதை விச்தாரிப்பது, எந்த அளவு செலவு செய்து அதைக் கட்டுவது மற்றும் எவரிடம் அந்தப் பணியைத் தர வேண்டும் என்ற அனைத்தையுமே தன்னுடைய நேரடிப் பார்வையில்தான் வைத்து இருந்தார். இப்போது உள்ள பல கட்டிடங்களுக்கும் பகவானே வரைப் படங்களைத் தயாரித்துக் கொடுத்து இருந்தார். மற்றப் பொறி இயல் வல்லுனர்கள் கொடுத்த வரை படங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆக  பகவானைத் தவிர வேறு எவருக்கும் கட்டிட நிர்மாணப் பணிகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருந்ததில்லை என்பது தெளிவாகியது.
1930 ஆம் ஆண்டு வரை அண்ணாமலை ஸ்வாமிகளே ஆஸ்ரமத்தில் கட்டப்பட்ட பெரிய கட்டிடங்களின் மேற்பார்வையை கவனித்து  வந்தார். தினமும் அவருக்கு நேரடியாக பகவானே உத்தரவுகளைத் தருவார். அவர் தினமும் கட்டிட வேலை எந்த அளவு நடைபெற்று உள்ளது என்பதை பகவானிடம் வந்துக் கூற வேண்டும். ஆகவே பகவானின் மனதில் என்ன எண்ணம் உள்ளது என்பதைக் கண்டறியும் பொறுப்பை அண்ணாமலை ஸ்வாமியிடமே சின்ன ஸ்வாமி ஒப்படைத்து இருந்தார். ''பகவான் அனைத்துக் கட்டிடப் பணிகளையும் நேரடியாக உங்களிடமே கூறுவதினால் தாயாருடைய சமாதியில் எப்படிப்பட்ட கட்டிடம் கட்ட வேண்டும், பெரிய அளவிலா, இல்லை சிறிய அளவிலா எனக் கேட்டுக் கூறு'' என்று அவரிடம் சின்ன ஸ்வாமி கூறி இருந்தார்.
பகவான் இறுதியாக தனது மனதைத் திறந்துக் காட்டினார். ''அதை பெரிய அளவில் கட்டினால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்''. அதைக் கேட்ட சின்ன ஸ்வாமியும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். ஏன் என்றால் அவர் மனதிலும் தாயாரின் சமாதியில் பெரிய ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆகவே அதற்கான பணிகளை உடனேயே துவக்கினார். அது மிகவும் நுணுக்கமானக் கட்டிடமாக அமைய இருந்ததினால் ஒரு பொறியியல் வல்லுனரை நாடினார். அந்தக் காலங்களில் கட்டிடக் கலையிலும், கட்டுமானப் பணிகளிலும் பிரபலமாக இருந்த வைத்தியநாத ஸ்தபதி என்பவரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் கட்டிடம் கட்டுவதில் மிகவும் திறமையானவர்களை தன்னுடன் அழைத்து வந்து இருந்தார்.
அந்தக் கட்டிடம் கட்டத் துவங்கியபோது ஆஸ்ரமத்தில் அதிகப் பணம் இல்லை. பகவானுக்குத் தெரியும் கட்டிடம் கட்ட அதிக அளவில் பணம் தேவைப்படும். ஆனால் அதை எவரிடமும் கேட்காமல் வரும் பணத்தில்தான் கட்ட வேண்டும் என்றும், ஆஸ்ரமத்தின் பெயரால் பணம் வசூலிக்கக் கூடாது எனவும் சின்ன ஸ்வாமி மற்றும் அங்கிருந்தவர்களிடம் பகவான் அடிக்கடிக் கூறி வந்தார்.
ஆனால் கட்டிடம் கட்ட அதிகப் பணம் தேவைப்பட்டதினால் சின்ன ஸ்வாமி பகவானிடம் கூறாமல் நன்கொடைகளை வசூலிக்கத் துவங்கினார். அந்த நிலையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி டி. ஆர் . ராமச்சந்திரன் கூறினார்:
''ஒரு முறை பணப் பற்றாக்குறை அதிகம் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் மும்பை நகரில் இருந்து சுகன்லால் யோகி என்ற பக்தர் முதன் முதலாக ஆஸ்ரமத்திற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் சின்ன ஸ்வாமி என்னிடம் கூறினார் 'உடனடியாக நமக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டும். ஆகவே நாம் மூவரும் ஜம்னாலால் பஜாஜ்ஜிடம் சென்று நன்கொடையை ஏன் பெற்று வரக் கூடாது?. எனக்கு நீங்கள் சுகன்லால் யோகியை பரிச்சயம் செய்து வைத்தால் நான் அவரிடம் கேட்கிறேன்'.
சுகன்லால் யோகிக்கு அந்த திட்டத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் தான் முதன் முதலாக ஆஸ்ரமத்துக்கு வந்து உள்ளதினால் தனக்கு வெட்கமாக இருப்பதாகக் கூறிவிட்டு கடைசியில் அவர்களுடன் செல்லச் சம்மதித்தார். சின்ன ஸ்வாமி பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டார். அடுத்த முக்கியத் தடையை இனி  கடக்க வேண்டும். அது குறித்து பகவானிடம் சென்று கூற வேண்டும். அது வரை பகவானிடம் சின்ன ஸ்வாமி நேரடியாக எதையும் கூறியதே இல்லை. யார் மூலமாவதுதான் எதையுமே கூறுவார். ஆகவே இம்முறை என்னை பகவானிடம் பேசுமாறுக் கூறினார்.
நான் போய் எப்படி பகவானிடம் கூறுவது?, நீங்களும் உடன் வாருங்கள் என நான் அவரையும் அழைத்தேன். ஆனால் அதற்கான தைரியம் சின்ன ஸ்வாமிக்குக் கிடையாது என்பதினால் தன்னுடன் வேறு சிலரையும் அழைத்து வந்தார். அன்று மதிய வேளை. பகவான் உணவு அருந்தி விட்டு ஓய்வாக இருந்தார். நாங்கள் அவர் முன் போய் நின்றபோது எங்களை பகவான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வேறு எங்கேயோ வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
எங்களில் யார் முதலில் பேச்சைத் துவக்குவது என தடுமாறிக் கொண்டு இருந்தபோது முனுஸ்வாமி என்பவர் பேச்சைத் துவக்கினார். நீண்ட நேரம் பகவான் எதுவுமே கூறவில்லை. அதன் பின் கூறினார் ''நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். என் பெயரில் நன்கொடைகளை வசூலிக்காதீர்கள். இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். எது நடக்குமோ அது நிச்சயம் நடக்கும்''. அப்படிக் கூறியபின் மேலும் தொடர்ந்து கூறினார் ''நீங்கள் எதற்கு என்னுடைய அனுமதி இருக்கின்றதா, இல்லையா எனக் கேட்டால் என்ன பதில் கூறுவதாக யோசனை செய்து உள்ளீர்கள் ?''
சகன்லால் யோகி அந்த தருமணத்தை  எதிர்பார்த்து இருந்தவர் போலக் கூறினார் '' நிச்சயமாக உங்கள் பெயர் இல்லை என்றால், ஒரு பைசா கூட வசூல் ஆகாது''. அதன் பின் ஒருவர் மாற்றி ஒருவராக வெளியில் வந்துவிட சின்ன ஸ்வாமியின் திட்டம் நின்று விட்டது. அதன் பின் ஒருமுறை பகவான் கூறினார் ''நாம் இதுவரைக் கட்டிட கட்டிடங்கள் அனைத்திற்கும் நாம் கேட்ட பணம் வசூல் ஆயிட்ட்று?. எது நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டே இருக்கின்றது. எவருடைய முயற்சிகளினால் மட்டுமே அவை அனைத்தும் நடந்து விடாது.  அது போலவே பகவானின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அண்ணாமலை ஸ்வாமிகள் மூலமே நான் அறிந்து கொண்டேன். அவர் என்னிடம் கூறினார்:
கட்டுமானப் பணியில் ஈடு பட்டவர்கள் தினக் கூலி பெற்றுக் கொண்டு இருந்தவர்கள். அவர்கள் வேண்டும் என்றே அதிக சம்பளம் பெற வேண்டும் என்பதற்காக தினமும் குறைவான அளவில் வேலை  செய்து கொண்டு இருந்தனர். ஆகவே ஆஸ்ரமத்தின் கட்டுமானப் பணி கூலிக்கு ஏற்ப செலவிடப்படுகின்றதா என்பதைக் கண்டறியும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டு இருந்தது. எனக்கோ அதற்கு முன் கட்டிடம் கட்டிய அனுபவம் கிடையாது. ஆனால் அந்தக் கட்டிடப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களின் கூலி மிகவும் அதிகமாக இருந்தது போல தோன்றியது. அவர்கள் வேண்டும் என்றே குறைந்த அளவு வேலை  செய்து பணியை முடிக்க நிறைய நாட்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றும் அது ஆஸ்ரமத்தை ஏமாற்றும் வேலை என்றும் அவர்களிடமே கூறினேன். அது அவர்களுடைய காதுகளில் ஏறவில்லை. அதே முறையில்தான் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.
அவர்களில் ஒருவன் கூறினான் 'நீங்கள் அனைவரும் இந்த ஆஸ்ரமத்தில் ஒரு வேலையும் செய்யாமல் தின்று கொண்டு எங்களுக்கு அறிவுரைக் கூறுகிறீர்களா? நாங்கள் மெதுவாக வேலை செய்வதினால் ஆஸ்ரமத்திற்கு நஷ்டம் எதுவும் ஏற்பட்டு விடப் போவது இல்லை '
மீண்டும் மீண்டும் அவர்களை திருத்த முயன்று தோல்வி பெற்ற நான் அது குறித்து பகவானிடம் கூறினேன் ' ஆலய கட்டிடத் தொழிலாளிகள் மிகவும் மெதுவாக வேலை செய்கிறார்கள். தினமும் நான் எழுதிக் கொடுக்கும் கணக்கின்படி சின்ன ஸ்வாமி அவர்களுக்கு கூலிப் பணம் தருகிறார். ஆஸ்ரமத்தின் பணம் இப்படியாய வீனாகுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால் அவர்களை வேலையில் இருந்து விளக்கும் அதிகாரமும் என்னிடம் இல்லை. அவர்கள் செய்யாத அளவு வேலைக்கு நான் கணக்கு எழுதினால் அது ஆஸ்ரமத்தை ஏமாற்றியது போல் ஆகாதா?' என்றேன்.
பகவான் கூறினார் 'அதற்காக கவலைப்படாதீர்கள் . அவர்கள் ஆஸ்ரமத்தை ஏமாற்றி செய்யாத அளவிற்கு கூலி பெற்றுக் கொண்டால் அந்தப் பணம் அவர்களுக்கு நிலைக்காது. அவர்களிடம் கடைசியில் சுத்தியல் மட்டுமே மிஞ்சி நிற்கும். அவர்கள் ஏமாற்றிப் பெற்றப் பணம் அவர்களிடம் நிலைக்காது. அவர்கள் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர்கள் தங்களை தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.' சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் கூறினார் 'கட்டிட வேலைக்கு ஆகும் செலவைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். அதற்க்கு  தேவையான அளவு பணத்தை நமக்கு கடவுள் கொடுப்பார்''.
அண்ணாமலை ஸ்வாமிகளிடம் பகவான் கூறியதுபடிதான்  நடந்தது. ஆஸ்ரமத்தில் எத்தனை பணப் பற்றாக்குறை இருந்தாலும் கட்டிட வேலைகள் நிற்காமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன. சில நாட்களில் தினக் கூலி தருவதற்கும் கூட நன்கொடைகளை நம்பியே இருக்க வேண்டியதாயிற்று. காலையில் கூலிக்கு வேலையாட்களை அழைக்கும்போது ஆஸ்ரமத்தில் அன்றைக்கான கூலியைத் தரும் அளவிற்குப் பணம் இருக்காது. ஆனால் மாலைக்குள் கூலி தரும் அளவிற்கு பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

 
 ஆலய  கும்பாபிஷேகத்தின் போது 

தினமும் பகவான் ஆலயக் கட்டுமான பகுதிக்கு வந்து எந்த அளவு கட்டிடப் பணிகள் நடந்து உள்ளன என்பதைப் பார்த்துவிட்டுச் செல்வார். எங்கெல்லாம் குறைகள் இருந்தனவோ அவற்றை எல்லாம் சீர் செய்யுமாறு கட்டளை இட்டுவிட்டுச் செல்வார். ஒரு முறை கர்பக் கிரகத்தில் கொடி  மரம் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டு இருந்தக் கற்களின் இடைவெளி அதிகம் இருந்ததை சுட்டிக் காட்டினார். மற்றொருமுறை சுவற்றில் ஏற்பட்டு இருந்த வெடிப்புக்களுக்கு சரியானபடி சிமெண்ட் போடுமாறுக் கூறினார் .
சில முறை பகவான் தானே வந்து வேலைகளை செய்வது உண்டு. கர்பக்கிரகம் முடிந்தவுடன் அதன் நுழை வாயிலில் பெயர் பொரிக்க வேண்டும் என பகவான் எண்ணினார். அது எப்படி நடந்தது என்பதை அண்ணாமலை ஸ்வாமிகள் கூறினார்:
 ''கர்பக்கிரகத்தை நோக்கினால் நுழை வாயிலில் இரண்டு யானைகள் இருப்பது தெரியும். அதன் அடியில் உள்ள ஒரு கல்லில் அந்த ஆலயத்தின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளதைக் காணலாம். அதில் 'மாத்ருபூதேஸ்வராலயம்' என எழுதப்பட்டு உள்ளது. அதன் அர்த்தம் தாயின் உருவில் அமர்ந்து உள்ள கடவுள் ஆலயம் என்பது. அதை பகவான் சமிஸ்கிருத மொழியில் பெரியதாக பகவான் எனக்கு எழுதிக் காட்டினார். அந்த எழுத்துக்களை கத்தரித்து கல் மீது வைத்து அப்படியே வண்ணம் பூசிவிட்டால் ஸ்தபதிகள் அதை அப்படியே செதுக்கி விடலாம் என்பது பகவானின் எண்ணம்.
நான் பகவானின் முன்னால் அமர்ந்து கொண்டு எழுத்துக்களை கத்தரித்துக் கொண்டு இருந்தேன்.என் முழு கவனமும் அதன் மீதே இருந்ததினால் சுற்றிலும் நடப்பதைப் பார்க்கவில்லை. பகவான் என்னைப் பார்த்துக் கொண்டே அங்கு இருந்திருக்கின்றார். மதியம் மூன்று மணி ஆயிற்று. சாதாரணமாக பகவான் அப்போது சிறுநீர் கழிக்கச் செல்வது உண்டு. ஆகவே பகவான் எழுந்து வாயிலை நோக்கிச் சென்றார். பகவான் எழுந்து செல்வதைக் கண்ட அனைவரும் மரியாதைக்காக எழுந்து நின்றார்கள். நான் மட்டும் வேலையில் க்டவனமாக இருந்துவிட்டேன். எனக்குப் பின்னால் இருந்தவர் முணுமுணுத்தார் 'பகவான் எழுந்து வந்தும் மரியாதை இன்றி எழுந்திருக்கவில்லை. வேலையையும் நிருத்தவில்லைப் பார்'.
அதைக் கேட்ட பகவான் தன்  மனதை மாற்றிக் கொண்டு வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். என் தோள் மீது கையை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டார். என் வேலை முடியும்வரை என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்துவிட்டு அதன் பின்னரே எழுந்து போய் தன்  இருக்கையில் அமர்ந்து கொண்டார். அதன்பின் எவரும் எதுவும் கூறவில்லை. நான் பகவானை அவமதிக்கவில்லை என்பதை உணர்ந்தார்கள்.
நான் கத்தரித்து வைத்ததை வாசலில் சென்று எங்கு அவற்றை செதுக்க வேண்டுமோ அதன் மீது வைத்து வண்ணம் பூசத் துவங்க அங்கு வந்த ஸ்தபதி கத்தினார் ' செய்வதை நிறுத்துங்கள். அந்த வேலையை முறைப்படி செய்பவன் நான் இருக்க நீங்கள் எப்படி அதை செய்ய முடியும்?'.
என் பக்கத்தில் நின்று கொண்டு நான் செய்வதை கவனித்துக் கொண்டு இருந்த பகவான் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார் ' நான்தான் அதை செய்யுமாறு அவரிடம் கூறினேன்'.
1949 ஆம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டு முடிந்தது. அதைக் கட்டி முடிக்க பத்து வருடங்கள் ஆயின. அந்த ஆலயத்தின் உள்ளே 1928 ஆம் ஆண்டு முதல் பகவான் வசித்து வந்த அறையை மாற்றி பளிங்குக் கற்களால் ஆன பெரிய கூடம் கட்டப்பட்டது. அவர் அமர்ந்து கொள்ள வசதியாக பெரிய இருக்க செய்து வைக்கப்பட்டது. ஆனால் பகவான் அதில் அமரவோ இல்லை அங்கு வந்து வாசிக்கவோ விரும்பவில்லை என்பதை தெளிவாகவே கூறி விட்டார். அதற்க்குக் காரணம் மலை மீது இருந்த குரங்குகளும், அணில்களும் தம்மிடம் வரத் தயங்கும் என்றார். மேலும் அந்த இருக்கை  மீது கடவுள் சிலையை வைக்குமாறு கூறினார். ஆனால் கடைசியாக எல்லோருடைய வற்புறுத்தலையும் ஏற்று அந்த அறையில் வந்து தங்க சம்மதித்தாலும் அது குறித்து  தன்னுடைய  மனக் குறையை  கூறிக் கொண்டே இருந்தார்.
சிறிது காலம் பொறுத்து அந்த கிராமத்தில் இருந்த சிலர் புது வீட்டில் குடியேறிய அவரை கும்பலாக வந்து தரிசித்தார்கள். அந்த நேரத்தில் பகவான் 'இத்தனை  பெரும் செலவில் கட்டப்பட்டு உள்ள அறைக்கு வந்து தரிசனம் செய்ய ஏழைகள் தயங்குகிறார்கள்' என்று கூறிவிட்டு அந்தப் புதுக் கட்டிடத்தில் ஆறுமாத காலமே தங்கினார். மற்ற மாதங்களில் அனைவரும் வந்து தன்னை தரிசனம் செய்யும் வகையில் மகா நிர்வாணா என்ற அறையில்தான் இருந்து வந்தார்.
அந்த ஆலயமும் புதுக் கட்டிடமும் தாயாரின் நினைவுக்காகவே ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் சின்ன ஸ்வாமிக்கு அந்த இடத்தில் பகவான் சமாதி அடைந்தப் பின் அவருடைய சமாதியையும் (பகவானின் சமாதியை) அங்கேயே அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆலயத்தின் வடபக்க நுழை வாயிலில் பெரிய கதவு அமைத்து அதை பகவானின் சமாதிக்கு நுழை வாயிலாக ஆக்க வேண்டும் எனக் கருதி இருந்தார். தன்னுடைய சுய சரித்திரத்தில் அது குறித்து கே.கே . நம்பியார் என்பவர் எழுதி உள்ளார் ' வடக்குப் பக்கத்தில் தேவைப்பட்டால் ஒரு சமாதியை அமைக்கும் வகையில் கட்டிடத்தை அமைத்திடுமாறு சின்ன ஸ்வாமி என்னிடம் கூறி இருந்தார்'.
வடக்குப்புற ஹாலில் பெரிய நுழை வாயில் அமைத்து கட்டிடம் எழுப்ப பகவானின் அனுமதியைக் கேட்டு சின்ன ஸ்வாமி வரைப் படம் அனுப்பி இருந்தார். ஆனால் பகவான் அதை ஏற்காமல் இப்போது உள்ள நிலையிலேயே கட்டிடத்தை அமைக்க வேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறி விட்டார். அதில் இருந்தே பகவான் தன்னுடைய தாயாருக்கு ஆலயம் எழுப்ப ஒப்புக் கொண்டாலும் அங்கு வந்து தான் தங்கவோ இல்லை அங்கு தனக்கு சமாதி எழுப்புவதையோ ஒருபோதும் விரும்பவில்லை என்பது தெரிந்தது. 1949 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகம் அந்த ஆலயத்தின் உச்ச கட்டமாக அமைந்து இருந்தது.
நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் இருந்தும் வந்தார்கள். இறுதி நாளன்று 15000 மக்களுக்கு உணவு போடப்பட்டது. மதுரையில் இருந்து அன்றைய மதராஸ் (இன்றைய சென்னை) எனப்படும் நகருக்கு சென்று திரும்ப விசேஷ ரயில் வண்டிகள் விடப்பட்டன. உள்ளூர் தபால் சேவை நிலையம் ஒரு வார காலத்துக்கு பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இருந்து வரவும், அங்கு செல்லவும் இருபத்தி நான்கு மணி நேர பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. பூரி சங்கராச்சாரியார் தலைமையில் இருநூறு பூஜாரிப்கள் அந்த விழாவை நடத்தி வைத்தார்கள். பகவான் தானே ஸ்ரீ சக்கரத்தில் சக்தியை ஏற்றி அதை மூல ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். 1922 ஆம் ஆண்டு தேங்காய் மாற ஓலையினால் வேயப்பட்ட சிறு கூரைக்கு அடியில் இருந்த ஆலயம் மெல்ல மெல்ல வளர்ந்து நின்றது.

பகவான் அது குறித்து டி.ஆர். ராமச்சந்திர ஐயரிடம் பேசும்போது கூறினாராம் ''நன் என்னுடைய தாயாரின்  உடலை விடிவதற்குள் ஆரவாரம் இன்றி எடுத்துச் சென்று புதைத்து விடுமாறு கூறி இருந்தேன். ஆனால் எது நடக்க வேண்டுமோ அது நடந்து விட்டது பாருங்கள். ஆரவாரம் இல்லாமல் புதைக்கப்பட்ட உடல் மீது எத்தனை கலகலப்பான கட்டிடங்கள் எழுந்து விட்டன''.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E