Guhai Namachivaya- Thiruvannamalai

 
(Read the Original Article  ''Guhai Namasivaya '' written 


 
 குகை நமச்சிவாயா

இரமண மகரிஷி சுமார் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்து வந்த விருபக்ஷா குகை அருணாச்சல மலை அடிவாரத்தில் சுமார் நூறு மீட்டர் கீழே அமைந்து உள்ளதைக் காணலாம். கோபுரத்தின் கிழக்கு வழியே உள்ளே செல்ல வேண்டிய குகையில்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்  குகை நமச்சிவாயா என்ற யோகி வாழ்ந்து வந்துள்ளார். அதனால்தான் அந்த குகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் அவர் பெயரிலேயே அமைந்து உள்ளன.
கீ. பீ 1548 ஆம் ஆண்டில் கர்னாடகாவின்  ஒரு சைவ பிரிவை சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவரே குகை நமச்சிவாயா என்பவர். அவரைப் பற்றிக் கூறப்பட்டு உள்ள வரலாற்று செய்திகளில் அவர் சிறு வயதிலேயே நன் நடத்தையுடன் இருந்து வந்தார், அவர் தெய்வீக நாட்டம் கொண்டவர் என்றும் படிப்பிலும் நாட்டம் இன்றி  உலகப் பற்றிலும் நாட்டம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருந்த அவர் தனது இளமைப் பருவத்திலேயே கடவுளைக் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தார் என்றும் கூறப்பட்டு உள்ளது. அப்படியாக அலைந்து கொண்டு இருந்தவர் ஸ்ரீ சைலத்தில் இருந்த சிவானந்த தேசிகர் என்பவரிடம் சென்று சிஷ்யராக சேர்ந்து அவருக்கு தன்னலம் அற்ற பணிவிடைகளை செய்து கொண்டு இருந்தார்.
சிவானந்த தேசிகர் வீர சைவப் பிரிவை சேர்ந்தவர். வீர சைவர்களுக்கு  என தனிப்பட்ட பல பழக்க வழக்கங்கள் உண்டு. ஆகவே சிவானந்த தேசிகரிடம் குகை நமச்சிவாயா சிஷ்யராக சேர்ந்ததினால் அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வது அவசியம் ஆகின்றது .
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவப் பிரிவில் இருந்து வெளியேறியவர்கள் வீர சைவர் என்ற  பிரிவைத் துவக்கினார்கள். இருபத்தி எட்டு சைவ ஆகமங்களின் அடிப்படையில் அவர்களது தத்துவங்கள் அமைந்து இருந்தன. வீர சைவர்கள் லிங்கா அதாவது சைதன்யா என்ற ஆன்மீக விழிப்புணர்ச்சியை முக்கியமாகக் கருதியவர்கள். சிவனடியார்களான அவர்களை லிங்காயத்தினர் என்றும் அழைத்தார்கள்.
அவர்களின் தத்துவப்படி உபனிஷத்துக்களில் கூறப்படும் பிரும்மன் என்பது சிவலிங்கம் ஆகும். பிரபஞ்சத்தில் ஆன்மீக விழிப்புணர்ச்சியை தந்து கொண்டிருக்கும் பிரும்மனை  லிங்க உருவில் பார்த்து அனைத்து லிங்க ரூபத்தையும் அவர்கள் வழிபட்டார்கள். அருணாச்சலாவில் குகை நமச்சிவாயா வாழ்ந்து கொண்டு இருந்தபோது அவரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த நெருப்புப் பிழம்பைப் போன்றவர் என்று கருதினார்கள்.
வாழ்கையின் இறுதியில் சிவபெருமானுடன் ஐக்கியமாகி விட வேண்டும் என்பதே அவருடைய குறிகோளாக இருந்தது. எவர் ஒருவர் அந்த நிலையை எட்டி விட்டாரோ அவரையே குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்கு சிஷ்யராகி விட்டால் அந்த லட்சியத்தை தாமும் எட்ட முடியும் என்று நம்பினார்.
எந்த ஒருவன் அப்படிப்பட்ட குருவைக் கண்டுபிடித்து அவரிடம் தீட்ஷை பெறுகின்றானோ அந்த நேரத்தில் இருந்து வீர சைவரான ஒருவருக்கு ஆன்மீகப் பயணம் துவங்கி விடுகின்றது. சாதாரணமாக ஒரு குருவானவர் சுமார் ஒரு வருட காலம் தன்னிடம் வந்துள்ள சிஷ்யரின்  ஆன்மீக ஈடுபாட்டை சோதனை செய்து பார்த்தப் பின்னரே அவருக்கு தீட்ஷை தந்து தன்னுடைய சிஷ்யராக ஏற்றுக் கொள்வார். அப்படி தீட்ஷை கொடுக்கையில் தன்னிடம் வந்துள்ள சிஷ்யரின் உடலின் உள்ளே உள்ள மூன்று நிலைகளிலும் லிங்க சக்தியை செலுத்துவார். அந்த தீட்ஷையையின் முதல் கட்டத்தை வீர சைவர்கள் 'மாலா' என அழைக்கின்றார்கள். அதுவே அவர்களை தூய்மைப்படுத்தும் முதல் கட்டம் ஆகும்.
அதன் பின் அந்த குரு தன்னிடம் வந்துள்ள சிஷ்யரின் தலைமீது கையை வைத்து அவருடைய ஆத்மாவுடன் கலந்து உள்ள 'பாவலிங்கா' என்ற விழிப்புணர்வில் இருந்து மேன்மையான 'நான்' எனும் 'ஆன்ம'  விழிப்பு உணர்ச்சியை மேலே கொண்டு வருவார். அதே நேரத்தில் அவர்களுக்குள் தீய உணர்வுகள் ஊடுறுவி இருந்தால் அவற்றை அவர் அங்கேயே அழித்தும் விடுகிறார். அடுத்து அவர் வலது காதில் 'நமச்சிவாயா' என்ற தாரக மந்திரத்தை ஓதுகிறார். அப்படி ஓதப்படும் அந்த மந்திரத்தை வீர சைவர்கள்  அது ஒப்பற்ற மந்திரம் என்றே கருதுகிறார்கள். காதில் ஓதும் அந்த வார்த்தைகள் உள்ளுக்குள் மெல்லிய இழைப் போல ஊடுருவி 'பிராணலிங்க' என்ற லிங்க நிலையை நிலைப்படுத்துகின்றது.
அந்த மந்திரத்தின் சக்தி என்ன என்றால் அது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி உள்ளுக்குள் ஊடுறுவி உள்ளே உள்ள  தீய சக்திகளை அழிக்கின்றது. அந்த முக்கியமான சடங்கு முடிந்ததும் தன்னிடம் வந்துள்ள சிஷ்யரிடம் ஒரு சிறிய லிங்கம் தருவார்கள்.
அந்த லிங்கமோ ஒளி பாய்வது போல சிஷ்யர்களின் இதயத்தில் ஊடுருவிச் சென்று ஆன்மீக விழிப்புணர்வைத் தந்து ஒரு குருவானவர் ஒரு சிஷ்யரிடம் எதை எதிர்பார்க்கின்றாரோ அதை நிறைவேற்றும் வகையில் சிஷ்யர்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
குருவானவர்  தனது சிஷ்யரிடம் கடைசி சடங்கான லிங்கத்தைக் கொடுக்கும் முன்னால் சிஷ்யர்களுக்குள் உள்ள லிங்க சக்தியை எடுத்து அதை உருவேற்றி அந்த லிங்கத்தை அவர்களது இஷ்ட லிங்கமாக மாற்றித்  தர அதை சிஷ்யர்கள் சிவபெருமானாகவே கருதி வழிபடத் துவங்குவார்கள். அந்த இஷ்ட லிங்கத்தை ஏற்கும்போது அவர்களுடைய பாவச் செயல்களினால் ஏற்பட்டு இருந்த தீய வினைப் பயன்கள் விலகி ஓடுகின்றன. இஷ்ட லிங்கத்தை எப்போதும் தன் உடல் மீது படும்படி  போட்டுக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் அதை வழிபட வேண்டும் என்று குருவானவர் தன்னிடம் வந்துள்ள சிஷ்யரிடம்  கூறுவார். அந்த லிங்கத்தை எந்த நிலையிலும் அவர்கள் உடலில் இருந்து எடுத்துவிடக் கூடாது என்றும், என்று அதை கயற்றி விடுவார்களோ அன்றைக்கே அவர்கள் ஆன்மீகத்தில் மரணம் அடைந்து விட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று எச்சரிக்கை தரப்படும். அதனால்தான் ஆசாரமான வீர சைவர்கள் தன்னிடம் உள்ள இஷ்ட  லிங்கம் அல்லது குருவின் சமாதி மீது உள்ள லிங்கத்தைத்  தவிர வேறு லிங்கங்களை வழிபடுவதை முடிந்தவரை  தவிர்த்து வருவார்கள்.
குகை நமச்சிவாயா அப்படிப்பட்ட கடுமையான விதி முறைகளைக் கொண்ட தீட்ஷையை இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டு இருந்தார். அப்படிப்பட்ட தீட்ஷைகளை எட்டு வயதில் பெறுவது என்பது அந்த காலங்களில் பெரிய விஷயமே இல்லை. சிவானந்த தீட்சதர் வீர சைவர்களின் சிவயோகம் என்றக் கலையில் வல்லுனர்  ஆகவே சிவானந்த தீட்சதர் இளம் வயதானாலும் முதிர்ந்த அறிவுள்ளவராக குகை நமச்சிவாவை பார்த்ததினால் அவருக்கு தீட்ஷை தர சம்மதித்தார். அது முதல் குகை நமச்சிவாயா குருவிற்கான உடலளவிலான சேவையை செய்து கொண்டு சிவயோகக் கலையும் முறையாக செய்து வந்ததினால் விரைவிலேயே சிவயோகியாக மாறினார்.
சிவயோகம் என்பது பதஞ்சலி யோகத்தின் கடைசி மூன்று நிலைகளைக் கொண்டு அமைந்த 'தாரணா', 'தியானா' மற்றும் 'பாவா' போன்ற மூன்று நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்தாலும் ஒருவருடைய உள்ளத்தில் ஊடுருவி இருந்த மூன்று நிலைகளிலும் குரு செலுத்தி இருந்த லிங்கத்தை தியானிப்பதே முக்கியமான கடமையாகக் கருதப்பட்டது.
சிவயோக முறைப் பயிற்சியில் முதலில் குரு தந்து இருந்த இஷ்ட லிங்க வழிபாட்டை 'தாரணா' எனவும், உள்ளுக்குள் செலுத்தப்பட்ட பிராண லிங்க வழிபாட்டை 'தியானா' என்றும் அவர் வெற்று உடம்புக்குள் செலுத்தி இருந்த பாவ லிங்க வழிபாட்டை 'சமாதி' என்றும் அழைத்தார்கள். 'மக்யேய மாயிதேவா' ( Maggeya Mayideva ) என்ற வீர சைவ துறவியின் கூற்றுப்படி வெளியில் தெரியும்  ஒளி   வெள்ளத்தையும் மனதிற்குள் உள்ள லிங்கத்தையும் தியானித்தபடி அமர்ந்து உள்ள நிலையே சமாதி நிலை எனப்படும்.
அவர்கள் யோக வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்? இடது கையில் இஷ்ட லிங்கத்தை வைத்து இருக்க வேண்டும். உடலின் மற்ற உறுப்புக்களின் இயக்கத்தை நிறுத்திவிட்டு மூச்சை இறுக்கப்  பிடித்து வைத்துக் கொண்டு பிராணாயமா செய்து மனத்தைக் கட்டுப்படுத்தி வைத்தவாறு இஷ்ட லிங்கத்தை கண்களால் பார்த்துக் கொண்டே மனக் கண்ணை  பிராணாயமாவின் மீது வைத்துக் கொண்டு மன உணர்வுகளை பாவ லிங்கம் மீது செலுத்தி மூன்று லிங்க நிலைகளையும் ஒன்றாக்கி வைத்துக் கொண்டு நான் என்ற நிலையை எட்டவேண்டும் .
சிவயோகம் என்பதே ஒருவருடைய இதயத்துக்குள் சிவபெருமானின் எண்ணங்களை ஆழமாக எழச் செய்வதுதான். ஒரு விதத்தில் பார்த்தால் பக்தி எனும் போர்வையில் அமைந்து உள்ள சிவயோகமும் குண்டலினி யோகம் போன்றதுதான். சிவயோகம் என்பது தன்னை கடவுளுடைய சக்தியுடன் இணைத்துக் கொள்வதுதான். அது எப்படி நடைபெறுகிறது என்றால் உடலுக்குள் உள்ள சூஷ்மத்தில் ஊடுருவிச் செல்லும் பிராணா என்பது ஆறு சக்கர நிலைகளையும் கடந்து சென்று தலையில் உள்ள பிரும்மாந்திராவை அடைகிறது. மாபெரும் சிவயோகிகள் மரணம் அடையும் முன்னர் தனது அனைத்து சக்திகளையும் பிரும்மாந்திராவுக்கு செலுத்தி அங்கு ஊடுருவி உள்ள சிவ உணர்வுகளுடன் கலந்து விடுகிறார்கள்.
குகை நமச்சிவாயாவும் இப்படிப்பட்ட யோகக் கலையை பல ஆண்டுகள் கற்று இருந்துள்ளார். அவர் அதில் முழு அளவில் திறமை பெற்று இருந்த சமயத்தில் ஸ்ரீசைல ஸ்ரீ மல்லிகார்ஜுனா அவர் கனவில் தோன்றி அவரை அருணாசலாவிற்குச்  சென்று ஒரு குருவாக இருந்து கொண்டு தன்னிடம் வந்து சேரும் தகுதியான சீடர்களுக்கு அவற்றை போதிக்குமாறு கூறினார். ஆகவே குகை நமாச்சிவாயா அது குறித்து தன்னுடைய குருவான சிவானந்த தீட்ஷதரிடம் கூறியபோது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் குகை நமச்சிவாயாவுக்கு ஆசிகளை வழங்கி அந்தக் கட்டளையை ஏற்று நடக்குமாறுக் கூற அவர் ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு திருவண்ணாமலைக்குப் பயணம் ஆனார்.

 
 விருபக்ஷா குகைக்கு  செல்லும் நுழை வாயில் 

தன்னை விருபஷ்ச குகை எனக் கூறிக் கொண்ட விருபஷ்ச தேவரும் அவரை வழியில் சந்தித்து அவருடன் தானும் சென்றார் என்ற நம்பிக்கை திருவண்ணாமலையில் உண்டு. (விருபஷ்ச தேவர் என்பது ரமண மகாரிஷியைக் குறிப்பதாக நான் நினைக்கின்றேன் - சாந்திப்பிரியா) அதனால்தான் பல சமயங்களில் ரமண மகரிஷி தமது பக்தர்களிடம் தாம் இருவரும் கர்னாடக மானிலத்தில்   இருந்து வந்த இரண்டு வீர சைவர்கள் எனவும் இருவரும் இணைந்தே திருவண்ணாமலைக்கு வந்ததாகவும் கூறி உள்ளாராம். அவர்கள் இருவருமே சிவானந்த தீட்ஷதருக்கு பன்னிரண்டு வருடங்கள் சேவை செய்து உள்ளார்களாம். விருபஷ்ச தேவர் அங்குள்ள விருபஷ்ச குகையில் இருந்துள்ளார் என்பதைத் தவிர அவரைப் பற்றிய வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர் மரணம் அடைந்ததும் அவர் உடலை சாம்பல் (வீபுதி ) ஆக்கிக் கொண்டார்  என்ற செய்தி மட்டுமே உள்ளதினால் அந்த வீபுதியை இன்றும் அந்த குகைக்குள் வைத்து தின பூஜைகள் செய்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டு இருந்த குகை நமச்சிவாயா வழியில் ஒரு கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்த திருமண இடத்துக்குச் சென்றார். அந்த வீட்டினர் அவரை அன்புடன் வரவேற்று அவருக்கு பூஜைகளை செய்தார்கள். அவருக்கு பூஜைகளை செய்து முடித்ததும் அங்கிருந்த அனைவருக்கும் குகை நமச்சிவாயா வீபுதியைத் தந்தார்.  அந்த நிகச்சி நடைபெற்ற அடுத்த சற்று நேரத்தில் அந்த வீடு தீப்பற்றி எரிந்து விட்டது. அங்கிருந்த அனைவரும் அதற்குக் காரணம் குகை நமச்சிவாயா தந்த வீபுதியே காரணம் என அவரை வசைமாறிப் பொழிந்தார்கள். அதனால் அவர் மனம் துயரம் அடைந்தது. அவர் வருத்தம் எல்லாம் சிவபெருமானின் வீபுதி மீது  பழி போட்டு விட்டார்கள் என்பதே.

 
 குகை நமச்சிவாயா- ஆலய சன்னதி
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆலயத்தின் தோற்றம் 

உடனேயே அவர் சிவபெருமானை நினைத்தவாரே அங்கேயே தியானத்தில் அமர்ந்து கொண்டு பிரார்த்தனை செய்ய எரிந்து போன வீடு புதுப் பொலிவுடன் மீண்டும் அதே இடத்தில் தோன்றி விட அவரை சிவபெருமானின் அவதாரமே எனக் கருதியயவர்கள் அவரிடம் மன்னிப்புக்கோரி   அவரை வணங்கினார்கள். அன்று முதல் குகை நமச்சிவாயா ஒரு தீர்மானமான முடிவு எடுத்தார். இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் எவர் வீட்டிற்கும் சென்று தங்கக் கூடாது என்பதே அந்த முடிவு. அதன்படி திருவண்ணாமலைக்குச்  சென்றவர் தான் எடுத்த சபதத்தின்படியே சுற்றி இருந்த காடுகள், மலை  பகுதிகள் மற்றம் பூங்காக்கள் போன்ற இடங்களில் மட்டுமே தங்கி வந்தார். அவர் தினமும் அருணாசலேஸ்வரர் ஆலய நுழை வாயில்வரை சென்றாலும் உள்ளே செல்லவில்லை. அதற்குக் காரணம் அவர் வீர சைவர் என்பதுதான். குகை நமச்சிவாயாவிற்கு  அந்த ஆலயத்துக்குள் செல்ல விருப்பம் இருந்தது என்பதை எடுத்துக் காட்டும் விதமாக அவர் தினமும் அந்த ஆலயம் இருந்த திசையை நோக்கி கைகளைக் கூப்பி நின்று கொண்டு எதோ ஒரு சைகை மூலம் கூறுவது உண்டு
 ''இந்த ஆலயத்துக்குள் உள்ளவரை நீ கும்பிடாமல் இருந்தால் நலமாக இருக்க முடியுமா?''.
அந்த காலத்தில் அங்கிருந்த   சிவக்கிரக யோகி என்பவர் தினமும் குகை நமச்சிவாயா ஆலயத்துக்கு உள்ளே செல்லாமல் ஆலயத்தை நோக்கி எதோ சைகை செய்து கொண்டு இருக்கின்றாரே, அவர் ஒருவேளை ஆலயத்தை அவமானப்படுத்தும் விதமாக சைகையை செய்கிறாரோ என்று எண்ணிக் கொண்டு அவரை தண்டிக்க எண்ணினார். ஒரு நாள் அவர் அப்படி சைகை செய்து கொண்டு இருக்கையில் அவர் முதுகில் தடியால் ஓங்கி அடித்தார். ஆனால் குகை நமச்சிவாயா தன்னை தடியால் அடித்தவரை ஏறெடுத்தும் பார்க்காமல் அதற்கு மாறாக தன்னுடைய தீய மனோபாவங்களை விலக்கவே கடவுள் தன்னை தடியினால் அடித்திருக்கின்றார் எனப் பொருள் தரும் வகையில் ஒரு வெண்பா பாடினார். குகை நமச்சிவாயாவின் அந்த சாத்வீகமான செயலைக் கண்ட சிவக்கிரக யோகி தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து வருந்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குகை நமச்சிவாயா இனியும் அந்த ஆலயத்துக்குள் தாம் நுழையாமல் இருப்பது தவறு என எண்ணியபடி ஒரு நாள் அந்த ஆலயத்தை நோக்கி நடந்து சென்றார்.  அப்போது அவருடைய குருவான சிவானந்த தீக்ஷதர் எங்கிருந்தோ திடீரென அவருடைய பல சிஷ்யர்களுடன் அங்கு வந்தார்.  ஒரு நண்பருடன் பேசுவது போல அவருடன் பேசிய  பின் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் பிரவேசித்த பின் கருவறைக்குள் சென்று சிவனை துதித்தார். அப்போது குகை நமச்சிவாயாவும் தன்னை அறியாமல் மகிழ்ச்சிப் போங்க  கருவறை முன்னால் சிவனை விழுந்து வணங்கி எழுந்தார் . வணங்கி எழுந்தவர் தனது குரு மற்றும் அவருடைய சீடர்களைக் காணாமல் திகைத்தார். பிரமித்துப் போனவர் சிவலிங்கத்தை பார்க்க அதில் அவருடைய குருநாதர் தெரிவதைக் கண்டார். உடனேயே அவர் இப்படிப் பாடினார்:
'' அருணகிரிநாதா....அறிவின் அதிபதியே, குரு நமச்சிவாயா என அழைக்கப்படுபவரே , பொய்யன், தன்மானம் அற்றவன், மூடன், அறிவற்றவன் போன்ற அனைத்து குணங்களையும் கொண்ட என்னை உன்னிடம் அன்பு காட்டாதவன் என்று நினைத்து கோபம் கொள்ளாதே. என்னை உன்னிடம் அழைத்துக் கொண்டு எனக்கு குருவாக இனி நீயே இருந்து வருவாயாக''
குகை நமச்சியாவிற்கு  நடந்த அனைத்துமே ஈசனின் விளையாட்டே என்பதைப் புரிந்தது.  அந்த நிகழ்ச்சி மூலம் இனி தனக்கு ஆலயத்துக்குள் நுழைய அனுமதி கிடைத்துவிட்டது என்றே நம்பினார். வீர சைவத்தில் குருவின் கட்டளையை மீறாமல் இருப்பது முக்கியமானது. எந்த சம்பிராதாயத்தையும் அந்தக் கட்டளை மீறி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம் .
அதன் பின் அந்த ஆலயத்தின் எதிரிலேயே அவர் தங்கி இருக்க முடிவு செய்தார். ஒவ்வொரு நாளும் அருணாசல சிவன் மீது துதி பாடி அதற்கு மாலை அணிவித்து வந்தார். ஒரு நாள் ஒரு மாலையை எடுத்துக் கொண்டு போய் சிவன் சன்னதியில் வைத்து விட்டு இப்படிக் கூறினார் :
''பல முறை நான் அவருக்கு மாலையினாலும், பாடல்களினாலும் தோரணம் கட்டினேன். என் நாக்கு பல ஆயிரம் பாடல்களை அவரை நினைத்துப் பாடியது. அனைத்துப் பிரபஞ்சத்திலும் பரவி உள்ள அந்த சோணாசலரைக்  காண என் போன்ற மூடர்களுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்''
அங்கிருந்த நாட்களில் அவர் உணவிற்காக பிட்ஷை எடுக்க வேண்டி இருந்தது. அப்படிப்பட்ட எளிய வாழ்கை அவருக்குப் பிடித்து இருந்தது. பிட்ஷை எடுத்து வந்து சாப்பிட்டப் பின் அந்தப் புனிதக் கோட்டை வாயிலில் வந்து உறங்கி எழுவதுதான் இன்பமான வாழ்கை என நினைத்தார். அதன் பின் ஒரு நாள் அவர் கனவில் சிவபெருமான் தோன்றி அங்கிருந்துப் போய் எதிரில் உள்ள மலை மீது இருந்த குகையில் வசித்துக் கொண்டு யோகப் பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டு இருக்குமாறுக் கட்டளை இட்டார். குகை நமச்சிவாயா அந்தக் கட்டளையை  ஏற்றுக் கொண்டு மலையின் கிழக்குப் பகுதியில் இருந்த குகைக்குச் சென்று அங்கு வாழலானார். அதனால்தான் அவருக்கு குகை நமச்சிவாயா என்றப பெயர் ஏற்பட்டது. அது முதல் அந்த மலை சாதனாக்கள்  செய்யும் இடமாக மாறியது. அதற்கு முன்னர் வீர சைவர்களின் லிங்க வழிபாட்டு முறையை புரிந்து கொள்ள வேண்டும்.

வீர சைவர்களின் நம்பிக்கையின்படி ஒவ்வொருவரின்  இதயத்திலும் கண்களுக்குத் தெரியாமல் லிங்கம் எனும் சிவனின் ஒளி  மறைந்து கிடக்கின்றது. அந்த சக்தியைத்தான் ஒரு குரு  வெளியில் எடுத்து அவர்களுக்கு தீட்ஷை தரும்போது தரப்படும் லிங்கத்தில் உரு ஏற்றி தந்து அதையே அவர்களது இஷ்ட லிங்கம் என ஆராதிக்குமாறுக்  கூறுகிறார்.
அருணாசலாவில் ஒளிப் பிழம்பாய் இருந்த சிவபெருமான் அந்த மலையில் புகுந்து கொண்டு அருணாசலா என்ற பெயரைப் பெற்றார். இரமண மகரிஷி பல முறைக் கூறி உள்ளார். அந்த மலை சிவபெருமான் வாசம் செய்யும் இடமோ அல்லது அவரைக் குறிக்கும் சின்னமோ இல்லை. அது வீர சைவர்களின் இஷ்ட லிங்கம் போல அந்த மலையில்  சிவபெருமான் லிங்க வடிவில் அவதரித்து உள்ளார். இரமண மகரிஷி கூறுவார்
'' மலை முழுவதுமே புனிதத்தன்மை வாய்ந்தது. எப்படி நமக்கெல்லாம் உடல் என்பது உள்ளதோ, அது போலவே சிவபெருமான் தன்னை ஒரு மலையாகக் காட்டி உள்ளார். மலை வடிவில் அவர் காட்சி தரும் அற்புதமானத் தோற்றம் அது. நம் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக கருணைக் கொண்டு மலை வடிவில் சிவபெருமான் அந்த இடத்தில் காட்சி தருகிறார் ''
  
 குகை நமச்சிவாயா - ஆலய சன்னதி
 ஆலயத்தின் தற்போதைய தோற்றம் 
படம் நன்றி:

திருவண்ணாமலையின் ஐதீகத்தின்படி ஆலயத்துக்குள் உள்ள அருணாசலேஸ்வரரும், வெளியில் உள்ள மலையும்  சிவபெருமான்தான். அதனால்தான் குகை நமச்சியாவின் குரு  அந்த ஆலயத்துக்குள் இருந்த லிங்கத்தில் ஐக்கியமாகி விட்டதைப் போல காட்சி தந்ததும் அதுவே தமது குருவும் அருணாசலேஸ்வரரும் ஒருவரே என்ற உண்மையை உணர்ந்தார். அதனால்தான் அந்த மலையையே தனது குருநாதராக ஏற்றுக் கொண்டு வழிபட்டார். அவர் கூறியதைப் படியுங்கள்:
''சிவந்த மலையின் கடவுளான அருணாசலா என் எதிரில் உருவம் இல்லாமல் நின்று கொண்டு இருக்க , என்னுடைய தீய மற்றும் நல்ல செயல்களுடன் இருந்த அகம்பாவத்தை  ஒழித்து விட்டு உள்ளத்தில் மூன்று நிலைகளிலும் இருந்த அசுத்தங்களையும் இந்நாள்வரை சேர்த்து வைத்து இருந்தக் கர்மாக்காக்களையும்  துடைத்தெறிய என்னுடைய இதயத்தில் அவரை தெய்வமாக ஏற்றுக் கொண்டு விட்டேன்''
பக்தனின் உள்ளத்தில் மூன்று நிலைகளிலும் உள்ள அசுத்தங்களை விலக்கி அவனை தூய்மைப் படுத்துவது குருவின் கடமை என்பது வீர சைவத்தில் ஏற்கப்பட்டு உள்ள தத்துவம். ஆனால் அதற்கு மாறாக அப்படிப்பட்ட காரியத்தை குருவிற்குப் பதிலாக அருணாச்சலா (சிவன்) செய்து உள்ளார்.
தன்னுடைய பக்தி உணர்வை முழுமையாக மலை மீது செலுத்திப் பெற்ற இன்பத்தை அவர் இஷ்ட லிங்க வழிபாட்டிலோ அல்லது சிவயோகத்திலோ கூடப் பெறவில்லை.அவர் கூறியதைப் பாருங்கள் :
''விவரிக்க முடியாத அண்ணாமலைக் கடவுளையும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு உள்ள உண்ணாமலையையும்  தவிர எனக்கு வேறு எந்தக் கடவுளும் தெரியாது. ஒரு வேளை  என்னை அறியாமல் அப்படி தெரிந்து இருந்தாலும் என்னுடைய உள்  மனம் அவர்களிடம் ஈடுபாடு  கொள்ள முடியவில்லை. சிவந்த மலை மீது அமர்ந்து உள்ள மன்னனே, உன்னை நான் இரு கரமும் கூப்பித் துதித்து,  நீயே அனைத்துக் கடவுளிலும் பெரும் கடவுள் என புகழ் பாடி, இதயமே உருகும் வண்ணம் கண்களில் கண்ணீர் வழிந்தோட நின்றபோது நான் கேட்டதை எல்லாம் நீ எனக்கு  தந்தாய்.  கருணைக் கடவுளே என்னால் அதற்கு என்ன பிரதி பலன் செய்ய இயலும்?''
அவருடைய வேண்டுகோள்தான் என்ன? இனி பிறப்பில் இருந்து முக்தி கிடைக்க வேண்டும்.
'' என் இதயத்தில் உள்ளவரே, மனதில் நிலையாக சித்திரவதை செய்து கொண்டு இருக்கும் வேதனைகளை அழித்து ஒழிக்கும் கருணைக் கடலே, பூமியிலே பிறந்து விட்டவனுக்கு கிடைக்க வேண்டிய பெரும் பாக்கியமான இனி பிறவாமை என்ற வரம் கிடைக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளுக்கு  பயன் கிடைத்து விட்டது''.
இன்னொரு பாடலில் அவர் அந்த சிவந்த மலையை வேண்டிக் கொண்டதினால்  தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றி இப்படியாகக் கூறினார்:
''எவரெல்லாம் தமக்கு புகழ், செல்வம் மற்றும் புத்திர பாக்கியம் என அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அவர்கள் அனைவரும் அந்த சிவந்த மலை ஆண்டவனையே வேண்டுகிறார்கள். தூக்கத்தில் கூட எவர் ஒருவர் மறக்காமல் அந்த தெய்வத்தை வேண்டிக் கொண்டே இருக்கின்றாரோ அவர்களுக்கு அடுத்தப் பிறவி என்பது கிடையாது''.
குகை நமச்சிவாயா தான் கடைபிடித்து வந்த சிவயோகத்தைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அவர் திருவண்ணாமலைக்கு வந்த உடனேயே மெல்ல மெல்ல அதை விட்டு விட்டார். அவர் எண்ணப்படி சிவபெருமானிடம்  ஒருவர் முழுமையாக சரண் அடைந்து விட்டால் வேறு எதுவுமே தேவை இல்லை. அவர் தெய்வ வழிபாடு தனியானது. அவருடைய சிஷ்யரான குரு நமச்சிவாயாவின் கூற்றுப்படி  அவருடைய குருநாதர் தினமும் நான்கு வரிப் பாடலை அருணாசலாவின் மீது பாடி வந்துள்ளார். அவர் கூறி உள்ளார்
'' மிகவும் எளிமையான வாழ்கையைக் கொண்ட குகை நமச்சிவாயா தான் வணங்கி வந்த அந்த மலை மீது தினமும் நான்கு வரி வெண்பாக்களினால் மாலை அணிவித்து வந்தார்''.
அவர் மலை குகைக்குள் சென்று வசிக்கத் துவங்கும் முன்னரே அதாவது தினமும் ஆலய வாயில்வரை சென்று திரும்பத் துவங்கியது முதலேயே அந்தப் பழக்கத்தைத் துவக்கினார். அவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருந்தாலும் அவற்றில் ஒரு சில மற்றுமே காப்பாற்றபட்டு வந்துள்ளன. அவற்றில் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. நூறு செய்யுட்கள் அடங்கி உள்ள பாடல் 'அபிராமி அந்தாதியிலும்', முப்பத்தி ஆறு செய்யுளைக் கொண்ட  'திருவருணை வெண்பா' என்பதிலும் அடங்கி உள்ளன. சில எழுத்தாளர்கள் எழுதி உள்ள படைப்புக்களில் அவருடைய பாடல்கள் இடம் பெற்று உள்ளன என்றாலும் அவர் இயற்றிய பெரும்பாலான பாடல்கள் அழிந்து விட்டன என்றே எண்ணத் தோன்றுகின்றது.
அவர் கர்னாடகத்தில் பிறந்து இருந்தாலும், தாய் மொழி கன்னடமாக இருந்தாலும், தமிழில் அவர் புலமைப் பெற்று இருந்தார். அவருடைய அபிராமி அந்தாதி இன்றும் தமிழக பாடப் புத்தகங்களில் இடம் பெற்று உள்ளதே அவர் பெருமைக்கு சான்றாகும். அவர் இயற்றி உள்ள செய்யுட்கள் இதுவரை இயற்றப்பட்டு உள்ள செய்யுட்களிலேயே மிகக் கடுமையானது என்று இரமண மகரிஷி பல முறைக் கூறி உள்ளார். குறிப்பு எதுவும் எழுதி வைத்துக் கொள்ளாமல் தன்  இச்சையாக பாடல்களை இயற்றி வந்த மிகவும் புகழ் பெற்ற கணபதி முனி என்பவர் அந்தப் பாடல்களை தன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது என்ற உண்மையை ஒப்புக் கொண்டு உள்ளார்.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த தண்டபாணி சுவாமி என்பவர் குகை நமச்சிவாயாவின் பாடல்கள் அத்தனை அற்புதமாக அமைந்து இருந்ததின் காரணம் அவற்றை இயற்றும் ஆற்றலை அந்த தெய்வம்தாம் அவருக்கு வழங்கி இருந்து இருக்க வேண்டும் எனக் கூறினார். குகை நமச்சிவாயா பற்றி எழுதி உள்ள குறிப்பில்
''கன்னடத்தைத் தவிர வேறு மொழியைக் கற்று அறிந்திராத அவருக்கு தமிழ் மொழி வல்லுனர்களுக்கு இணையாக செய்யுள் படைக்கும் திறனை நிச்சயமாக என்னுடையக் கடவுளான சிவபெருமானே அவருக்குத் தந்துள்ளார் என்பதே உண்மை. நிச்சயமாக அவர் இல்லாமல் அப்படிப்பட்ட ஆற்றல் அவருக்கு வந்திருக்க முடியாது''.
அந்தப்  பாடல்களைத் தவிர குகை நமச்சிவாயா தினமும் அந்த மலையை ''நமஹா...சிவாயா'' என்று துதித்துக் கொண்டே வலம்  வந்தவண்ணம் இருந்துள்ளார். அவரைப் போலவே மற்றவர்களும் அருணாசலா நினைவுடன் அப்படிச் செய்ய வேண்டும் என்றே அறிவுரைக் கூறி வந்தார்.
''புனித அருணாசல மலையை தினமும் பிரதர்ஷனம் செய்து தன்னை முழுமையாக எவர் ஒருவர் அவரிடம் இணைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் புகழ் மிக்கவர்களை விட அதிகப் புகழ் பெறுவார்கள். மலை நாயகனான அந்த ஐந்து எழுத்துப் பெயர் கொண்டவனின் நாமத்தை ஒரே நினைவுடன் தியானிப்பவனுக்கு அவன் விரும்பும் அனைத்தும் கிடைக்கும். ருத்திராக்ஷ மணிகளை வைத்துக் கொண்டு அதை உருட்டியவண்ணம் ஐந்து எழுத்து மந்திரமான நமச்சிவாவை உச்சரிக்க வேண்டும். பாம்பை தன்  கழுத்தில் சுற்றிக் கொண்டு உள்ள அந்த சோணாசலேஸ்வறரை சரண் அடைந்தால் என்றும் பிறவாமை என்ற வரம்  நிச்சயம் கிடைக்கும். இதயமே, அந்த சிவந்த நிறமுடைய மலையானை உன் உள்ளத்தில் வைத்து பூஜித்து வந்தால் அவர் இதோ  உன் உள்ளத்தில் உள்ளேன் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உன்னுடைய அனைத்து கர்மாக்களின் வினைகளும் அகன்று போவதைக் காணலாம்''.
குகை நமச்சிவாயா அருணாசலேஸ்வரரிடம் அத்தனை பக்தி கொண்டு இருந்தாலும் அவர் விரைவில் கோபம் அடைந்து விடுவார் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்து உள்ளது இந்தக் கதை. ஒரு முறை ஒரு ஏழையின் கர்பமுற்ற ஆடு வயிற்றில் இருந்த குட்டிகளை ஈன்றும்  முன்னரே பாம்பு கடித்து இறந்து விட்டது. அதனால் வருத்தம் அடைந்து அவரிடம் சென்றவனிடம் அந்த ஆட்டை தன்னிடம் விட்டு விட்டு மறுநாள் வந்து அதை எடுத்துப் போகுமாறு கூறினார். மறுநாள் அதை எடுத்துப் போக வந்தவன்  அந்த ஆடு மட்டும் அல்ல அந்தக் கன்றுகளும் உயிர் பிழைத்து இருந்த அற்புதத்தை கண்டு மகிழ்ந்தான். அந்த அற்புதம் வெளியில் பரவியது. அதை உள்ளூரில் இருந்த சில நெசவாளர்கள் கேலியாகப் பேசினார்கள் . அவர்களில் ஒருவனை  இறந்து விட்டவனைப் போல நடிக்கச் செய்து கீழே விழவைத்து  அவனை தூக்கிக் கொண்டு மற்றவர்கள் அவனை குகை நமச்சிவாயாவிடம் எடுத்துச் சென்றார்கள். தன்னை கேலி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட குகை நமச்சிவாயா அவர்காளுக்கு சாபம் கொடுத்தார். இறந்தது போல நடித்தவன் உண்மையிலேயே இறந்து விழுந்தான். அது மட்டும் அல்ல திருவண்ணாமலையில் நெசவாளர் குடும்பங்கள் செழிக்க முடியாது என சாபம் கொடுக்க சில நாட்களிலேயே திருவண்ணாமலையில் இருந்த அனைத்து நெசவாளிகளும் இனம் புரியாத பல்வேறு காரணங்களினால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நெசவுத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் புரிய வேண்டியதாயிற்று. எத்தனை முயன்றும் அதற்கு அடுத்த வருடங்களிலும் அவர்களால் அந்தத் தொழிலை மீண்டும் செய்ய முடியவில்லை.
அவருடைய கோபத்தைக் காட்டும் இன்னொரு கதை உண்டு. ஒருமுறை 'ஆகிட்டு' என்ற கொடுங்கோல் மன்னன் அந்த ஊரின் மீது படையெடுத்து வந்து ஊரைக் கொள்ளையடித்தது மட்டும் இல்லாமல் பலப் பெண்களைக் கடத்திச் சென்றான். வேண்டும் என்றே ஆலயத்தில் ஒரு எருதை உயிருடன் தீ வைத்துப் பொசுக்கிக் கொன்றான். அதைக் கேள்விப்பட்ட குகை நமச்சிவாயா கோபமுற்று சிவனிடம் வேண்டினார் :
''சோநேஸ்வாரா...  உன்னுடைய மூன்று கண்களுமா உறங்கி விட்டன? உன்னிடம் உள்ள கோடரியையும் திரிசூலத்தையும் யாராவது திருடிச் சென்று விட்டார்களா? தன்மானத்தை நீ இழந்து விட்டாயா ? சாபத்தினால் மரணம் அடைவது போல உன்னுடைய பக்தர்கள் அனாதைகளாகக் இங்கு கிடக்க வேண்டுமா?''
அருணாசலேஸ்வரர் அவர் குற்றச்சாட்டுகளுக்கு விடை அளிப்பது போல அன்று இரவு அந்த மன்னன் 'அகிட்டு'வின் கனவில் ஒரு சாது போலத் தோன்றி அவர் முதுகில் ஒரு தடியால் அடித்தார். மறுநாள் அவன் முதுகில் பெரியக் கட்டிபோல எதோ ஒன்று தோன்றி வலி பொறுக்க முடியாமல் போயிற்று . அந்த தொல்லைப் போக்க அவன் அறிஞ்சர்களின்  ஆலோசனையைக்  கேட்டான். அவன் கூறிய கனவைக் கேட்ட அவர்களும் விரைவில் அவன் மரணம் அடைய உள்ளான் என்று கூறி விட்டு அந்த ஆலயத்தை சீர் அமைத்துவிட்டுப் போகுமாறு அறிவுரைக் கூற அவனும் அந்த ஆலயத்தை மீண்டும் சீரமைத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.  ஆனாலும் குகை நமச்சிவாயாவின் சாபம் வீண் போகவில்லை. அவனுடைய வியாதி முற்றிப் போய் அவன் முதுகில் இருந்த  கட்டியில் இருந்து சீழ் வடியத் துவங்கி பூச்சிகள் நெளிந்தன. எத்தனை முயன்றும் அதை குணப்படுத்த முடியவில்லை. தான் கொன்றுக் குவித்த கர்பிணிப் பெண்களின் வயிற்றில் இருந்து எடுத்த சிசுக்களை வைத்துக் கட்டியும் அந்த வியாதியை குணப்படுத்த முடியவில்லை. முடிவாக அவன் பெரும் அவதியுற்று துடி துடித்து இறந்து போனான். அவன் இறந்தவுடன் தலைக்கு எண்ணைத் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி பெரும் விழாவாக அந்த நாளை உள்ளூரில் இருந்த மக்கள் கொண்டாடி விருந்து உண்டார்கள்.
பிரும்மா ஒரு மனிதனுக்கு உயிர் வாழ நூறு வயதையே நிர்ணயித்து இருந்தார் எனக் கருதியவர் தனக்கு நூறு வருடங்கள் ஆகி விட்டதினால் இனி வாழ்ந்தது போதும் என்ற முடிவிற்கு வந்தார்.  தன்னுடைய சிஷ்யர்களிடம் கூறி ஒரு சமாதிக் குழியை வெட்டச் செய்து அதற்குள் இறங்கியவர் முன் சிவபெருமான் தோன்றி அவர் இன்னும் நூறு ஆண்டு  வாழ வேண்டும் எனக் கட்டளை இட்டார். அதை ஏற்றவர் பாடினார்:
''நூறு வயதாகி விட்ட நான்  எப்போது இறந்து போக வேண்டும்  இல்லை இந்த அழியப் போகும் உடலில் வியாதிகளுடன் அவதிப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதை, என் தந்தையும் தாயையும்  விட என்னிடம் அதிக அன்பு செலுத்திய அந்த அருணாசலேஸ்வரர்தான் கட்டளை இட வேண்டும்''
நூறு வருடங்களுக்குப் பிறகு இன்னொரு சமாதிக் குழியை தோண்டச் செய்து அதில் சமாதி அடைந்தார். அதில் அவருடைய பெயர் பொறிக்கபட்டு உள்ளது. அதில் இறங்கும் முன் அவர் இரண்டு பாடல்களைப் பாடினார்:
''நான் இனிமேலும் இந்த மாயையான உடலில் ஒட்டிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. இங்குதான் நம் விஞ்ஞானிகளினால்  கண்டு பிடிகபட்டு உள்ள 360 விதமான வியாதிகளும் அடக்கம் ஆகி உள்ளன. புனித நீரையும், பிறை வடிவிலான சந்திரனையும் உன் தலையில் முடிந்து வைத்துக் கொண்டு உள்ள அருணாசலேஸ்வரா, உன்னுடைய ஒரே பக்தனான என்னுடைய பிறப்பை உடனே அழித்து விடுவாயா ? சோணகிரி என்ற உன்னிடம், என் தந்தைப் போன்ற உன் பாதத்தில் சரண் அடைந்து விட்டோம். நாங்கள் மூன்று காலத்தையும் கடந்து விட்டு கடைசி பிறப்பில் வந்து விட்டோம். நன்கு கவனித்துப் பார். நாங்கள் எருது மேல் ஏறி  வரும் யமதர்மனிடமோ, இல்லை  தாமரையில் அமர்ந்து  இருக்கும் பிரும்மாவிடமோ தலை குனிய வேண்டியது இல்லை''.
  குகை நமச்சிவாயா- சமாதி 
அப்படிக் கூறியப் பின் சமாதிக் குழியில் இறங்கி மலர்ந்த தாமரைப் போல அமர்ந்தப் பின் சிவயோகசிரமத்தை பயன்படுத்தி தன்னுடையப் பிராணாவை தன் தலை மீது இருந்த பிருமான்திரா ( தலையில் உள்ள ஒரு சக்ரம்) வழியே செலுத்தி அதை உடலை விட்டு வெளியேற்றினார். அவருடைய சீடர்கள் அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதை பூஜித்து வருகிறார்கள். அன்றில் இருந்து தினமும் அங்கு பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியாக அந்த மலைக்  கடவுள் மீது தன்னலம் அற்ற அபார பக்தி கொண்டவர்களது அனைத்து கர்ம  வினைகளும் அகன்று போகும் என்ற சாதாரண உண்மையை எடுத்துக் காட்டியவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு பக்தரின் வாழ்கை முடிந்தது. அவர் கூறியது இதுதான்:
'' நான் என் துயரங்களையும், எண்ணற்ற வினைகளையும் களைந்து எறிய ஒரு வழி கண்டு பிடித்துவிட்டேன். எனக்கு வேறு என்னத் தேவை? என்னுடைய எண்ணத்தில் அந்த சிவந்த மலையானுடைய தாமரை மலர்களைப் போன்ற  பாதங்களை எடுத்து வைத்துக் கொண்டு விட்டேன். பாவங்களைக் களைந்து எறிய அந்த சிவந்த நிற மலையானை துதிக்காத இழிவான  உடல் ஒருவனுக்கு இருந்து என்ன  பயன்?  நமக்கு நல்லதோ, தீமையோ எது நடந்தாலும் சரி, அந்த சோணாசலனை துதித்து அவனிடம் நம்பிக்கை கொள்வது நமது கடமை''

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E