மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 13

 --சாந்திப்பிரியா --
13


(-37)   ஒருவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் அவரது மகன்களுக்கும் மகளுக்கும்  பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தாயாரும் மரணம் அடைந்து விட்டால்  அவர்களுக்கு மொத்தம் எத்தனை நாள் தீட்டு உண்டு?

  • சாதாரணமாக தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயார் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு உண்டு. அதாவது தாயார் இரவில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அல்லது  தாயார் பகலில் இறந்து விட்டால்  இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தீட்டு உண்டு. அதாவது 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு இரண்டு தீட்டும் போய் விடும். இது பொது முறை என்றாலும் இது குறித்து  வீட்டில்  சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும்.
  • ஆனால் தாயார்  இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை  இறந்து விட்டால் சாதாரணமாக தாயாருக்காக  அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் ஒன்றரை நாள் மட்டும் தீட்டுக் கிடையாது.  இந்த நிலையில்  தாயார்  இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை  இறந்து  விட்டால் தந்தை என்று இறந்தாரோ அன்றில் இருந்து பத்து நாட்கள் கழித்தே தீட்டு விலகும்.  உதாரணமாக  தாயார் ஒன்றாம் தேதி இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். தீட்டு அனைத்தும் பதிமூன்றாம் நாள் காலையில் சுபஸ்வீகாரத்துக்கு முன்னால் குளித்ததும் விலகி விடும்.
  • ஆனால் தாயார் மரணம் அடைந்தப் பின் அடுத்த நாள் அதாவது தந்தை  இரண்டாம் தேதி முதல் பத்து தேதிக்குள் என்று மரணம் அடைந்தாலும் அவர் இறந்த தேதியில் இருந்து 13 ஆம் நாள் காலைதான் சுபஸ்வீகாரத்துக்கு  முன்னால் குளித்ததும் தீட்டு விலகும்.  இது பொது முறை என்றாலும் இது குறித்து வீட்டில் சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும்.
(-38)  ஒருவருடைய தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட அவர்களுக்கு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அந்த பத்து நாட்களுக்குள் அவர்களுடைய மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களோ இறந்து விட்டால் மொத்தம் எத்தனை நாட்கள் தீட்டு இருக்கும்? 
  • ஒருவருடைய தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடிவதற்குள், அந்த பத்து நாட்களுக்குள் அவர்களுடைய மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களோ இறந்து விட்டால் முந்தய தீட்டோடு பிந்தைய தீட்டும் போய்  விடும். அதாவது தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடியும் அதே  தேதியிலேயே  மனைவியோ இல்லை, மகன்களோ இல்லை மகள்களின் இறப்பினால் ஏற்பட்ட தீட்டும் விலகி விடும்.  இந்த நிலையில் சுபஸ்வீகாரத்துக்கு  முன்னால் குளித்ததும் தீட்டு விலகும்.   13 நாட்களுக்கு மேல் தீட்டு கிடையாது. 
(-39) தந்தையின் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடைய இரண்டாம் மனைவி அல்லது மூன்றாம் மனைவி என யார் மரணம் அடைந்தாலும் தந்தையின் மூலம் பிறந்த பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கும் பத்து நாட்கள்   தீட்டு உண்டாம்.  ஆனால் அந்த செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்குப் பிறகு கேட்டால் தீட்டு காலம் மூன்று நாள் மட்டுமே.

(-40) மனைவி கர்பமாக இருந்தால் சவத்தை சுமக்கவோ அல்லது தகனமோ செய்யக் கூடாது. ஆனால் அவர்களுடைய தாய் மற்றும் தந்தை அல்லது சந்ததி இல்லாத மூத்த சகோதரர்களின் சவத்தை சுமக்க தடை இல்லை.

(-41) ஒரு குடும்பத்தில் ஏழு வயதுக்குள்  சிறுவனோ அல்லது சிறுமியோ மரணம் அடைந்து விட்டால் அதன் சொந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தாய் தந்தைக்கும் மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு தீட்டுக் கிடையாது. 

(-42)  தீட்டுக் காலம் 

(i) தீட்டு என்பது என்ன, அவற்றின் பொது விதி முறைகள் என்பவை அனைத்தையும் ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். இனி முடிவாக யாருக்கு  எத்தனை நாள்  தீட்டு எனும் தீட்டுக் காலத்தைப் பார்க்கலாம். 

(ii)  ஒன்று  மற்றும் ஒன்றரை  நாள் தீட்டு:-

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் ஆண்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் ஒருநாள் தீட்டு உண்டாகிறது.
  • தந்தைக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்) இருந்தால் அந்த தந்தையின் மனைவிகளின் (இளைய மற்றும் மூத்த என எந்த மனைவியானாலும் சரி) சகோதரன் அல்லது சகோதரிகள்
  • அவர்களுக்குப் பிறந்தப் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
  • தந்தையின் இளைய அல்லது மூத்த மனைவிகளின் தாய் மற்றும் தந்தை
  • தந்தையின் இளைய அல்லது மூத்த மனைவிகளின் பெரியப்பா மற்றும் சித்தப்பா
  • பிற பங்காளிகளுக்கு பிறந்த ஆறு வயதுக்கு உட்பட்ட கல்யாணம் ஆகாத பெண்கள்*. 
  • ------* ஆனால் அந்தப் பெண்களுக்கு திருமணம் ஆகி புகுந்த வீடு சென்று விட்டால் அவர்கள் மரணத்தில் அவர்களுக்கு பந்து ஸ்நானம் எனப்படும் ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு.
  • பங்காளிகளின் ஆறு வயதுக்கு மேலான ஆண் பிள்ளைகள் 
  • தனது மனைவியின் தாய் மற்றும் தந்தை ( மாமனார் மற்றும் மாமியார்)
(iii) பெண்களுக்கு  ஒரு  நாள் தீட்டு:- 

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் பெண்களுக்கு ஒருநாள் தீட்டு உண்டாகிறது.
  • தந்தைக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்) இருந்தால் அந்த மனைவிகளின் (இளைய மற்றும் மூத்த என எந்த மனைவியானாலும் சரி) பெண்களும் பிள்ளைகளும் 
  • இளைய மற்றும் மூத்த தாயாரின்  சகோதரன் அல்லது சகோதரிகள்
  • இளைய மற்றும் மூத்த தாயாரின்  சகோதரன் அல்லது சகோதரிகளுக்குப் பிறந்தப் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
  • இளைய மற்றும் மூத்த தாயாரின்  தாய் மற்றும் தந்தை
  • இளைய மற்றும் மூத்த தாயாரின் பெரியப்பா மற்றும் சித்தப்பா 
  • பிற பங்காளிகளுக்கு பிறந்த ஆறு வயதுக்கு உட்பட்ட கல்யாணம் ஆகாத பெண்கள்*
  • -------*ஆனால் அந்தப் பெண்களுக்கு திருமணம் ஆகி புகுந்த வீடு சென்று விட்டால் அவர்கள் மரணத்தில் அவர்களுக்கு பந்து ஸ்நானம் எனப்படும் ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. 
  • பங்காளிகளின் ஆறு வயதுக்கு மேலான ஆண் பிள்ளைகள்
(iv) பக்ஷிணீ  தீட்டு:-
 
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட காலம் ஆகும். அதாவது ஒன்றரை நாளாகும்.  பகலானாலும், இரவானாலும் சரி மரணச் செய்தி அந்த இரவோ அல்லது பகலோ  முடிவதற்கு முன்னால் கடைசி நேரத்தில் தெரிய வந்தாலும் அந்த தீட்டு அந்த குறிப்பிட்ட காலத்தில் துவங்கி விட்டதாக அர்த்தம் ஆகும். அதாவது இரவு பன்னிரண்டு மணி ஆகும் வேளையில் பக்ஷிணீ தீட்டு கால சமாச்சாரம் தெரிய வரும்போது இரவானாலும் கூட அந்த தீட்டின் ஒரு பகல் வேளைக் கழிந்து விட்டதாக அர்த்தம். ஆகவே இன்னும் ஒரு இரவும், ஒரு பகலும் தீட்டு காத்தால் போதும். ஆனால் அந்த செய்தி இரவு 1.30 க்குப் பிறகு தெரிய வந்தால் அடுத்த நாளில் இருந்து முழு பகல், இரவு, அதற்கு அடுத்த நாள் முழு பகல் என மூன்று வேளை தீட்டு காக்க வேண்டும். 

(v) ஆண்களுக்கு பக்ஷிணீ  (ஒன்றரை நாள் ) தீட்டு

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் ஆண்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் பக்ஷிணீ தீட்டு (ஒன்றரை நாள்) உண்டாகிறது.
  • அத்தையின் பிள்ளை அல்லது பெண்*
  • மாமனின் பிள்ளை அல்லது பெண்*
  • தாயின் சகோதரியின் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
  • தன் உடன்பிறந்த சகோதரியின் பெண் (மருமாள்)
  • தன் உடன்பிறந்த சகோதரனின் மணமான பெண்
  • சித்தப்பா  மற்றும் பெரியப்பாக்களின் பெண்கள்
  • தன் பிள்ளை வயிற்றுப் மகள்  (பௌத்ரீ- பேத்தி )
  • பெண் வயிற்றுப் பெண்  (தௌஹித்ரி-பேத்தி  )
  • பெண்ணின் உபனயனமாகாத மகன் (தௌஹித்ரன்-பேரன் )
  • தன் சகோதரியின் உபனயனமாகாத மகன் (மருமான்). 
  • -------------*ஆனால் அந்தப் பெண்களுக்கு திருமணம் ஆகி புகுந்த வீடு சென்று விட்டால் அவர்கள் மரணத்தில் அவர்களுக்கு பந்து ஸ்நானம் எனப்படும் ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு.
(vi) பெண்களுக்கு  பக்ஷிணீ (ஒன்றரை நாள் ) தீட்டு

கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் இறந்தவர்களின் நேரடிக் குடும்பத்தினரைத் தவிர்த்து மற்ற பங்காளிக் குடும்பத்தின் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு (ஒன்றரை நாள்) உண்டாகிறது.

ஆனால் மணமாகிவிட்டப் பெண் புகுந்த வீட்டுக்குச் சென்று அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி புகுந்த வீட்டினரின் அனைத்து தீட்டும் வந்து விடுவதினால் அவளுக்கு  பிறந்த வீட்டின் எந்த தீட்டும் கிடையாது. பிறந்த வீட்டின் சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. அவளுக்கு பிறந்த வீட்டின் மரணங்களில் செய்தி கேட்டதும்  பந்து எனப்படும்  உறவினர் ஸ்நானம் மட்டுமே உண்டு. 

ஆனால் பங்காளிகள் குடும்பத்துக்கு பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு (ஒன்றரை நாள்)  எனப்படுவது கீழ்கண்டவர்களின் மரணத்தால் மட்டும் ஏற்படும்.
  • தந்தையின் சகோதரர்கள்- சித்தப்பா மற்றும் பெரியப்பாக்கள்
  • தந்தையின் தாயார் (பாட்டி) மற்றும் தந்தையின் தந்தை (தாத்தா)
  • தாயுடன் பிறந்த சகோதரிகள்- சித்தி மற்றும் பெரியம்மாக்கள்
  • தாயாரின் தாயார் (பாட்டி) மற்றும் தாயாரின் தந்தை (தாத்தா)
  • தந்தை வழி சித்தப்பா மற்றும் பெரியப்பாவின் பெண்களும், பிள்ளைகளும்
  • தாய் வழி சித்தி மற்றும் பெரியம்மாக்களின் பெண்களும், பிள்ளைகளும்
  • தாயின் சகோதரர்கள்- தாய் மாமன் மற்றும் மாமி
  • தாய் வழி மாமன் மற்றும் மாமியின் பெண்களும் பிள்ளைகளும்
  • தந்தையின் சகோதரிகள்- அத்தை*
  • தந்தையின் வழி அத்தை மற்றும் அத்திம்பேரின் மகள்கள்* மற்றும் மகன்கள் 
  • தனது சொந்த சகோதரியின் பெண்கள் மற்றும் பிள்ளைகள்
  • ---------*  ஆனால் அந்தப் பெண்களுக்கு திருமணம் ஆகி புகுந்த வீடு சென்று விட்டால் அவர்கள் மரணத்தில் அவர்களுக்கு பந்து ஸ்நானம் எனப்படும் ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. 
(vii)  ஆண்களுக்கு மூன்று   நாள் தீட்டு:-

கீழ்கண்டவர்களின் மரணத்தால் ஆண்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும்  மூன்று நாட்கள் தீட்டு உண்டு.
  • திருமணம் ஆன சொந்த சகோதரி 
  • தாயின் தந்தை
  • தாயின் தாயார் 
  • தாயின் சகோதரர், அவர் மனைவி ( மாமா மற்றும் மாமி)
  • தாய் வழி (தாயின் சகோதர சகோதரிகள்) சித்தி, பெரியம்மா  மற்றும் சித்தப்பா மற்றும் பெரியப்பா
  • தந்தையின் சகோதரிகள் அவர்களது கணவர்கள் (அத்தை மற்றும் அத்திம்பேர்)
  • திருமணம் ஆன சொந்த சகோதரி, அவருடைய உபநயனம் ஆன மகன் (மருமான்) மற்றும் அந்த மகனின் மகன் 
  • மாமனார், மாமியார்
  • ஏழு தலை முறை ஆண்களும் அவர்களது மனைவிகளும் மற்றும் அந்தப் பங்காளிகளின் 2 வயதுக்கு மேலான ஆண்கள், 7 வயதுக்கு மேலான திருமணம் ஆகாத பெண்கள் 
  •  தனது தாய் மற்றும் தந்தையை பிரிந்து வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது   ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்டு இருந்தால் அந்த ஆண்  மகனை தத்புத்திரன் என்பார்கள். தன் குடும்பத்தை விட்டு ஸ்வீகாரபுத்திரனாக வேறு கோத்திரத்துக்கு சென்று விட்டாலும் அந்த  தத்புத்திரர்களுக்கு  தன்னை பெற்றெடுத்த தாயார் மற்றும் தந்தையின் (அவர்களுடைய சொந்த தாயை ஜனனி என்றும், சொந்த தந்தையை ஜனக பிதா என்றும்  பண்டிதர்கள் கூறுவார்கள்) மரணத்தில் மூன்று நாள் தீட்டு உண்டு. ஆனால்   ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்பத் தீட்டுக்கள் அனைத்தும் தத்புத்திரர்களுக்கு உண்டு.
  • அதே போல அப்படி சென்று விட்ட தத்புத்திரர்கள்  மரணம் அடைந்து விட்டாலும் அவர்களுடைய பிறந்த வீட்டின் சொந்த சகோதரர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. 
  • அது போலவே சொந்த சகோதரி திருமணத்துக்கு முன்னால் வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது   ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்டு இருந்தால், அவளுடைய மரணத்திலும் மூன்று நாட்கள் தீட்டு உண்டு. 
(viii) திருமணம் ஆன பெண்களுக்கு  மூன்று  நாள் தீட்டு மற்றும் பந்து ஸ்நானம் :-

மணமாகிவிட்டப் பெண் புகுந்த வீட்டுக்குச் சென்று அவர்கள் கோத்திரத்தை சார்ந்தவள் ஆகி புகுந்த வீட்டினரின் அனைத்து தீட்டும் வந்து விடுவதினால் அவளுக்கு  பிறந்த வீட்டின் அனைத்து தீட்டும் கிடையாது. பிறந்த வீட்டின்   சில தீட்டுக்கள் மட்டுமே உண்டு. அவளுக்கு பிறந்த வீட்டின் மரணங்களில் செய்தி கேட்டதும்  பந்து எனப்படும்  உறவினர் ஸ்நானம் மட்டுமே உண்டு.  ஆனால் மூன்று நாட்கள் தீட்டு கீழ்கண்டவர்களின் மரணத்தால் மட்டும் ஏற்படும்.

ஆகவே பிறந்த வீட்டின் கீழ் கண்டவர்களின் மரணத்தால் மணமான பெண்களுக்கு  மூன்று நாட்கள் தீட்டு மட்டுமே  உண்டு.  ஆனால் அவளுடைய கணவருக்கு அந்த தீட்டு கிடையாது.
  • மணமாகி விட்ட பெண்ணின் சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள் 
  • தந்தையின் இளைய அல்லது மூத்த மனைவி இருந்தால் அவர்கள் 
  • தனது சொந்த சகோதரியின் மகன்கள்  
  • வேறு கோத்திரத்தில் வேறு யாருக்காவது   தத்புத்திரியாக ஸ்வீகாரமாக கொடுக்கப்பட்டு உள்ள பெண்ணுக்கு அந்த வீட்டிற்கு சென்று விட்டாலும் அங்கு அவள் திருமணம் ஆகும்வரை மட்டும்  தன்னை பெற்று எடுத்திருந்த ஜனனீ மற்றும் ஜனக பிதா எனும் சொந்தத் தாய், தந்தை மற்றும் சகோதர சகோதரிகளின் மரணத்தில் மூன்று நாட்கள் தீட்டு உண்டு. அதுவும்  அவளுக்கு ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் ஆகும்வரைதான் உண்டு. ஸ்வீகாரம் தரப்பட்ட வீட்டில் இருந்து திருமணம் ஆகிச் சென்று விட்டால் அவளுக்கு பிறந்த வீட்டின் மரணங்களில் செய்தி கேட்டதும்  பந்து எனப்படும்  உறவினர் ஸ்நானம் மட்டுமே உண்டு.  வேறு எந்த தீட்டும் கிடையாது.  ஆனால்   ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்பத் தீட்டுக்கள் அனைத்தும் உண்டு.
(ix) பத்து   நாள் தீட்டு:-
  • பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும், அவர்கள் ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய தாயார், தந்தை மற்றும் இறந்தவரின் குடும்பத்தில் 7 தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து மணமாகாத பெண்கள், ஆண்கள், மற்றும் அவர்களின்  மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. 
  •  பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்) குழந்தை இறந்தால் இறந்த குழந்தையின் தந்தை, தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள் போன்றவர்களுக்கு மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. மற்ற பங்காளிகளுக்கு ஒன்றும் இல்லை.
(கட்டுரை முடிந்தது )

கருத்துகள்

  1. Thanks for sharing such a longish essay on this topic. few months back my beloved mother was passed away. I had always find difficulty with the vaathiyaar on this topic. No one wanted to elaborate like what you did on this topic. Thanks again Sir. Do you have a printed copy (like book) about this compiled essay? I would like to buy that one has an reference if have so! Kindly reply alankeshwaran@gmail.com when you find time.

    Thanks for your effort.
    Lankesh

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E