Story of Dhyana Yogi

 தியான யோகியின் கதை
சாந்திப்பிரியா 

பீகார் மானிலத்தின் துர்காடியா எனும் சிறிய ஊரில் 1878 ஆம் ஆண்டு பிறந்தவரே 'தியான யோகி' என்ற அற்புதமான மனிதர். அவர் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராமதாஹின் மிஸ்ரா, தாயார் சம்பட்டி தேவி என்பவர். அவர் பிறந்தபோது அவருடைய பெயர் காஷிநாத் என்பது. அவர் பிறக்க இருந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக அவருடைய கனவில் பகவான் கிருஷ்ணர் தோன்றி அவர்களுக்கு பிறக்க உள்ள குழந்தை முன் பிறவியில் பெரிய மகானாக இருந்தது என்றும், அதுவே மீண்டும் அவர்களுக்கு இந்தப் பிறவியில் பிறக்க இருப்பதாகக் கூறினார்.
பிறந்த குழந்தைக்கு காஷினாத் எனப் பெயரிட்டார்கள்.  இளம் பருவத்திலேயே காஷினாத்  வித்தியாசமான குழந்தையாகவே இருந்தார். எழுதுவதையும் படிப்பதையும் விட அந்த நேரத்தில் பகவான் நாமத்தை நினைக்கலாமே என்றே எண்ணினார். பொதுவாக இளம் பிள்ளைகள் நிறைய விளையாடும். ஆனால் காஷினாத்தோ  அவற்றில் நாட்டம் கொள்ளாமல் தனிமையில் இருந்தார். அவருக்கு ஐந்து வயதானபோது அவரைக் ஒரு நாள் காணவில்லை. பதறிப்போன பெற்றோர்கள் அங்கும் இங்கும் அவரை தேடி அலைந்து அவரைக் கண்டு பிடித்தபோது ஒரு இடத்தில் அந்த ஐந்து வயதுக் குழந்தை தியானத்தில் அமர்ந்து இருந்ததைக் கண்டார்கள். கிருஷ்ண பகவான் தம்முடைய கனவில் கூறியது உண்மையே என்பதை உணர்ந்தார்கள்.
அவர்கள் இருந்த ஊரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்த கஸ்தர் மகாதேவ் என்ற சிவன் ஆலயத்தில் தண்டிஸ்வாமி என்ற சித்தர் இருந்தார். அவர் அடிக்கடி காஷினாத்தின் வீட்டிற்கு வருவது உண்டு. அவரிடம் காஷினாத்தின் குடும்பத்தினர் ஆசி பெற்றுக் கொள்வார்கள். அவரிடம் காஷினாத்திற்கும் ஈடுபாடு ஏற்பட்டது. தண்டிஸ்வாமிகள் அவருக்கு ராமரைப் பற்றியக் கதைகளைக் கூறுவார். அதை காஷினாத்தும் விரும்பிக் கேட்பார். அவற்றை மனதில் ஆழமாக பதித்துக் கொள்வார்.
இளம் வயதான காஷினாத்திற்கு மனதில்  எப்போதும் ஒரே ஒரு கேள்வி தொடர்ந்து கொண்டு இருந்தது. அது ''நான் யார்?'' என்றக் கேள்வியே அது. அவருக்கு ஏழு வயதானபோது ''நான் யார்'' மற்றும் ''மரணம் என்பது என்ன'' என்பதைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டு இருந்தவர் நிம்மதியை இழந்தார். ஒருநாள் அவர் தண்டிஸ்வாமிகள் எதிரில் அந்த ஆலயத்தில் சென்று அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு  இருந்தபோது அதற்கான விடை அவருக்கு கிடைத்தது.
ஒரு நாள் அவரும் அவருடைய சகோதரரும் தோட்டத்தில் சென்று மரங்களைப் பறித்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவருடைய சகோதரர் மரத்தின் மீது ஏறி மரத்தை ஆட்டி ஆட்டி பழங்களை கீழே விழ வைத்தார். ஆனால் கீழே விழுந்த பழங்களை மற்ற சிறுவர்கள் எடுக்க வந்தபோது அவர்களை துரத்துவதிலேயே காஷினாத்தின் நேரம் கழிந்தது. அதைக் கண்ட அவர் சகோதரர் காஷினாத்தை கடிந்து கொண்டார். மற்றவர்களை துரத்துவதை விட நீ ஏன் பழங்களை எடுத்துக் கூடையில் வைத்துக் கொள்ள வில்லை என்று அவர் கடிந்து கொண்ட போது அவருக்கு ஒரு தத்துவம் விளங்கியது. ஒரு ஆசிரியர் நல்வழிப் போதனைகளை மரத்தில் இருந்து விழும் பழங்களைப் போலத் தரும்போது அதைப் பெற்றுக் கொள்ளாமல் நாம் ஏன் மனதை அலைபாய விட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தார்?
காஷினாத்திற்கு இளம் வயதிலேயே யாராவது மரணம் அடைந்து விட்டால் அந்த சரீரத்தைக் கண்டு மயக்கம் அடைந்து விடுவார். மரணத்தைக் கண்டால் அத்தனை பயம் அவருக்கு. ஒருமுறை அவர் நதியைக் கடந்து அந்தப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கு சென்று படித்து விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது அந்த நதியில் பிணம் ஒன்று மிதந்து வந்தது. பிணத்தைப் பார்த்தவர் இனிமேல் பள்ளிக்கே செல்ல மாட்டேன் என அடம் பிடித்தார். பிறப்பவர் எவருக்கும் மரணம் உண்டு என்பதை தெரிந்து கொண்டு இருந்தாலும் அவர் மனதில் இருந்து மரண பயம் அகலவில்லை.
இப்படியாக காலம் ஓடிக் கொண்டு இருந்தது. அந்த காலத்தில் கல்வி அறிவைப் பெறுவது பிராமண குலத்தில்  பெருமையாக கருதப்பட்டது . ஆகவே காஷினாத்திற்கும் அவருடைய பெற்றோர்கள் நல்ல கல்வி அறிவு தர விரும்பினார்கள். ஆனால் காஷினாத்திற்கோ  கல்வியில் நாட்டம் இல்லை. அவருக்கு பத்து வயதானபோது காஷிநாத் தனது பெற்றோர்களிடம் சென்று தனக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்றும் ஆகவே இனிமேல் தான் படிக்க விரும்பவில்லை என்றும்  கூறினார்.
பள்ளிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டாலும் நான் யார் என்பதை அறிந்து கொள்வதில் முழு மனதையும் செலுத்தினார். மீண்டும் மீண்டும் பிறப்பு - இறப்பு பற்றிய கேள்விகளே அவர் மனதில் சுழன்றது. வாழ்கையின் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இனியும் குடும்பம் என்ற பந்தத்தில் இருந்தால் தன்னைத் தானே உணர்ந்து கொள்ள இயலாது என்பதை புரிந்து கொண்டார். ஆகவே ஒருநாள் யாரிடமும் கூறிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
ஒரு நாள்  இரவு வீட்டில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினார்கள்.  இரவு உறங்கவும் சென்றார்கள். விடியற் காலை எழுந்த காஷினாத் கையில் பணமும் இன்றி, போக வேண்டிய இடத்தைப் பற்றியும் நினைத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி காசி நகரத்தை நோக்கி நடந்தார். முடிந்த அளவு விடாமல் நடந்தார். நடந்து கொண்டே இருந்தார். பசியை மறந்து, கால்களில் ஏற்பட்ட ரணங்களை மறந்து நடந்தவர் ஆயிரக்கணக்கான ஆலயங்களை தன்னுள் அடக்கி வைத்து இருந்த வாரணாசி நகரை அடைந்தார். அந்த இடம் அவர் மனதுக்கு பிடித்து இருந்தது. அந்த ஊரில் இருந்த சன்யாசிகள், சாதுக்களுக்கு பணிவிடை செய்தவாறு தான் அங்கு இருப்பதை வெளியில் யாருக்கும் தெரியாதபடி மறைவிடங்களில் இருந்தவாறு வாழ்கையை ஓட்டினார். சாதுக்கள், சன்யாசிகளின் பிரசங்கங்களைக் கேட்டார், அவர்கள் செய்து வந்த சடங்குகளையும் பார்த்தார். சில நாட்கள் நகர்ந்தன. பிறகு தான் அங்கு இருப்பது யாருக்குத் தெரியப் போகின்றது என்ற தைரியத்தில் வெளியில் தலை காட்டினார். அதனால் அங்கிருந்த அவர் ஊரை சேர்ந்த ஒரு சாதுவிற்கு காஷினாத் அங்கு வசிப்பது தெரிய வர அவர் காஷினாத்தின் வீட்டிற்கு உடனேயே செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். காஷினாத்தின் சகோதரர் சில ஆட்களின் துணையோடு அங்கு வந்து காஷினாத்தை தேடிக் கண்டு பிடித்து அவரை ஒரு கைதி போல தன்னுடன் அழைத்துச் சென்றார்.
ஊருக்கு அழைத்து வந்ததும் மீண்டும் அவரைக் கட்டாயப்படுத்தி பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளியில் சேர்ந்த காஷினாத்  நன்கு படித்து முதன்மை வகுப்பில் தேறினாலும் மனதில் மீண்டும் அமைதி இன்றி தவித்தார். சாப்பாட்டிலும் கேளிக்கைகளிலும் நாட்டம் இன்றி இருந்தார். காஷினாத்திற்குப் பூணல் போட்டார்கள். பூணல் போட்டு ஒன்றரை வருடம் கழிந்தபோது காசிக்கு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி இருந்த அவர் தாயார் மரணம் அடைந்தாள். அவருக்கு அதோடு வீட்டினருடன் இருந்த ஒரே தொடர்பு அறுந்தது என்றே கூற வேண்டும் .
அவள் மறைந்த உடன்  இனி அவர் வீட்டை விட்டு வெளியேறினாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை தோன்றி விட்டது. 1890 ஆம் ஆண்டு. அவர் தாயார் மரணம் அடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. மீண்டும் ஒரு நாள் யாரிடமும் கூறாமல் இரவு வீட்டை விட்டு வெளியேறினார். அதோடு அவர் வீட்டுடன் இருந்த மொத்த தொடர்பும்  அறுந்தது. தனது பதிமூன்று வயதில் வாரணாசிக்கு வந்தவர் பசிக் கொடுமையினால் பாதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் ஆகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டார். ஒரு முறை உணவு கிடைக்காமல் பசிக் கொடுமையுடன் இருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒருவர் உணவுப் பொட்டலத்தை தந்து விட்டுச் சென்றார். அதை உண்ண  அமர்ந்தவர் ஒரு ஆலயத்தில் இருந்து மணி அடிக்கும் சப்தம் வரவே என்ன செய்வது என தவித்தார். ஆரத்தி எடுக்கும் சமயத்தில் ஆலயத்துக்கு போகாமல் இருக்ககூடாது என்பது அந்த கால விதியாக இருந்த நேரம். அப்படி செய்தால் அது தெய்வக் குற்றம் ஆகிவிடும். சுற்றிலும் குரங்குகள் வேறு இருந்தன. சாப்பாட்டை எங்கு வைத்துவிட்டுப் போவது. அதை விட்டுச் சென்றால் குரங்குகள் அல்லவா அதை தின்றுவிடும். காரணம் அந்தக் குரங்குகள் அனைத்தும் அவர் சாப்பாடையே பார்த்துக் கொண்டு இருந்தவாறு அமர்ந்து இருந்தன. ஆகவே நடப்பது நடக்கட்டும் என எண்ணிக் கொண்டே அந்த உணவை சற்று மறைவான இடத்தில் வைத்துவிட்டு ஆலயத்தின் ஆரத்திக்கு சென்றுவிட்டுத் திரும்பினார். என்ன ஆச்சர்யம்? அவர் உணவை எந்த குரங்கும் சாப்பிடவில்லை. மாறாக அதை தொடக் கூட இல்லை. மற்ற பிராணிகளிடம் இருந்து அதை பாதுகாத்தவாறு அமர்ந்து இருந்தன. அதுவே அவர் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சில நாட்கள் அங்கு தங்கி இருந்தவர் பல இடங்களுக்கும் சென்றுவிட்டு சித்திரகுட் என்ற நகரை அடைந்தார்.
ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்து சித்திரகுட் நகரை அடைந்தவர் அங்கு பிரேமா தாஸ் என்ற சாதுவின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தார். அந்த ஊரின் அருகில் இருந்த மலை குகைக்கு சென்று அமர்ந்து கொண்டு  ஒரு வருடம் தவம் செய்தார். அந்த நேரத்தில் காஷினாத்துக்கு மௌன மகராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்துதான் ராம ரஷ ஸ்தோத்திரம் என்ற மந்திரத்தைக் கற்று அறிந்தார். அதை முழுமையாகக் கற்று அறிந்தால் நினைத்தது நடக்குமாம். அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் அது. அதைக் கற்றுக் கொள்வதும் சுலபம் அல்ல. 40 நாட்கள் கடுமையான அனுஷ்டானம் இருந்து மந்திரோபதேசத்தைப் பெற வேண்டும். அந்த காலகட்டத்தில் யாருடனும் பேசக் கூடாது. பால் மட்டுமே ஆகாரமாக அருந்த வேண்டும். முதலிலேயே பூஜைக்கு தேவையான அனைத்தையும் நாற்பது நாட்களுக்கு வாங்கிக் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும். கையில் பணம் இல்லை. பூஜைக்கு வேண்டிய சாமானுக்கு எங்கே  போவது? ஆனால் அதுவே கடவுளின் மகிமை. அவர் அது குறித்து யோசனை செய்து கொண்டு இருந்தபோதே முன்பின் தெரியாத யாரோ ஒருவர்  வந்தார். பூஜைக்கு வேண்டிய அனைத்து சாமான்களையும் தந்தார்.  குருநாதரின் அனுமதியோடு அதை பெற்றுக் கொண்டார். அதைக் கொண்டு அனுஷ்டானத்தை செய்யத் துவங்கியவருக்கு எங்கிருந்தோ வந்த சாதுக்களும் சன்யாசிகளும் அனைத்து உதவிகளையும் செய்ய அவை அனைத்தையுமே குருநாதரின் அனுமதியோடு பெற்றுக் கொண்டார். 40 நாட்கள் அனுஷ்டானம் செய்து முடித்தார். அனைவருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும். தன்னிடம் இருந்த உணவை பாத்திரத்தில் இருந்து அவர் எடுத்துப் போடலானார். பாத்திரத்தில் இருந்த உணவும் போடப் போட குறையவே இல்லை. அதில் இருந்து உணவும் வந்து கொண்டே இருந்தது. நானூறுக்கும் மேற்பட்டவர்கள் அன்னதானம் பெற்றார்கள்! அது எப்படி நடந்தது என்பதே ஆச்சர்யம்!!
பல்வேறு இடங்களுக்கும் சுற்றித் திரிந்தவர் தனது 27 ஆம் வயதில் சன்யாச தீட்ஷை பெற்று மதசூதனதாஸ் என்ற பெயரை அடைந்தார். அந்த நேரத்தில் அவர் தந்தை மரணம் அடைந்து விட்ட செய்தி கிடைத்தும் அங்கு அங்கு போகவில்லை. அவர் சகோதரர்களும் ஒன்றன் பின் ஒருவராக மரணம் அடைந்தார்கள். ஆனால் சன்யாச தீஷை பெற்று விட்டால் இனி வீட்டிற்கு செல்ல முடியாது , சொந்த பந்தம் என்பது கிடையாது என்பதினால் அவர் யாருடைய மரணத்துக்கும் செல்லவில்லை. மன உறுதியுடன் இருந்து விட்டார். இன்னமும் அவர் தேடிக் கொண்டு இருந்த நான் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. வயது 29 ஆயிற்று. தனக்கு ஒரு நல்ல குரு தேவை என்பதை உணர்ந்து கொண்டவர் பல இடங்களுக்கும் சென்றபோது சுவாமி விவேகானந்தரை சந்திக்க நேர்ந்தது. அவரை சந்தித்தபோது கண்களில் நீர் ஓட தனக்கு  நடந்தது அனைத்தையும் கூறியவர் தான் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், மனதில் இன்னமும் அமைதி தோன்றவில்லை என்றும் கூற விவேகானந்தரோ சிரித்துக் கொண்டே அனைத்தும் விரைவில் சரியாகி விடும் என்று கூறி விட்டுச் மறைந்து விட்டார். தான் கண்டது கனவா அல்லது நனவா எனத் தெரியாமல் குழம்பிய மதசூதனதாஸ் அது முதல் அடுத்த 12 ஆண்டுகள் விவேகானந்தரின் கொள்கைகளைக் கடைப் பிடித்து வரலானார்.  பல இடங்களிலும் சுற்றித் திரிந்தார். சாதுக்கள் மற்றும் சன்யாசிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு ஆன்மீக அறிவு பெற்றார். அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளும் குஜராத்தில் இருந்த கிர்னார் எனும் காட்டுக்குள் வசித்தார். சுற்றிலும் முதலைகள், மிருகங்கள் என இருந்தும் அவை எதுவுமே அவரை ஒன்றும் செய்யவில்லை.  
 தியான யோகி 
1910 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் வந்து சேரும்வரை பல இடங்களுக்கும் சென்றார். அங்கு அபு மலைப்  பகுதிக்குச் சென்று ஐந்து ஆண்டுகள் அங்கிருந்த ஒரு குகையில் தவம் செய்தார். அங்கு பல நாட்கள் தங்கி இருந்ததினால் பல சாதுக்களுடன்  தொடர்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து பல சாதனாக்களை பயின்றார். அங்கு ஷத்ருக்னதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவருமே ஒரே இடத்தில் படுப்பது உண்டு. ஒரு வித்தியாசம். இரவு நேரத்தில் ஷத்ருக்னதாஸ் வெளியில்தான் படுப்பார். மதசூதனதாசோ தன்னை மிருகங்கள் வந்து கொன்று விடுமோ என பயந்தவாறு குகை வாயிலில் தீயை மூட்டி வைத்து விட்டே உள்ளே படுப்பார். தீ இருந்தால் மிருகங்கள் தாம் உள்ள இடத்துக்கு வராது என நம்பினார். ஆனால் ஷத்ருக்னதாஸ் அவரிடம் கூறுவார் '' என்னதான்  தீ மூட்டினாலும் முடிவு என்பது நமக்கு வந்து விட்டால் நம்மால் தப்பிக்கவே முடியாது. ''. அதற்கேற்ப ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் அவர்கள் இருவரும் வெளியில் படுத்து இருந்தார்கள். மதசூதன்தாஸ் தன்  பக்கத்தில் தீயை மூட்டி விட்டு படுத்திருந்தார். இரவு ஒரு புலி அவர்கள் இருந்த இடத்தை தாண்டிச் சென்று ஒரு காட்டு நாயை விரட்டிப் பிடித்துக் கொன்று விட்டு அதன் மீதி இறைச்சியையும். எலும்புகளையும் அவர்கள் படுத்து இருந்த இடத்தின் அருகில் போட்டு விட்டுச் சென்று விட்டது. அது குறித்து மதசூதனதாசிடம் ஷத்ருக்னதாஸ் கூறினார் '' அதே புலி நம்மையும் கொன்று இருக்கலாம்.. தீயை மூட்டி வைத்து என்ன பயன்? நம்மைத் தாண்டி தீயையும் தாண்டிப் போய் உள்ளது பசியோடு இருந்த அந்தப் புலி.  நம்மை சாப்பிடவில்லை. ஆகவே நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான் ...அவனே நம்மையும் காபற்றுவான் என்ற நம்பிக்கை வர வேண்டும்''. அதைக் கேட்ட மதசூதனதாஸ் மனதில் தெளிவும் ஒரு வைராக்கியமும் வந்தது. அந்த நிகழ்ச்சி அவர் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவு திருப்பு முனையாகவே அமைந்தது.  ஒரு  கட்டத்தில்   அவர் இமயமலை அடிவாரத்துக்குச் சென்று அங்கு இருந்த ஒரு குகைக்குள் அமர்ந்து கொண்டு பத்து ஆண்டுகள் தவம்  செய்து உள்ளார் . மேலும் அங்கு தங்கி இருந்தபோது அந்த வயதிலும் பாலி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்று அறிந்தும், ஹடயோகம், ஆயுர்வேத மருத்துவம், ஹார்மோனிய வாத்தியம் வாசிப்பது போன்றவற்றையும் கற்று அறிந்தார்.
மதசூதனதாசிற்கு மந்திர சக்தி மூலம் குண்டலினியை எழுப்பி ஆன்மீகப் பாதையில் வேகமாகச் அழைத்துச் சென்று இறைவனைக் காண வழி வகுத்தவர் பரமேஸ்வர்தாஸ்ஜி என்ற குரு ஆவார். 1920 ஆம் ஆண்டு தான யோகி ரதன்பூர் என்ற இடத்துக்கு மதசூதனதாஸ்  வந்தபோது அந்த ஊர் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. அந்த ஊரில் மழை காலத்தில் பெய்யும் தண்ணீரை தாங்கி நின்று ஊருக்கு தண்ணீரை தந்து கொண்டு இருந்தது ஒரே ஒரு குளம்தான். மற்ற காலங்களில் அது வற்றிக் கிடக்கும்போது அங்குள்ள மக்கள் வெகு தொலைவு  சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியதாயிற்று. அதைக் கேள்விப்பட்ட மதசூதனதாஸ்  அந்த ஊருக்குச் சென்றார். அந்த குளத்தின் மையப் பகுதிக்குச் சென்று அங்கு சில மணி நேரம் நின்றவாறு ஜெபம் செய்தப் பின்னர் அதில் தானே சிறிதளவு பூமியை தோண்டினார். மூன்றே அடி ஆழம்தான் தோன்றி இருப்பார், அதில் இருந்து தண்ணீர் பீச்சிக் கொண்டு வெளி வந்தது. அந்த தண்ணீரினால் குளம் மீண்டும் நிறைந்தது மட்டும் அல்ல, அதன் பின் எந்த காலத்திலும் அந்தக் குளம் வற்றவே இல்லை. அதனால் அவர் மாபெரும் மகானாக இருக்க வேண்டும் என மக்கள் கருதினார்கள்.
மற்றொரு சம்பவம் நடந்தது. ஒரு வைபவத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டு இருந்தார்கள். வந்தவர்களோ மிக அதிகம். இனிப்பும் தீர்ந்து விட்டது. என்ன செய்வது என இனிப்பு வழங்கியவர்கள் திகைத்து நின்றபோது அந்த பாத்திரத்தை ஒரு துணியால் மூடச் சொல்லிவிட்டு அதில் கையை விட்டு இனிப்பை எடுத்து வழங்குமாறு மதசூதனதாஸ் கூற அவர்களும் அதை செய்ய வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அதே இனிப்புப் பண்டம் கிடைத்தது. இனிப்புப் பண்டமும் தீரவே இல்லை.
இன்னும் ஒரு சம்பவம். ஒருவரின் வீட்டில் நல்ல பால் கொடுத்துக் கொண்டு இருந்த பசுவின் காம்புகளில் இருந்து ஒரு நாள் பாலுக்கு பதிலாக ரத்தமே வந்தது. ஆகவே அவன் மதசூதனதாசிடம் சென்று அந்த பசு மீண்டும் பால் சுரக்கத் துவங்கினால் அவருக்கு தினமும் தான் பால் தருவதாக வேண்டிக் கொள்ள திடீரென அந்த மாட்டின் காம்புகளில் இருந்து ரத்தம் சுரப்பது நின்று பால் சுரக்கலாயிற்று. இப்படியாக அவர் மூலம் தொடர்ந்த மகிமையினால் அவர் புகழ் பல இடங்களிலும் பரவலாயிற்று.
சில நாட்கள் அங்கு இருந்தப் பின் மதசூதனதாஸ் பந்த்வாட் என்ற ஊருக்குச் சென்றார். அங்கிருந்தவர்கள் அவர் மகிமையை கேள்விப்பட்டு இருந்தார்கள். ஆகவே எப்படியாவது அவரை அங்கிருந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்ய வேண்டும் என விரும்பினார்கள். அந்த ஆசிரமத்தில் ஒரு ஹனுமார் ஆலயம் உள்ளது. அது அங்கு வந்ததே ஒரு விசித்திரமான சம்பவத்தினால்தான். ஒரு நாள் ஒரு விவசாயியின் கனவில் ஹனுமார் தோன்றி தான் அந்த விளை நிலத்தில் புதைந்துக் கிடப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைக்குமாறும் கூறினார். அவனும் ஹனுமார் கூறிய இடத்தைத் தோண்டி அதில் புதைந்துக் கிடந்த ஹனுமார் மற்றும் பைரவர் சிலைகளை வெளியில் எடுத்து உள்ளூர் மக்களின் உதவியுடன் அங்கு ஆலயம் அமைத்து இருந்தான். அதற்கு முன் அவன் பூமியைத் தோண்டி ஹனுமார் சிலையை வெளியே எடுக்க முயன்றபோது அது எளிதில் வெளியில் வரவில்லை. எத்தனை முயன்றும்  அதை வெளியில் எடுக்க முடியவில்லை. மீண்டும் அவன் கனவில் தோன்றிய ஹனுமார் ஒன்பது பேர்கள் ஒரு மாட்டு வண்டியில் கயிற்றைக் கட்டி இழுத்தால்  மட்டுமே தான் வெளியில் வருவேன் என்றார்.  அவனும் அது போலவே செய்து சிலையை வெளியில் எடுத்தான். அந்த ஹனுமார் இருந்த அந்த ஆலயத்தில் இருந்ததே ஆசிரமமும். ஆகவே மதசூதனதாசை  அழைத்து அவரை அங்கேயே தங்க வைத்தார்கள். அந்த ஹனுமார் சிலை வைக்கப்பட்டு இருந்த இடத்தின் கீழ் ஒரு குகையும் இருந்தது. அதற்குப் போய் வர சிறு பாதையும் இருந்தது. அதில்தான் மதசூதனதாஸ் தங்கி இருந்து த்யானம் செய்வது பழக்கம். மற்ற நேரங்களில் வெளியில் வந்து பிரசங்கங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் போன்றவற்றை ஆற்றி வந்தார். அது முதல் அவரை மக்கள் தியான யோகி என்று அழைக்கலாயினர்.
தியான யோகி அந்த குகைக்குள் சென்று தியானம் செய்த போது ஆறு அங்குல நீளமான தேள்களும், பூரான் மற்றும் பாம்பு போன்றவை அவரை கடிக்க வந்து அவர் உள்ளே நுழைவதை  தடுக்க முயலுமாம். ஆனால் அவற்றைக் கண்டு கலங்கவில்லை. அனைத்தும் கடவுளின் செயலே என அவற்றை உதாசீனப்படுத்திவிட்டு அங்கு சென்று அமர்ந்தவாறு தியானம் செய்து வந்தார். அவர் உச்சரித்துக் கொண்டே இருந்த ராமநாம மந்திரமே அதற்கு உதவியதாம். அவர் அதை உச்சரிக்க உச்சரிக்க அங்கு வந்த அனைத்து சங்கடங்களும் தானாகவே விலகின.
அங்கு அவர் தங்கி இருந்தபோது அவர் செய்து காட்டிய மகிமைகள் ஏராளம் உண்டு. ஒருமுறை அவர் பயணம் செய்து கொண்டு இருந்த வண்டியில் காஸ் தீர்ந்து விட வழியில்  வண்டி நின்றது. ஊருக்கு செல்ல இன்னும்  75 மைல்கள் இருந்தன. வண்டிக்காரன் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தபோது தியான யோகி அவனிடம், வண்டியை எடுக்குமாறும்,  காஸ் மீட்டரைப் பார்க்காமல் வண்டியை ஓட்டுமாறும் கூறினார். அவனும் வண்டியைக் கிளப்ப எந்த தடங்களும் இல்லாமல் வண்டி ஊருக்கு வந்து சேர்ந்தது.
இன்னொரு சம்பவம். அந்த ஊரில் ஒரு கிணற்றில் ஒரு இளம் பெண் விழுந்து விட்டாள். அவளைக் கஷ்டப்பட்டு  மேலே தூக்கினார்கள். ஆனால் அதற்குள் அவள் மூச்சே நின்று இருந்தது. அழுதபடி அந்தப் பெண்ணை தூக்கிக் கொண்டு அந்த ஹனுமார் ஆலயத்தின் முன் தியான யோகியை  வேண்டிக் கொண்டவாறு  அவளைக் கீழே  கிடத்தினார்கள். அவ்வளவுதான் அங்கு அவளை பூமியில் வைக்க இறந்தவள் எனக் கருதப்பட்டவள் உறக்கம் கலைந்தது போல விழித்து எழுந்தாள்.
இன்னொரு முறை அந்த ஊரில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. ஊரில் இருந்த மூன்று கிணறுகளை தோண்டியும் தண்ணீர் வரவில்லை. யோகியின் கனவில் தோன்றிய ஹனுமார் அவரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை தோண்டுமாறு கூறினார். ஆகவே தியான யோகி தானே கிளம்பிச் சென்று அந்த இடத்தை தோண்டினார். மூன்றே அடி தோண்டுவதற்குள்  அந்த இடத்தில் இருந்து தண்ணீர் பீரிட்டபடி  வெளியில் வந்தது. ஊரில் தண்ணீர் பிரச்சனை தீர்ந்தது.
இன்னும் ஒருமுறை தியான யோகி சுற்றுப் பயணத்தில் இருந்தார். ஒரு இடத்தில் தாகம் எடுக்க கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்த ஒரு பெண்ணிடம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட்டார். ஆனால் அவள் தண்ணீர் தர மறுத்ததும் இல்லாமல் அவரை தரக் குறைவாக பேசி  அனுப்பினாள். ஆகவே கோபம் அடைந்தவர்  அந்த இடத்தில் உள்ள தண்ணீர் அனைத்தும் உப்பு நீராக மாறட்டும் என சபித்தார். அவ்வளவுதான், அத்தனை நாளும் சுவையாக  இருந்த தண்ணீர் அனைத்தும் உப்பு நீராக மாறின.  அவர்கள் ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து  மன்னிப்புக் கேட்டு அழுதார்கள். ஆகவே இறக்கம் கொண்டவர் மீண்டும் அந்த ஊரின் அனைத்து தண்ணீரையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர ஆறுமாதம் அனுஷ்டானம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது  அவர் நினைத்தார் கோபம் கொள்வது எளிது,   ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை  நிவர்த்தி செய்வது மிகக் கடினம்.
இப்படியாக பல இடங்களுக்கும் சென்று ஆன்மீக ஒளிப் பிரச்சாரம் செய்து கொண்டு வந்தவருக்கு  ஒரு கட்டத்தில் தனக்கு வாரிசை உருவாக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அந்த நேரத்தில் அவர் மும்பைக்குச் சென்று இருந்தார். அங்கு பிரவீன்ஜி ஜானி என்ற தம்முடைய பக்தர் வீட்டில் தங்கி இருந்தார். அவர்கள் தியான யோகி கூறியபடி நவராத்திரி  விரதங்களை அனுஷ்டித்து வந்தார்கள். அவர்களுடைய மகள் ஆஷா என்பவள் பதிமூன்றே வயதான சிறுமியாக அப்போது இருந்தாள். அவளுக்கு படிப்பில் நாட்டம் இல்லை. எப்போது தியானத்தில் ஈடுபட்டு வந்தாள் . அது அதிகமாக அதிகமாக அவளுக்கு சாமி ஏறியது போல அடிக்கடி வரத் துவங்கியது.  தன்னை துர்கையின் அவதாரம் எனக் கூறிக் கொண்டாள். அந்த நேரத்தில்தான் தியான யோகியும் அங்கு வந்தார். அவள் நிலையைக் குறித்து ஆஷாவின் பெற்றோர்கள் அவரிடம் கூற அவளே தனக்கு வாரிசாக உருவாகி உள்ளாள் என்பதைப் புரிந்து கொண்ட தியான யோகி அவள் பெற்றோர்களிடம் அது குறித்துப் பேசி அவளை தானே சிஷ்யையாக எடுத்துக் கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று தமது இயக்கத்தை பரப்ப அவளை தயார் செய்தார். சில நாட்களில் தீபக்ஜி  என்பவரும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்.
 தியான யோகியும்  ஆனந்தி மாவும் 
அவர்கள் மூவரும் ஒரு கட்டத்தில் அமேரிக்காவிற்கு  சென்று ஆன்மீக வகுப்புக்களை நடத்தத் துவங்கினார்கள். பல பக்தர்கள் அவரிடம் வந்து குவிந்தார்கள். தியான யோகி அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தார். அப்படிப்பட்ட நேரத்தில்  அனைவரிடமும் ஆஷா தேவியே தனது வாரிசு எனப் வெளிப்படையாகப் பிரகடனப் படுத்தினார். நாட்கள் செல்லச் செல்ல தியான யோகியின் உடல் நலிவுற்றது. யாரோ அவருக்கு சூனியம் வைத்து விட்டதாக பலரும் நினைக்கலாயினர். அவரும் உடல் நிலையைக் கருதி 1981 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அமெரிக்காவில் ஆஷா மாதாவும் தீபக்ஜீயும் ஆன்மீகப் தொடர்ந்து கொண்டு   இருந்தார்கள். அதன் பின் சில மாதங்களில் சில காரணங்களுக்காக தியான யோகி அவர்கள் இருவரையும் தன்னிடம் வரவழைத்து இருவரையும் கட்டாயப்படுத்தி ஆன்மீக திருமணம் செய்து வைத்தார். அதற்குக் காரணம் ஆஷா மாவிற்கு அடிக்கடி சாமி வருவதினால் அவளை தன்னிலை அடைய வைக்க வேண்டும் என்பதற்கும் , வெளிநாட்டு வாழ்க்கைக்கு அவளுக்கு ஒரு துணை தேவை என்பதினாலும் அப்படி முடிவு செய்ததாகக் கூறினார். அதன்பின் அவர்கள் மீண்டும் 1982 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்தார்கள்.
 தியான யோகியின் சமாதி 
படம் நன்றி:

இப்படியாக காலம் சென்று கொண்டு இருக்க 1992 ஆம் ஆண்டு ஆமாதாபாத் நகரில் அவர் தங்கி இருந்தபோது அவர்களை இந்தியாவிற்கு வரவழைத்து தனது அனைத்து சக்திகளையும் ஆஷா மாவுக்கு தந்துவிட்டு ஆஷா மா மற்றும் தீபக்ஜீ  இருவருக்கும் சேர்த்து 'ஆனந்தி மா' என்ற பட்டப் பெயரை அளித்தார். 1994 ஆம் ஆண்டு தனது ஆன்மீகப் பணிகளை முடித்துக் கொண்டவர் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று மகா சமாதி அடைந்தார்.
 தியான யோகி, ஆனந்தி மா மற்றும் தீபக்ஜி 

அவர் விட்டுச் சென்றுள்ள ஆன்மீகப் பணிகளை இன்று ஆனந்து மா எனும் ஆஷா மாதாவும், தீபக்ஜீயும் செய்து வருகிறார்கள். குஜராத் மாநிலத்தில் தியான யோகி இறுதிக் கடன்களை செய்த இடத்தின் அருகிலேயே நர்மதை நதிக்கரையில் தியானபீடம் ஒன்றை அமைத்து உள்ளார்கள். அங்கு தியான யோகியின் ஒரு ஆலயமும் அமைத்து உள்ளார்கள். அவர்கள் அனைத்து இடங்களிலும் யோகா மையங்களில் யோகா கலையைக் கற்றுத் தந்தபடியும் மற்றும் ஆன்மீக வகுப்புக்களையும் நடத்தி வருகிறார்கள்.
தியான யோகியின் பாதங்களுக்கு  பூஜை


அமெரிக்காவில் சுமார் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் 
அமைந்து உள்ள ஆசிரமத்தின் விலாசம் :-
DYC - Antioch

3306 Contra Loma Boulevard

Antioch, CA

925-779-9660

இந்தியாவின்  குஜராத் மானிலத்தில் 
பருச் மாவட்டத்தில் ஆசிரமத்தின் விலாசம் :-
Shri Anandi Ma Ashram

P.O. Nikora

Dist. Bharuch

Gujarat, India

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E