Updated Version - Galli Anjineyar Temple, Bangalore
கல்லி ( காற்று ) ஆஞ்சநேய ஆலயம்
சாந்திப்பிரியா
சாந்திப்பிரியா
சமீபத்தில் கல்லி ஆஞ்சநேயர ஆலயத்தைப் பற்றிய மேலும் சில விவரங்களும் ஆலய கட்டிட அமைப்பைப் பற்றியும் கிடைத்த தகவல்கள் இதோ கீழே உள்ளது.
எந்த ஆலயத்திலுமே நுழைந்தால் ஏதாவது ஒரு ஸ்வாமியின் சிலை கண்களில் தெரியும் நிலையில் சன்னதி காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலயத்திலோ சாலையில் அமைந்து உள்ள நுழைவாயில் மூலம் உள்ளே நுழைந்தால் ஹனுமாரின் சன்னதி உள்ள அறையின் பின் பக்க சுவரே காணப்படுகின்றது. வேறு எந்த சுவாமியின் சன்னதியோ அல்லது சிலையோ வாயிலில் தெரிவது இல்லை. ஆலயத்தில் சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பலரும் தத்தம் வேண்டுதலுக்கு ஏற்ப வெற்றிலை மாலை மற்றும் குறிக்கோள்களைக் கொண்ட காகித மாலைகளையும் ஹனுமாருக்குப் படைக்கின்றார்கள். ஹனுமார் சுமார் பத்து அடிக்கும் மேல் உயரமாக இருக்கின்றார். ஒரு பெரிய பாறையில் அவர் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது.
ஹனுமார் சன்னதிக்கு எதிரில் இடதுபுறம் காணப்படும் சன்னதியில் ராமர், சீதை, லஷ்மணர் என அனைவரும் நின்று கொண்டு இருக்க எப்போதும் போல ஹனுமார் ராமரின் பாதத்தடியில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அங்குதான் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றன. அது போலவே ஹனுமார் சன்னத்க்கு எதிரில் வலதுபக்கம் காணப்படுவது மிகப் பெரிய அளவிலான வெங்கடாசலபதி. இவற்றை தவிர்த்து அந்த ஆலயத்தில் நுழைந்ததுமே வலதுபுறத்தில் உள்ள சன்னதியில் நவகிரகங்கள் காணப்படுகின்றன. அந்த நவக்கிரஹ சன்னதிக்குள் ஒரு மூலையில் இருபக்க சுவர்களையும் தொட்டவாறு குறுக்காக குறுக்குவாட்டில் ராகு கேது பகவான்கள் உள்ளனர் (நவக்கிரஹங்களைத் தவிர ) . நவக்கிரகங்களில் உள்ள ராகு கேதுவைத் தவிர எதற்காக அந்த தனி பீடம் அவர்களுக்கு உள்ளது என்பது தெரியவில்லை என்றாலும் பெரும்பாலான பெங்களுர் ஆலயங்களில் நவக்கிரகங்களைத் தவிர ராகு கேதுவிற்கு தனிச் சன்னதிகள் உள்ளதைப் போலவே இங்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கலாம்.
ஆலயத்தின் வரைபடம் இது . அதை பெரிய அளவில் காண படத்தின் மீது கிளிக் செய்யவும் :-
முன்னர் நான் தந்திருந்த செய்தியின் சாரம் இது.
செப்டம்பர் மாதம் இருபத்தி ஐந்தாம் தேதியன்று மாலை சுமார் இரண்டு மணி நேரம் திடீரென பெய்த பெரு மழையினால் பெங்களுர் நகரில் பல இடங்களில் தண்ணீர் புகுந்தது. அதில் மைசூர் செல்லும் சாலையில் உள்ள கல்லி ஆஞ்சேநேயர் ஆலயமும் ஒன்று. கல்லி என்றால் கன்னடத்தில் காற்று எனப் பொருள். அவர் காற்றுப் போல பறந்து வந்து துயர் தீர்ப்பவர் என்பதினால் கல்லி ஆஞ்சினேயர் என்றும், வாயுவின் புதல்வர் என்பதினாலும் காற்று ஆஞ்சேநேயர் என்கிறார்கள். பெங்களுர் மற்றும் மைசூர் சாலையில் யஸ்வந்தபுரம் நோக்கிச் செல்லும் நெடும் சாலையில் அந்த ஆலயம் உள்ளது.
விஜயநகர மன்னர்கள் கர்நாடகத்தில் உள்ள பகுதிகளை ஆண்டு வந்தபோது மைசூர் செல்லும் பாதையில் உள்ள சென்னப்பட்டினா என்ற ஊரில் பிறந்த யதிராஜா என்பவர் சன்யாசத்தை ஏற்று வியாசராய என்ற பெயர் பெற்று பெரும் முனிவராக வாழ்ந்து வந்தாராம். அவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர மன்னனின் ராஜ குருவாக இருந்தவர். அவர் ஹனுமான் உபாசகர். அதனால் அவர் கர்நாடகத்தில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆஞ்சேநேயர் ஆலயங்களை பல இடங்களிலும் நிறுவி உள்ளார். அவர் மலைப் பகுதிகளிலும், பாறைகளிலும் ஹனுமானின் சிலைகளை செதுக்கச் சொல்லி அவற்றை அங்காங்கே பிரதிஷ்டை செய்து இருக்கின்றார் என்கிறார்கள் . அவர் நிறுவி உள்ள ஆலயங்களில் உள்ள அனைத்து ஹனுமாரின் சிலைகளிலும் ஹனுமாரின் கை ஒன்று தூக்கி உள்ளபடியும், வால் வளைந்து வளைந்து தலைக்கு மேல் சென்று சற்று சுருண்டு இருக்கும். வாலின் நுனியில் ஒரு மணியும் கட்டப்பட்டு இருக்கும். அதுவே அவர் நிறுவிய ஹனுமான் என்று புரியும் என்று நம்புகிறார்கள். கிருஷ்ணகிரியில் உள்ள காட்டு வீர ஆஞ்சினேயர் ஆலயத்தில் உள்ள சிலையும் அது போலவே அமைந்து உள்ளது.
அதே ஹனுமானின் இன்னொரு பக்கத் தோற்றம்
முன்னர் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் ஓடிக்கொண்டு இருந்த யதுர்முக்தி மற்றும் பஷ்சிமவாகினி என்ற இரண்டு நதிகள் கலந்த இடத்தில் ஆலயத்தை அவர் நிறுவினாராம். ஆலயத்தை அவர் கட்டியது இல்லை, ஹனுமான் சிலைகளை கண்டறிந்து அல்லது சிலை வடிவமைக்கச் சொல்லி அவற்றை பிரதிஷ்டை செய்து அங்காங்கே வழிபாடுகளைத் துவக்கினார் என்கிறார்கள்.அதே ஹனுமானின் இன்னொரு தோற்றம்
இந்த கல்லி ஆஞ்சேநேயர் ஆலயத்தில் உள்ள ஹனுமானின் சிலை அந்த இடத்தில் நதியில் கிடைத்ததாம். அது எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆகவே அதை தலை கூரை இல்லாத அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தாராம். இந்த ஆலயத்தில் உள்ள ஹனுமானின் சிலையில் அவருக்கு மீசை உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். ஹனுமானை எந்த இடத்திலும் இந்த கோலத்தில் பார்ப்பது அரிது. வளைந்து வளைந்து தலைக்கு மேல் செல்லும் அவருடைய வால் நுனி சுருண்டு சக்கரம் போல உள்ளது. அதில் ஒரு மணியும் கட்டப்பட்டு உள்ளது போல காட்சி தருகின்றது. வெற்றியைக் குறிப்பது போல மேலே ஏந்தி உள்ள ஒரு கை அபய முத்திரையைக் காட்ட, மற்றொரு கை தாமரை மலரை ஏந்தி உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சினேயரை யதுரமுகி ஆஞ்சினேயர் என்றும் கூறுகிறார்கள். அவருடைய முகம் சிந்தூரினால் ( ஆரஞ்சு வண்ணச் சிவப்பு) பூசப்பட்டு உள்ளது. ஆலயத்தில் நுழைந்தாலே ஒருவரது மனதில் அமைதி கிட்டும், மனம் சாந்தி அடையும். மேலும் அவரை அந்த ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும், ஆபத்துக்கள் விலகும், காரிய சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக