Kolak Kalai
கோலக் கலையும் அதன் சில உண்மைகளும் சாந்திப்பிரியா கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப் போன்றதே. இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் மலைகளிலும், பள்ளங்களிலும், குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல உருவங்கள் உள்ளதைக் காணலாம். ஆகவேதான் கோலக் கலை ஆதி முதலேயே இருந்துள்ளது என்பதை நம்ப வேண்டி உள்ளது. வாயிலில் கோலங்களைப் போடுவது ஒரு பழக்கமாக இருந்துள்ளது என்றாலும் அதற்கும் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, தர்ம தேவதைகளை உள்ளே அழைக்க, தூய ஆவிகளை உள்ளே அழைக்க மற்றும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்க என பல காரணங்களுக்காக பல விதமான கோலங்கள் போடப்பட்டன. அப்படியாக கோலங்களைப் போட்டபோது அதைப் போடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே போட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக உள்ளது. அதற்கு மேலும் சென்றால் கோலங்கள் போடுவது புழு பூச்சிகளுக்கு உணவாக இருக்கட்டும் என்பதற...