Thula Puranam -16
துலா புராணம்- 16
காவிரி ஆற்றின் மகிமை
சாந்திப்பிரியா
பாகம்- 17
சந்தேகம் வந்ததும் கண்களை மூடிக் கொண்டு நிஷ்டையில் அமர்ந்து
உள்ளது போல இருந்த அர்ஜுன சன்யாசியிடம் சென்று அவள் கேட்டாள் 'ஸ்வாமி
உங்களைப் பார்த்தால் எனக்கு நீங்கள் சன்யாசி போல தோன்றவில்லை. நான் பல
காலமாக அர்ஜுனனை மனதில் நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். ஒருவேளை
நீங்கள்தான் அர்ஜுனனோ என்றும், இப்படி போலி வேடம் அணிந்து கொண்டு என்னைக்
காண வந்துள்ளீர்களோ என்று மனம் நினைக்கின்றது. ஆகவே உண்மையில் நீங்கள் யார்
என்பதை எனக்கு தெரியப்படுத்த வேண்டும்'.
அர்ஜுன சன்யாசியிடம் அவர் சன்யாசிதானா என்பதைக்
குறித்து தனக்கு சந்தேகம் உள்ளதாக சுபத்ரை கூறினாள்
குறித்து தனக்கு சந்தேகம் உள்ளதாக சுபத்ரை கூறினாள்
அவளும் உடனே கிளம்பிச் சென்று தன்னுடைய தாயார் மற்றும் தந்தையிடம்
விஷயத்தைக் கூற அவர்களும் பேரானந்தம் கொண்டார்கள். ஆனால் பலராமரை அதற்கு
எப்படி சம்மதிக்க வைப்பது என்பதே அனைவருக்கும் பெரும் கவலையாக இருந்தது.
அவர்கள் உடனே கிருஷ்ணரை அழைத்து தனிமையில் ஆலோசிக்க கிருஷ்ணரோ தனக்கு
ஒன்றுமே தெரியாதது போல பாசாங்கு செய்துவிட்டு ' தாயே சுபத்ரையின் மனோரதம்
கூடி வருகிறது போலிருக்கிறதே. பரவாய் இல்லை என்ன நடக்கின்றது என்று
பார்க்கலாம். நான் ஒரு காரியம் செய்கிறேன். பலராமரையும் அவரை
சேர்ந்தவர்களையும் விரத யாத்திரை மற்றும் நதி பூஜை என்ற பெயரில்
இங்கிருந்து அழைத்துச் செல்கிராஎன். பிறகு அவற்றை செய்து முடித்தப் பின்
நாளை திரும்புவேன். நாங்கள் கிளம்பிச் சென்றதும் நீங்கள் உடனே
அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் ரிஷிகளின் முன்னிலையில் கந்தர்வ விவாஹத்தை
நடத்தி வைத்து அவர்கள் இருவரையும் இங்கிருந்து அனுப்பி விடுங்கள். மீதியை
நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு பலராமர் மற்றும் அவருடன்
இருந்தவர்களை அழைத்து தான் ஒரு விரதம் செய்ய வேண்டிக் கொண்டு
இருந்ததாகவும், ஆகவே தன்னுடன் அடுத்த ஊரில் இருந்த நதியில் நீராடி, விரதம்
இருந்து, விரத பூஜையை முடித்துக் கொண்டு வர அனைவரும் வர வேண்டும்
என்றார். 'இரண்டு நாட்கள்தானே, நம் பெற்றோர்கள் அரண்மனைப் பார்த்துக்
கொள்வார்கள். யோகிக்கு சுபத்ரை பணிவிடை செய்வாள், ஆகவே எதற்கும் கவலை
இல்லை' என்று கூறிவிட்டு அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு
சென்றவர் அந்த பூஜை மற்றும் யாகத்தை முனிவர்களைக் கொண்டு செய்ய வைத்தார். அது முடிய பல மணி நேரம் ஆயிற்று. மாலையும் வந்து இரவும் ஆகி விட்டது. ஆகவே
அனைவரும் அந்தக் கடல் அருகிலேயே இரவை கழித்து விட்டு ஆயாசமாக இருந்தப் பின்
மறுநாள் மதியம் கிளம்பிச் செல்ல முடிவு செய்தார்கள்.
ரிஷி முனிவர்கள் கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதிற்காக
செய்த விரத பூஜை மற்றும் ஹோமம்
இதுவரை அந்தக் கதையைக் கூறிய அகஸ்தியர் அனைவருக்கும் கூறினார் ' இந்த சுபத்ரை திருமணக் கதையைக் கேட்பவர்கள் பரம கதியை அடைவார்கள். இதை புண்ணிய காலத்தில் கேட்டால் புத்ர பாக்கியம் பெறுவார்கள். ஏகாதசி அன்று கண் விழித்துக் கேட்டால் சுகரைப் போல பெருமையை பெறுவார்கள் . வைகுண்ட வாசியாவார்கள். தக்ஷயன் யாகத்தில் இதைக் கேட்டதால்தான் பரமசிவனும் பார்வதியை மீண்டும் மண முடியா முடிந்தது. இதற்கு சமமான இஷ்டத்தைத் தரும் புண்ணியக் கதை வேறு எதுவுமே கிடையாது'. என்று கூறியதும், அரிச்சந்திரன் அவரைப் பார்த்துக் கூறினான் 'மா முனிவரே, அதற்குப் பிறகு என்ன ஆயிற்று என்பதையும் கூறுங்கள்'.
அகஸ்தியர் மீதிக் கதையைத் தொடர்ந்தார்.
' விவாஹம் முடிந்ததும் சுபத்ரையை தேரில் ஏற்றிக் கொண்டு கிளம்பிய அர்ஜுனான் பத்து திக்குக்களிலும் ஒலிக்கும்படி நாண் ஒலியை எழுப்பினான். அந்த ஒலியைக் கேட்ட நகர காவலாளிகள் விழித்தெழுந்து ஓடி வந்தார்கள். அர்ஜுனனைப் பிடிக்கப் பாய்ந்தார்கள். மூன்று யோசனை தூரம் கேட்கும் வகையில் -நகருக்கு ஆபத்து- என்ற சங்கேத பேரிகை அடித்தார்கள். அவர்கள் அனைவரையும் நொடிப் பொழுதில் துவம்சம் செய்த காண்டீபன் அந்த சங்கேத பேரிகை ஒலியைக் கேட்டு ஓடி வந்த பல்லாயிரக்கணக்கான சூரர்களையும் தோல்வி அடையச் செய்து கிளம்பிச் சென்றான்.
தன்னை தடுக்க வந்த அனைவரையும் நொடிப்
பொழுதில்
துவம்சம் செய்த காண்டீபன்
அங்கிருந்த அனைவரும் கோபக்கனல் தெறிக்க கிளம்பியவரைக் கண்டு பயந்து போய் பேசாமல் நின்றார்கள். யாதவ சைனியங்கள் பின் தொடர பலராமர் செல்லுகையில் அவரை வழிமறித்தார் கிருஷ்ணர். பாலராமரிடம் கூறினார் ' பலராமா, நாம் அனைவரும் ஆத்திரத்தில் அறிவிழந்து பேசுகிறோம். முதலில் அந்த யோகியை அரண்மனையில் விட்டதே தவறு. அதன் பின் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. வேஷதாரியான அந்த யோகியைக் கொன்றால் நம் சகோதரியின் கதி என்ன ஆகும் என்பதை ஒரு கணம் யோசனை செய்து பார். சுப்ரதை அவனை மணந்து கொண்டு அவனுடன் சென்று உள்ளாள். அதற்குக் காரணம் அவரை அவளும் விரும்பியே கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருந்திருக்க வேண்டும். யார் மனதில் உள்ளதை யார்தான் அறிய முடியும்? '.
அதைக் கேட்ட பலராமர் இன்னும் கோபமடைந்து கூறினார் 'கிருஷ்ணா, அர்ஜுனன் உனக்கு அடிமை. உனக்கு தெரிந்தேதான் அனைத்தும் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது ' என்று கூற கிருஷ்ணர் நாடகமாடினார் ' அண்ணா, என் மீது நீயே சந்தேகப்படும்போது நான் என்ன சொல்வது? எனக்குள் உள்ள ஹரி மட்டுமே உண்மையை அறிவார். இனி நான் பேசப்போவது இல்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் அனைவரும் செய்யுங்கள். எப்போது என் மீதே சந்தேகம் வந்துவிட்டதோ இனி எனக்கு ராஜ வம்ச வாழ்க்கையே தேவை இல்லை. நான் எங்காவது நதிக்கரைக்குச் சென்று மௌனியாக வாழ்ந்து விடுகிறேன். என்னால் இனி யாருக்கும் துன்பம் வராது ' என கண்களில் நீர் வழிய தேரை விட்டு இறங்கி, தன் கிரீடத்தையும் கயற்றினார்.
அதைக் கண்ட பலராமர் ஓடோடி வந்து அவரை கட்டி அணைத்தவாறு கூறினார் 'குழந்தாய் நான் உன்னை விடப் பெரியவன்தான். ஆனால் நாடே உன்னுடைய புத்திக் கூர்மையை அல்லவா மெச்சுகிறது. வா, அரண்மனைக்கு செல்வோம். இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என நீயே முடிவைக் கூறு. நீ எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் அனைவரும் கட்டுப்படுகிறோம். இது சத்தியம்' என்று கூற கிருஷ்ணர் கூறினார் ' அண்ணா, நடந்தது நடந்து விட்டது. அர்ஜுனன் நம் சகோதரியை மணந்து கொண்டு விட்டான். அவளும் அவனை கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டு விட்டால். ஆகவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவன் நமக்கு பந்து ஆகி விட்டான். சந்தனு மகராஜ் கங்கையை கந்தர்வ முறையில் விவாஹம் செய்து கொள்ளவில்லையா? அவர் இன்னும் ஜீவித்துக் கொண்டுதானே இருக்கிறார். என்னையே பார், ருக்மணியை அவளது பெற்றோர்களுக்கு பிடிக்காவிடிலும் அவளை நானல்லவா கந்தர்வ விவாஹம் செய்து கொண்டேன். ஆகவே நாம் அனைவரும் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று முறைப்படி அந்த திருமணத்தை நடத்தி வைப்போம். அதுவே நம் பெற்றோர்களுக்கும், நம் சகோதரிக்கும் செய்யும் கடமையாகும். அதுவே அவளை சந்தோஷப்படுத்தும்'.
சீதனங்களை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரும் மற்றவர்களும்
ஹஸ்தினாபுரத்துக்கு கிளம்பிச் சென்றார்கள்
தர்மர் கண்ணீர் விட்டுக் கூறினார் ' உலகில் எங்களைவிட துர்பாக்கியம் செய்தவர்கள் இல்லை. பிறந்தது முதலேயே துன்பத்தில் உழலுகிறோம். தந்தையை இழந்தோம். வனத்துக்கு துரத்தப்பட்டோம். அரக்கு மாளிகையில் தீயில் கருகி மரணம் அடைய இருந்தவர்கள் உன் உபாயத்தினால் தப்பினோம். இன்னும் எத்தனையோ அவமானங்கள் பட்டோம்.' என்று தன்னை மறந்து கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் அனைவருக்கும் கூறினார் ' ஈஸ்வர கிருபை உள்ளவனுக்கே அனைத்து சம்பத்தும் கிடைக்கும். நமக்கு ஜென்மாந்திரத்தில் விதித்தபடிதான் அனைத்தும் நடக்கின்றது. விரைவில் நிச்சயம் நம் அனைவருக்கும் சகல நன்மையையும் கிடைக்க உள்ளது. ராஜன் வினசப்படாதே. தனுர் மாதம் உஷ: காலத்தில் பூஜை செய்தால் பகவான் சந்தோஷம் அடைந்து அனைத்தையும் தருவார். ஆகவே அந்த காலத்தில் பூஜை செய்து ஜனார்தனை வழிபாட்டு பயத்தம் பொங்கல் நெய் வித்தியம் செய்து விஷ்ணு பக்தர்களுக்குக் கொடு. லக்ஷ்மி ஹிருதய யந்திரத்தை ஆவாஹனம் செய்து, துலா ஸ்நானமும் செய்தே இந்திரனின் மனைவி இந்திராணி அனைத்து சம்பத்தையும் பெற்றாள். அர்ஜுனன் கூட அதனால்தான் சுபத்ரையை மணந்து கொண்டு பெருமையும் பெற்றுள்ளான்' என்று கூறி விட்டு அனைவருக்கு லஷ்மி ஹிருதய பூஜையை செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தப் பின் அதை அவர்களுக்கு உபதேசித்தார்.
.....தொடரும்
முந்தைய பாகங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக