Greatness of Lakshmi Puja

புராணங்களின் சில கதைகள் லஷ்மி விரத மகிமை சாந்திப்பிரியா இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார். துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு மன்னனின் பெயர் பத்ராஸ்வரஸ். அவனுக்கு சூரத்சந்தரிகா எனும் மனைவி இருந்தாள். அவள் மூலம் அந்த மன்னனுக்கு ஏழு மகன்களும், ஒரு பெண்ணும் பிறந்து இருந்தார்கள். அந்த மகளின் பெயர் ஸ்யாமபாலா என்பது. இளம் கன்னியான அவள் நல்ல பண்புகளைக் கொண்டவள். அவள் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டு இருப்பாள். அப்படி அவள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு வயதான கிழவி வந்து நிற்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று அவள் எதற்காக வந்துள்ளாள் என்பதைப் பார்க்கலானாள். ஒரு மூதாட்டி உருவில் வந்து இருந்தது லஷ்மி தேவியே. அதை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரண்மனைக் காவலன் வந்திருந்த கிழவியை நோக்கி 'நீ யார், எதற்காக இங்கு வந்துள்ளாய்?' என்று கேட்டான். வந்த கிழவியோ தான் அரண்மனையில் உள்ள அரசியைக் காண வந்துள்ளதாகக் கூறினாள்...