Aprameya Swami Temple

அப்ரமேய ஸ்வாமி 
மற்றும்  
நவநீத கிருஷ்ணன் ஆலயம்

சாந்திப்பிரியா
 
 அப்ரமேயர் 
 
கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் உள்ள இன்னொரு புகழ் பெற்ற ஆலயமே நவநீத கிருஷ்ணன் மற்றும்  அப்ரமேய ஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது . தேசிய நெடுஞ் சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் மாலூரைத் தாண்டி அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் செல்லும் சாலையில்தான் நாடி நரசிம்மர் ஆலயமும்  உள்ளது.
ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத  அப்ரமேயர் 
 
அப்ரமேயர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இல்லை இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆலயத்தின் கட்டிட அமைப்பைப் பார்க்கும் போது இந்த ஆலயம் நிச்சயமாக 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் அதாவது  980 ஆம் ஆண்டுகளில் இங்கு நந்த தீபம் ஏற்றும் சேவைகள் நடைபெற்று உள்ளவைக்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.  இதை வைஷ்ணவ பக்தர்கள் வைஷ்ணவ திவ்ய ஷேத்திரம் என்று போற்றிப் புகழ்கிறார்கள். ஆலயம் பெரும் பாறாங்கல் பாறையினால் கட்டப்பட்டு உள்ளது.
அந்த ஆலயத்துக்கு நான் சென்று இருந்தபோது ஆலயம் மூட இன்னும் பத்து நிமிடமே இருந்தது. ஆகவே அவசரம் அவசரமாக ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆயாசமாக அங்கு இருந்த ஒரு பண்டிதரிடம் இந்த ஆலயத்தின் விவரத்தைக் கேட்டறிந்தேன். இந்த ஆலய மகிமை குறித்து கூறப்படும் ஒரு கதையில் ஒரு காலத்தில் தெற்கு அயோத்தியா மற்றும் சதுர் வேத மங்களபுரா என அழைக்கப்பட்ட இந்த தென் இந்தியப் பகுதியில் ராம பிரான் வந்து  தங்கி இருந்தார் எனவும், அப்போது அவர் யாகங்களும், ஹோமங்களும் செய்து இங்கு அப்ரமேயரை வணங்கித் துதித்தார் என்றும் கூறுகிறார்கள்.
அவர் கூறிய ஆலய வரலாற்றுப் பெருமைக்கு இடையே ''இந்த ஆலயத்தில் அப்ரமேயர், ராமர் மற்றும் கிருஷ்ணர் போன்ற மூவருமே உள்ளனரே, அனைவருமே விஷ்ணுவின் அவதாரம்தானே, அப்படி என்றால் விஷ்ணுவே விஷ்ணுவை, வணங்கி வந்தாரா என்ற ஒரு யதார்த்தமான கேள்வியை நான் அங்கிருந்த ஒரு பண்டிதரிடம் கேட்டபோது அவர் கூறிய  கருத்து  உள்ளது போலவே தோன்றியது. அவர் தனது கருத்தாக இவ்வாறாக கூறினார் ''மூவருக்கும் ஒரே இடத்தில் சன்னதி உள்ளது என்பதின் காரணம் ராமபிரான் மனித உருவில் இங்கு வந்து வாழ்ந்த போது, விஷ்ணுவான அப்ரமேயரை வழிபட வேண்டி வந்தது. முதலில் இங்கு ராமபிரானுக்கு சன்னதி கிடையாது. அப்ரமேயருக்கு  ஆலயம் தோன்றிய வெகு காலத்துக்குப் பிறகே சன்னதி அமைத்து இருக்க வேண்டும்.  இந்த ஊரின் அருகில் உள்ள மேல்கோட்டை எனும் இடத்தில் உள்ள யோக நரசிம்மர் ஆலயத்தில் உள்ள சிலையை கிருஷ்ண பகவான் ஸ்தாபித்ததாகவும், விஷ்ணுவை அங்கு பிரும்மா வந்து வழிப்பட்டதாகவும் சில புராணக் கதைகள் உள்ளன. மேலும் அங்கு அவரை உற்சவ மூர்த்தியாக ராமபிரானின் பிள்ளையான குசா (லவ-குசா சகோதரர்கள் )  வழிபட்டபோது அந்த உற்சவ மூர்த்தி ராமபிரியா என்று அழைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆகவே அந்த செய்தியை  இந்த ஆலயத்துடன் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், இங்குள்ள அப்ரமேயரையும் ராமப்பிரியா என்றும் கூறுவதினால் ஒரு வேளை இந்த அப்ப்ரமேயர் சிலையைக் கூட கிருஷ்ணரே ஸ்தாபனம் செய்து இருக்கலாம் என்றும், தன்னை ஸ்தாபித்த கிருஷ்ணனுக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்பதற்காக நவநீத கிருஷ்ணனுக்கும் வியாச முனிவர் மூலம் இங்கு சன்னதி அமைக்க விஷ்ணுவே ஏற்பாடு செய்து இருக்கலாம் எனவும் நம்ப இடம் உள்ளது. ஒரு புராணக் கதையின்படி கிருதேய யுகத்தில் விஜயபாலா என்ற மன்னன் விஷ்ணுவை அப்ரமேய வடிவில் பூஜித்து வந்துள்ளதாகவும், த்ரேதா யுகத்தில் கான்வ முனிவர் அப்ரமேயரை  வழிபட்டுளதாகவும், புலவர் கபிலரே அப்ரமேயரின் பெருமையைப் பரப்பி வந்துள்ளார் என்பதாகவும் சில கதைகள் உள்ளன. இங்கு ராமானுஜர் வந்து வழிபாட்டு சேவை செய்து உள்ளார்.''
ஆக இங்கு பல ரிஷி முனிவர் இருந்துள்ளார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகின்றது. ஆகவே வியாசர் இங்கு நவநீத கிருஷ்ணரை ஸ்தாபனம் செய்து இருக்கலாம். இதற்குக் காரணம் ஆலயம் கட்டப்பட்டு உள்ள காலத்தைத் தவிர, இந்த ஆலயம் எதற்காக ,யாரால் கட்டப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை . ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் இந்த ஆலயம் விரிவாக்கப்பட்டுள்ளது என்று சரித்திரக் குறிப்புக்கள் இங்கு கிடைத்து உள்ளதாம். நாமும் அப்ரமேயர் ஆலாய சுவற்றின் வெளிப்புறத்தில் (அப்ரமேயர் மற்றும் தாயார் சன்னதிக்கு செல்லும் இடைப் பகுதி பிராகாரத்தில்) கல் பாறைகளை உற்றுப் பார்த்தால் பல செய்திகளை செதுக்கி இருப்பது தெரியும். அவை என்ன மொழியில் உள்ளது என்று நமக்கு புரியாது. சரித்திர வல்லுனர்களே அதைப் பற்றிக் கூற முடியும். இந்த ஆலயத்தின் புராணக் கதையை குறித்து கூறப்படும் அனைத்துமே வாய்மொழிக் கதைகளாகவே வந்துள்ளன. பிரும்மாண்ட  புராணத்தில் ஷேத்திர மகாத்மியம் எனும் பாகத்தில் அப்ரமேயரின் பெருமைகளைப் பற்றி குறிப்பிடப் பட்டு உள்ளதாம்.
 அப்ரமேயர் விஷ்ணு பகவான். ராமரும் விஷ்ணுவின் அவதாரமே என்றாலும் கூட அவர் மனித ரூபத்தில் பிறவி எடுத்து இருந்ததினால் விஷ்ணுவான அப்ரமேயரை வணங்கித் துதிக்க வேண்டி இருந்தது.
அரவிந்தவல்லித் தாயார் 
 
இந்த ஆலயம் இரண்டு அடுக்கு ஆலயங்களாக உள்ளது. ஆலயத்தில் நுழைந்த உடன் எதிரில் தெரிவது அப்ரமேயர் ஆலயம் . அற்புதமான உருவ அமைப்பில் சாலிக்கிராம கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ள மூலவர் தனது கைகளில் சங்கு மற்றும் சக்கராத்தை ஏந்தியும் மீதி உள்ள இரண்டு கைகளை இரண்டு முத்திரைகளைக் காட்டியவாறும் நின்றுள்ள கோலத்தில் காட்சி தருகிறார். ஆனால் அவரைப் போன்ற வடிவமைப்பில் உள்ள உத்சவ மூர்த்தியிலோ அப்ரமேயர் தனது இரண்டு மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.அவர் கொடுக்கும் அருள் அளவில்லாதது என்பதையே அப்ரமேய என்ற வார்த்தையின் அர்த்தம்.
அந்த ஆலய சன்னதியை விட்டு வெளியில் வந்து இடது புறமாக பிராகாரத்தில் பின்புறம் சென்றால் சில படிக்கட்டியில் ஏறிச் சென்று அரவிந்தவல்லித் தாயாரை தரிசிக்க வேண்டும். இங்குள்ள தாயாரைப் பற்றியும்  உள்ள சிறு செய்தி என்ன என்றால், இந்த ஆலயத்தின் வடமேற்குப் பக்கத்தில் இருந்த விஷ்ணு தீர்த்தம் என்ற குளத்தில்தான் தாயார் தோன்றினாராம். அதற்குக் காரணம் ஒரு சாபவிமோசனம் பெறவே இங்கு தாயார் வந்து எழுந்தருள வேண்டி இருந்திருக்கலாம். சாதாரணமாக எங்கேயாவது தெய்வங்கள் தோன்றியதாக இருந்தால் அது சாப விமோசனம் பெறுவதற்காக , எவருடைய வேண்டுகோளையாவது ஏற்று அங்கு காட்சி தந்து ஆலயம் எழுப்பக் காரணம் ஆவது , அல்லது அந்த இடங்களில் பல காலத்துக்கு முன்பே ஆலயங்கள் இருந்து அழிக்கப் பட்டு இருந்திருக்கும். அது பின்னர் தெரிய வந்து அந்தந்த தெய்வங்களுக்கு ஆலயம் எழுந்திருக்கும் போன்ற பல காரணங்கள் பல புராணக் கதைகளில் சொல்லப்பட்டு உள்ளன . ஆகவே விஷ்ணு தீர்த்தத்தில் தாயாரின் சிலை கிடைத்து இருந்ததினால் அவர் அங்கு அவர் தோன்றியதான  ஐதீகம் இருந்திருக்கலாம். அதனால்தான் தாயாரும் அப்ரமேயரான விஷ்ணுவின் பின்புற சன்னதியில் நின்றவாறு உள்ளார்.
நவநீத கிருஷ்ணர் 

அங்கிருந்தே அதே பிராகாரத்தில் சென்றால் எதிர் மூலைப் பகுதியில் உள்ள நவநீத கிருஷ்ணரை தரிசிக்கலாம். இங்கு கிருஷ்ண தவழும் நிலைக்கான தோற்றத்தில், ஒரு குழந்தைப் போலக் காட்சி தருகிறார். குழைந்தப் பேறு அற்றவர்கள் இங்குள்ள சன்னதியில் அவருக்கு அர்ச்சனை செய்து குழந்தைப் பிறந்தால் தொட்டில் போடுவதாக வேண்டிக் கொண்டு செல்வார்கள். குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டிக் கொண்டு இங்கு வந்து சிறு மரக்கட்டையிலான தொட்டிலைக் கட்டுகிறார்கள். இங்குள்ள கிருஷ்ணரின் அழகில் மயங்கி கீர்த்தனை இயற்றினாராம் புரந்தரதாசர். உண்மையில் அந்த கிருஷ்ணரைப் பார்த்தால் மிக அழகான குழந்தை வடிவில் காணப்படுகின்றார், அந்த வடிவம் நம் கண்களிலேயே  நிற்கின்றது.
அந்த பிராகாரத்திலேய தொடர்ந்து நடந்து வந்தால் ராமபிரான் சீதை மற்றும் லஷ்மணரோடு இருப்பதைக் காணலாம். சீதையுடன்  ராமபிரான் அமர்ந்து இருக்க லஷ்மணர் கை கூப்பி அவர்களை வணங்கி நிற்க ஹனுமார் கீழே அமர்ந்து அவர்களை கும்பிட்டவாறு உள்ளார். அப்ரமேயர் ஆலயத்துக்கு செல்பவர்கள் ராமர் சன்னதியையும் தரிசிக்காமல் வந்தால் அது நல்ல பலனைத் தராது, காரணம் விஷ்ணுவை தரிசித்து வணங்கிய ராமரும் விஷ்ணுவின் அவதாரம் என்பதினால் ராம அவதாரத்தில் இருக்கும் தன்னையும் வழிபட வேண்டும் என விஷ்ணு விரும்புவாராம். அந்த சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் வேணுகோபல ஸ்வாமி சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்திக் கொண்டு, இடது கையில் புல்லாங்குழலை வைத்தவாறு காட்சி தருகிறார். அடுத்த சன்னதியில் சுதர்ஷன நரசிம்மரும் காட்சி தருகிறார்.ஒரு விசித்திரமான உண்மை என்ன என்றால், இந்தப் பகுதியை சுற்றி உள்ள ஆலயங்கள் பெரும்பாலானவை நரசிம்மரின் பல அவதாரங்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களாக உள்ளன. ஆகவேதான் விஷ்ணு அவதாரங்களை காட்டும் இந்த பகுதியே வைஷ்ணவ தலம் என்று பெருமைப்படுவதில் என்ன குறைக் காண முடியும்.
இந்த ஆலயம் உள்ள மாலூரைக் குறித்தும் ஒரு அற்புதமான கதை உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு ஒரு பெரிய நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், இந்தப் பகுதியை ஆண்டு வந்த தமிழ் மன்னனை ஒரு யுத்தத்தில்  தோற்கடித்த பகை மன்னன் அவனைக் கொள்ளாமல் கை கால்களை மட்டும் வெட்டி முடமாக்கி விட்டு சென்றுவிட்டானாம். ஆனால் அந்த மன்னன் பெரும் கடவுள் பக்தி கொண்டவன். ஆகவே அவன் மனம் தளராமல் இங்கு பகவான் பாசுரங்களை துதித்தவாறு அந்த நதிக் கரையிலேயே கிடக்க அதிசயமாக அவன் கைகால்கள் மீண்டும் முளைத்தனவாம். ஆகவே  தானியங்கள் முளை விழுந்து வளர்ந்து செடியாவதைப் போல  மீண்டும் அவயங்கள் முளைக்கக் காரணமான அந்த ஊரை முளை வந்த   ஊர் எனக் கூறி முளையூர், முலயூராகி, முளையூர் பேச்சு வாக்கில் மலயூராகி, மாலூராகி உள்ளது.
மிகப் பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டு உள்ள ஆலயத்தின் நுழை வாயிலின் வெளியில் சுமார் முப்பது அடி உயர துஜஸ்தம்பம் காணப்படுகின்றது. ஆலயம் காலை எட்டு முதல் பன்னிரண்டு வரை திறந்துள்ளது என்றாலும் அநேகமாக பன்னிரண்டரை வரை சன்னதிகள் திறந்தே உள்ளன. மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு திறக்கும் ஆலயம் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு மூடப்பட்டு விடுகின்றது. 


ஆலய விலாசம்:
APRAMEYA AND NAVANEETHA KRISHNA TEMPLE,
Channapatna Taluk,
Dodda Mallur,
Bangalore District,
Pin :571501
Telephone: Sri Embar Venu :   09448077348

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E